20. துடிக்கும் இதயம் உனதே உனது!!! - மது
உலகிலேயே பெரிய இதயம் கொண்டது திமிங்கிலம் ஆகும். இதன் இதயம் ஓர் நானோ காரின் அளவு பெரியது
வர்ஷினியை விழாவுக்கு அழைத்து வரும்படி வேண்டி வருண் கிளம்பிச் சென்ற பின் கணேஷ் ராம் அந்த ஹாலில் மாட்டியிருந்த புகைப்பாடங்களை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தான்.
நேரம் சென்று கொண்டிருக்க வர்ஷினி கீழே இறங்கி வரும் சுவடே இல்லை.
மெல்ல மாடியை நோக்கிப் படிகளில் ஏறினான் கணேஷ்.
ஒரு வருடம்!!! நீண்டதொரு வருடம்!!! யுகமாய் கழிந்த ஓர் வருடம்!!! புரியாத புதிராய் பறந்து சென்ற ஓர் வருடம்!!!
கிட்டதட்ட ஓர் வருடம் முன்பு கணேஷ் சென்ற அந்த மூன்று மாத மெடிகல் காம்பில் வர்ஷினியிடம் இருந்து ஏதேனும் மெயில் வந்திருக்கிறதா என்று தொடர்ந்து எதிர்ப்பார்த்து ஏமாற்றமே கொண்டான்.
ஆனாலும் வர்ஷினி ப்ராஜெக்ட் வேலைகளில் பிசியாக இருப்பாள் என்று சமாதானம் செய்து கொண்டான்.
மெடிகல் காம்ப்பில் இருந்த வேலை, அங்கே மேற்கொண்ட மருத்துவப் பணி அவனது சொந்த வாழ்வினைப் பற்றிய நினைவுகளை பின்னிருக்க செய்தது.
மூன்று மாத முடிவில் நியூயார்க்கில் கால் பதித்ததுமே அர்ஷு என்ற முகவரியில் இருந்து அவனுக்கு மின்னஞ்சல் வந்து சேர்ந்தது.
அவன் விமானத்தில் இருந்து தரை இறங்கி இருந்தான். இருப்பினும் விண்ணிலே பறந்து கொண்டிருந்தான். உயர உயர பறந்து கொண்டிருந்தான். இன்னும் சில வினாடிகளில் அந்த உயரத்தில் இருந்து ஒரேடியாக கீழே விழப் போகிறோம் என்று அறியாமலே.
தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு டாக்சி பிடித்து அமர்ந்து மெயிலை திறந்து பார்த்து மெல்ல படிக்கலானான்.
டியர் ராம்,
முதலில் என்னை மன்னித்து விடுங்கள். நான் மிகப் பெரிய தவறு செய்து விட்டேன். மேலும் மேலும் அதே தவறினை செய்ய வேண்டாம் என்று உறுதி கொண்டே இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
உங்கள் மேல் நான் கொண்டிருந்தது காதல் இல்லை என்று உணர்த்தி விட்டது இந்தப் பிரிவு. சிறுவயதில் இருந்தே செல்லமாக வளர்க்கப்பட்டேன். யாருமே என்னை ஒரு போதும் அதட்டியதில்லை. அன்று நயாகரா பால்ஸ்ஸில் நீங்கள் என்னை அதட்டியது வித்தியாசமான ஓர் வகையில் என்னை ஈர்த்தது. மேலும் உங்கள் கவர்ச்சியான தோற்றம் மற்றும் இளவயதிலே சாதித்தது என்று பல விஷயங்கள் அந்த ஈர்ப்பு வலுக்க காரணம் ஆகியிருந்தன.
அன்று நீங்கள் அழைத்துச் சென்ற பார்ட்டி.. பார்ட்டி என்று சொல்ல முடியாது. மெடிகல் கான்பரன்ஸ். அங்கு தான் ஓர் விஷயத்தை முழுமையாக உணர்ந்தேன். எனக்கு சலிப்பாக இருந்தது. அதனாலேயே அங்கிருந்து நான் கிளம்பி விட்டிருந்தேன்.
பின்பு நிறைய யோசித்துப் பார்த்ததில் ஒன்று மிகத் தெளிவாக புரிந்தது. உங்கள் மேல் நான் கொண்டிருந்தது காதல் இல்லை. வெறும் ஈர்ப்பு தான். உங்கள் வாழ்நாள் முழுவதிற்கும் நான் உற்ற துணையாக உங்கள் செயல்கள் யாவிலும் கைகொடுக்கும் சகியாக என்னால் வர இயலாது என்று தெளிந்தேன்.
டாக்டர் நீங்கள் ஓர் ஜென்டில்மேன். என்னை மன்னித்து விடுங்கள். மேலும் என்னை பற்றி யாரிடமும் விசாரிக்க வேண்டாம். என்னை தேடவும் வேண்டாம். அது எனக்கு வருங்காலத்தில் சங்கடங்களை ஏற்படுத்தலாம்.
டேக் கேர் டாக்டர். பை
அர்ஷு.
மின்னஞ்சலைப் படித்ததும் கணேஷின் உதடுகள் அர்ஷுமா என்று மெல்ல முணுமுணுத்தன.
“இவ்வளவு நீண்ட லெட்டர் எழுதியவள் வர்ஷினி என்று கையெழுத்து இடமால் அர்ஷு என்று கையெழுத்து போட்டிருக்கிறாள். முட்டாள் பெண்ணே! இதை நம்பி விடுவேன் என்று நினைத்து விட்டாயே! அர்ஷுமா!!!” என்று அவன் மனம் தவித்தது.
அப்படி என்னிடம் கூட சொல்ல முடியாமல் என்னை பிரிந்து செல்ல வேண்டிய சூழ்நிலை என்ன? என்று மீண்டும் மீண்டும் அதே நினைவாய் இருந்தான்.
அவன் நினைத்திருந்தால் அவளை சுலபமாக கண்டுபிடித்து இருக்கலாம். ஆனால் ஏதோ ஓர் இக்கட்டில் அவள் தன்னை தேட வேண்டாம் யாரிடமும் விசாரிக்க வேண்டாம் என்று எழுதியிருந்ததை அவன் மதித்தான்.
அவளைப் பற்றி, அவர்கள் காதல் பற்றி யாரிடமும் அவன் எதையுமே தெரிவிக்கவில்லை.
தனிமையில் மனம் நிலைகொள்ளாமல் தவிக்க அங்கிருந்த ப்ராக்டீஸ் அனைத்தையும் விட்டுவிட்டு நாடு திரும்பினான்.
பெற்றோரிடமும் எதையும் கேட்க வேண்டாம் என்று வேண்டினான்.
தன்னவளை, தன்னவளின் நினைவுகளை இதயத்தில் பொத்தி வைத்து அந்த சுகத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தான்.