14. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்

குரல் கேட்டு திரும்பி பார்த்திட்ட சந்தாவிற்கு தூக்கிவாரிப்போட்டது சட்டென…
“நில்லுடி அங்கேயே…”
கோபமாக உரைத்தபடி அங்கே வந்து நின்றாள் செல்வி…
செல்வியின் வார்த்தைகளில் ப்ரசன் கோபமுற்று, “யார் நீங்க?...” என வினவிட,
“ஓஹோ நீ தானா அவன்?...” என கேள்விக்கேட்டுவிட்டு சந்தாவினை வெறுப்பாக பார்த்தாள் செல்வி…
“உனக்கெல்லாம் கொஞ்சம் கூட வெட்கமே கிடையாதாடி?...”
செல்வி தன் வார்த்தைகளால் சந்தாவினைக் காயப்படுத்த முயல,
ப்ரசனோ, “யார் நீங்க?.. முதல்ல இங்க இருந்து கிளம்புங்க… இல்லன்னா நடக்குறதே வேற…” என ஆத்திரத்துடன் அவன் கூறிட, செல்வியோ அவனிடம் சண்டைக்குத் தயாரானாள்…
நடந்த நிகழ்வுகளைப் பார்த்துக்கொண்டிருந்த நைனி வேகமாக உள்ளே ஒடினாள்…
“என்னடா நடக்கும்?... என்ன நடத்த முடியும் உன்னால?... இதோ இவளை இங்க கூட்டிட்டு வந்து நிக்குறீயே?... இதை விட ஒரு கேவலமான விஷயம் உன் வாழ்க்கையிலேயே இல்லன்னு உனக்கு தெரியுமா முதல்ல?...”
“நீங்க ரொம்ப அளவுக்கு மீறி பேசுறீங்க… முதல்ல இந்த இடத்தை விட்டு கிளம்புங்க… இல்ல….” என்றவனின் விரல்கள் கட்டுக்கடங்காமல் அவன் கைக்குள் திணற,
“ஓஹோ… அடிக்கிற அளவுக்கு கோபம் வருதா உனக்கு?... அந்த அளவுக்கு உன்னை மயக்கி வச்சிருக்காளா இவ?...”
வார்த்தைகளை துச்சமென எண்ணி செல்வி உபயோகிக்க, சந்தாவோ தன் காதுகளை பொத்திக்கொண்டு இறுக விழி மூடிக்கொண்டாள் அக்கணமே…
“போங்க வெளியே…..”
செல்வியின் அமிழ வார்த்தைகளையும், சந்தாவின் நிலையையும் பொறுக்கமாட்டாது, ப்ரசன் பெருங்குரலெடுத்து கத்தினான் அந்த இடமே அதிரும்படி…
அந்த அதிர்வில் செல்விக்கு நா வறண்டு விட, ப்ரசனின் விழிகளோ சிவந்து கொதித்துக்கொண்டிருந்தது…
“வெளியே போங்கன்னு சொன்னேன்… இன்னும் ஒரு நிமிஷம் இங்க நின்னீங்க… அவ்வளவுதான்…”
அவனது வார்த்தைகளின் அழுத்தம் செல்வியை தடுமாறவைத்திட,
“போலீஸ்காரி எங்கிட்டயே உன் கோபத்தை காட்டுறீயா?..” என்றாள் சில மணித்துளிகள் கழித்து…
“நீ யாரா இருந்தா என்ன?... என் வீட்டு வாசல்ல நின்னுட்டு என் மருமகளை இன்னும் ஒரு வார்த்தை தப்பா பேசின அப்புறம் உன் மானம் மரியாதைக்கு நியாயம் கேட்டு நீ இன்னொரு போலீஸைத் தேடி போக வேண்டிய நிலைமை வந்துடும்…. ஒழுங்கா வெளியே போயிடு…”
கலைவாணி நைனியை அறையில் படுக்கவைத்துவிட்டு, வேகமாய் வெளியே வந்து செல்வியை பார்த்து ரௌத்திரத்துடன் கூற, அவள் மிரட்சியாய் அவரைப் பார்த்தாள்…
“அம்மா… முதல்ல இவங்களை வெளியே போக சொல்லுங்க…”
ப்ரசன் செல்வியை நோக்கி இரண்டடி எடுத்துவைத்தபடி தாயிடம் ஆத்திரத்துடன் கூற,
“ஏண்டி… நீயெல்லாம் என்னடி ஜென்மம்?... இன்னும் எத்தனை நாள் இப்படி ஒன்னுமே தெரியாதவ மாதிரி நடிச்சிட்டிருப்ப?... அட சீ கையை எடு…” என சந்தாவின் கரங்களை அவள் பிடிக்க முயல,
கலைவாணி குறுக்கே வந்து செல்வியைத் தடுத்தார்…
