தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 04 - மீரா ராம்
ஓரிரு நிமிடங்கள் பார்வையில் மனதை கொள்ளை கொன்றிட முடியுமா?... ஒரு சில விநாடிகளில் இதயம் இடம் மாறி சென்றிட முடியுமா?...
இதயங்கள் ஒன்றோடொன்று இடம் பெயர, நாட்கள் வருடங்கள் தேவையில்லை… மனதை சட்டென ஒருவரிடத்தில் இழப்பதும் சாத்தியங்களே அதுவும் சில நொடிப்பொழுதில்…
கௌஷிக்கிற்கும் அதே தான் நிகழ்ந்திருந்தது… எனினும் அவனால் அதனை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை…
அவனது இந்த 25 வருட வாழ்க்கைப் பயணத்தில் அவன் பெண்களை சந்திக்காதவனும் அல்ல… எனினும் கல்லூரியிலும் சரி, வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் அவனது தொழிலிலும் சரி, அவனுக்கும் சிலர் பரிட்சயம் தான் தெரிந்தவர்கள் என்ற ரீதியில்…
ஆனாலும் யாருடனும் நெருங்கி பழகியதில்லை… தன்னை நெருங்க முற்பட்டவர்களையும் அவன் தன் நடவடிக்கையில் தூர நிறுத்தினான்…
கௌஷிக்…. அவன் பெயருக்கு பின் அவன் பெற்ற வெற்றிகள் எவ்வளவு இருக்கிறதோ அதைவிட, அவன் மற்றவரிகளிடம் பழகும் விதமே அவனுக்கு முன் அவ்விடத்தை நிரப்பும்…
பெண்கள் என்றால் காத தூரம் ஒடி ஒளியும் ஆண் அல்ல அவன்… எனினும் அவர்களை, தான் வகுத்திருக்கும் ஓர் எல்லைக்குள் அவன் என்றுமே நுழைய அனுமதித்ததில்லை…
அத்தனையும் இன்று ஒரு சில விநாடிகளில் தகர்ந்தேவிட்டதே… எப்படி இது சாத்தியம்?... அவன் தனக்குள் யோசித்துக்கொண்டே இருந்த வேளை, தன் கைப்பேசியின் அதிர்வு அவனை நனவுலகுக்கு இழுத்து வந்தது என்றால் அவன் கேட்ட கேள்வி அவனை தூக்கிவாரி போட செய்தது…
“சார்… புரோகிராம் முடிஞ்சது… நீங்க வரீங்களா?...”
கணேஷின் வார்த்தைகள் அவன் செவியில் விழுந்தும், அவனால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை…
2 மணி நேரம்…. முழுதாக 120 நிமிடங்கள் சென்ற மாயம் அவன் அறிந்திடவில்லை இந்த நொடி வரை… அதுவும் ஒரு பெண்ணின் நினைவு மட்டுமே தன்னிடத்தில் அத்தனை மணி நேரம் ஆக்கிரமித்திருந்தது என்பதை அவனால் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை…
“சார்… வரீங்களா?... ஹலோ…”
கணேஷின் வார்த்தைகள் திரும்ப திரும்ப ஒலிக்க,
“வரேன்…” என்ற சொல்லுடன் கைப்பேசியை அணைத்து இருக்கையில் போட்டு விட்டு காரை விட்டு இறங்கினான் உடனேயே…
வந்தவர்கள் ஓரளவு சென்றிருக்க, மீதம் கொஞ்ச நபர்களே இருக்க, வேகமாக உள்ளே சென்றான்…
உள்ளே செல்ல முயன்ற அந்த நொடியிலும் அவன் மனது, இவ்வளவு தன்னை நிறைத்திருந்த அவளை நினைக்க்த்தான் செய்தது…
“அவளும் இங்கே இருப்பாளோ?....”
மனமானது அவனிடத்தில் கேள்வி கேட்க, அதனை அலட்சியப்படுத்தியவனாய், தாயின் அருகே வந்து அவரை அழைத்துக்கொண்டு விருட்டென வீடு திரும்பினான் அக்கணமே…
கல்யாணியின் மனதிலோ நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஒரு அமைதியும் சந்தோஷமும் நிறைந்திருந்தது…
வீட்டினை அடைந்ததும், அறைக்குள் நுழைந்து கொண்டான் கௌஷிக் தாயிடம் எதையும் பேசாமல்…
மகனின் முகத்திலிருந்த ஏதோ இன்று அவரை யோசிக்க வைத்திட, கச்சேரி சென்று வந்ததின் பிரதிபலிப்பாக இருக்குமோ என மனமானது ஒருபுறம் எண்ண, மறுபுறமோ, அதுவாக இருந்திடாது என உரைத்தது….
சரி நாளைக்குப் பேசிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அவர் உறங்கச்சென்றிட, நித்திரையானது அவரை தாலாட்டி உறங்க வைத்தது உடனேயே…
நெடுநாள் ஆசை ஒன்று நிறைவேறியதின் விளைவாக, அதுநாள் வரை உறக்கம் கொள்ளாது தவித்திருந்த மனமானது சட்டென துயில் கொள்ள விழைய, அவரும் உறங்கி போனார்…
மாறாக அறைக்குள் நுழைந்த கௌஷிக்கிற்கோ உறக்கம் ஏதோ எட்டாக்கனியாக இருந்தது… எவ்வளவோ முயற்சி செய்தும் அவனால் ஏனோ நித்திரையினை மட்டும் பறித்திடமுடியவில்லை… அது வெகு தொலைவிலிருந்து அவனுக்கு போக்குக்காட்டிக்கொண்டே இருந்திட, ஆத்திரத்துடன் கட்டிலில் விழுந்தான் அவன் வேகமாக…
அதே நேரம்,
கட்டிலில் படுத்தவண்ணம் விட்டத்தையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள் சாரு…
சில நிமிட பார்வைகளால் ஒருவன் தன் மனதில் இடம்பெற முடியுமா?... எனினும் அவளுக்கு அவனை விட்டு பார்வையை அகற்றுவது மிகக்கடினமானதாகத்தான் இருந்தது அந்நேரத்தில்…
நல்லவேளையாக தீபன் அருகில் இருந்தபடி அவளை இழுத்துச் சென்றான்… இல்லையேல், தானும் அங்கிருந்து அந்த ஆணைத்தான் பார்த்துக்கொண்டே இருந்திருப்போம் என்ற உண்மை அவளுக்கு விளங்கிட,
“என்ன இது… நான் ஏன் இப்படி தடுமாறுறேன்?...”
அவள் குழம்பி போனவளாய் புரண்டு புரண்டு படுத்திட்டது தான் மிச்சம்… எனினும் சொற்ப நேரம் கூட அவளுக்கு உறக்கம் வரவில்லை…
இருவரும் ஒருவரிடத்தில் ஒருவர் தங்களை தொலைத்துவிட்டு, அறையில் உறக்கத்தினைத் தேடிக்கொண்டிருந்தனர் வலுக்கட்டாயமாக… எனினும் அது அவர்கள் வசம் சிக்கினால் தானே…