சந்தா கலங்கிய விழிகளோடு செல்வியைப் பார்த்திட, “சீ… எப்படிடி இப்படி குடும்பத்தையே கைக்குள்ள போட்டு வச்சிருக்குற?... அதுசரி ஆட்களை கைக்குள்ள போடுறது உனக்கொன்னும் புதுசு இல்லையே…..” என செல்வி நஞ்சை தடவி வார்த்தைகளை சந்தாவின் மேல் வீசிட, சந்தா அனலில் இட்ட புழுவாய் துடித்துப்போனாள்…
அவளை விட, செல்வி சொன்ன வார்த்தைகள் ப்ரசனையே அதிகம் வேதனைக்கு உள்ளாக்கியது…
ப்ரசனின் முகவேதனையைக் கண்ட செல்வி, “ஓ… உன்னை சொன்னா இவனுக்கு வலிக்குதா?...” இதுதான் நீ அரவிந்த்க்கு கொடுக்குற மரியாதையா?....” என சந்தாவினைப் பார்த்து கேட்டிட,
அரவிந்த் என்ற பெயரில் சந்தா அப்படியே தொய்ந்தாள்:… கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் அவளுக்கு வழிந்திட,
“சீ… நீலிக்கண்ணீர் வடிக்காதடி… அதான் அவன் செத்துட்டான்னு, அவன் இடத்துக்கு இன்னொருத்தனை கொண்டு வந்துட்டீயே… இதை விட கேவலம் உனக்கு எதுவுமே இல்லடி?...”
செல்வியின் வார்த்தைகளை அதற்கு மேலும் பொறுக்கமாட்டாதவன், செல்வியை நோக்கி கையை உயர்த்த, ஓர் நொடி சந்தாவின் அமைதியான முகம் மனக்கண்ணில் வந்து போக, சட்டென கைகளை தளர்த்தி செல்வியை ஏதோ புழுவை போல் பார்த்திட்டு தாயிடம் வந்தான்…
“அம்மா… இவங்களை போக சொல்லுங்க… இல்ல நானே என் கையால கொன்னுடுவேன்….”
“அடிச்சிடுவியாடா நீ?.. எங்க அடிடா பார்ப்போம்….” என ப்ரசனிடம் சண்டைக்கு சென்றவள், சந்தாவின் பக்கம் திரும்பி, “என் தம்பி பாவம் உன்னை சும்மாவே விடாதுடி… பாவி சண்டாளி… என் தம்பியை கொன்னுட்டு இங்க நீ சந்தோஷமா இருந்துடுவீயா?... பார்க்குறேண்டி… நீ எப்படி வாழுறேன்னு பார்க்குறேண்டி…” என கூறிவிட்டு,
“என் தம்பி மட்டும் இப்ப உயிரோட இருந்துருந்தா, அடிக்க ஓங்கின உன் கையை உடைச்சிருப்பாண்டா…” என்றவள் வேகமாக இரண்டடி வைத்துவிட்டு, பின் ப்ரசனின் அருகே வந்து,
“நீ இவ்வளவு தூரம் அடிக்க கை ஓங்குறீயே… அந்த அளவுக்கு முதல்ல அவ இருக்காளான்னு நீ யோசிச்சுப் பார்த்தீயாடா?... நீ நினைக்குற மாதிரி அவ ஒன்னும் உத்தமி…..”
சொல்லிக்கூட முடிக்கவில்லை கலைவாணியின் கரங்கள் செல்வியின் கன்னத்தில் பளாரென்று பதிந்தது சட்டென…
திகைத்துப்போனவளாய், செல்வி தன் கன்னத்தினைப் பிடித்துக்கொண்டு நிற்க,
“வெளியே போடீ… யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொன்ன?... ஒழுங்கா வெளியே போயிடு…”
கலைவாணி விரல்நீட்டி அவளை உக்கிரத்துடன் எச்சரிக்க, வேகமாக அங்கிருந்து வாசலை நோக்கி சென்றாள் செல்வி…
“நீங்க இந்த அளவுக்கு தலை மேல தூக்கி வச்சுக்கொண்டாடுற இவ ஒரு விதவை…. என் தம்பியைக்கொன்ன படுபாதகி…”
சந்தாவினை துச்சமென மதித்து கூறிவிட்டு அவள் அகல, சந்தாவோ அப்படியே தரையில் சரிந்தாள் வேகமாய்…
எழில் பூக்கும்...!
{kunena_discuss:1122}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.