தொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 07 - மீரா ராம்
“சாரு… என்ன பண்ணுற?....”
காரில் அமர்ந்திருந்த சாருவினை முறைத்தபடி கேட்டுக்கொண்டிருந்தான் தீபன்…
“தீபா… இப்போ நான் வரணுமாடா?...”
அவள் தயங்கியபடி கேட்டிட,
“ஹேய்… அடி வாங்கப் போறடி நீ….”
முறைத்துக்கொண்டே சொல்லியவன், அவள் கைப்பிடித்து இழுத்தான் கிட்டத்தட்ட காரிலிருந்து இறக்கும் முயற்சியில்…
“டேய்… டேய்… விடுடா…”
திமிறியவளின் பேச்சைக் கருத்திலேயே ஏற்றாது, அவளோடு அந்த இடத்திற்குள் நுழைந்தான் தீபன்…
அந்த இடமே பரபரப்பாக இருந்திட, சாருவின் விழிகளிலோ ஒரு தேடுதல் தென்பட்டது அவளது பயத்தினையும் மீறி…
“டேய்… தீபா… வர்ற நேரமாடா இது?...”
விக்கி கோபமும் புன்னகையுமாய் தீபனை வரவேற்றிட்டான்…
“நான் என்னடா பண்ணுறது?... டிராபிக் வேற….”
தீபன் சமாளித்தபடி, சுற்றி முற்றி பார்த்திட, விக்கியோ தன் வேலைகளில் பரபரப்பாக இருந்தான்…
“ஏன் விக்கி… இன்னும் யாரும் வரலையா?...”
மெல்ல பேச்சை ஆரம்பித்தான் தீபன்…
“ஆமாடா… அவங்களுக்காகத்தான் வெயிட்டிங்க்….” என்றவன் நினைவு வந்தவனாக,
“டேய்… அக்காவ எங்கடா?...” என்றான் கோபமே உருவாக…
அப்பொழுதுதான் தமக்கையின் நினைவு வர, தீபன் தான் வந்த வழி சென்று பார்த்திட, வாசலின் அருகிலேயே தயங்கி நின்று கொண்டிருந்தாள் சாரு…
“உன்னை….” என்றபடி அவளருகில் சென்றவன், “மானத்தை வாங்காம வா சாரு…” என இழுத்தபடி விக்கியின் அருகில் செல்ல,
“வாங்கக்கா..” என வரவேற்றான் விக்கி… பதிலுக்கு சிநேகமாய் புன்னகத்தவளின் முகத்தில் இருந்த அந்த சிறு பயத்தினைக் கண்டு கொண்டான் தீபனும்…
“இங்க பாரு சாரு… நீ இப்போ அட் ஷூட்டிங் பார்க்க தான் வந்திருக்க… சரியா?... அதனால இந்த பயத்தை எல்லாம் தூர வச்சிட்டு நார்மலா இருக்கப்பாரு…”
தீபன் இலகுவாக சொல்லிவிட்டு விக்கியிடம் திரும்ப, சாருவோ ஒரு ஓரமாய் சென்று அமர்ந்து கொண்டாள்…
“விக்கி… ஷூட்டிங்க் இன்னைக்கே முடிஞ்சிடும்லடா?...”
“ஆமாடா… பட் இந்த அட் இன்னைக்கு டேட்ல ப்ளான் பண்ணுறதுக்குள்ள தான் நிறைய ப்ராப்ளமே வந்துச்சு…”
“என்னடா ப்ராப்ளம்?....”
“அது என்னன்னா?....” விக்கி சொல்ல முனைவதற்குள், அவனுடைய அசிஸ்டெண்ட் வந்து, எல்லோரும் வந்து கொண்டிருக்கிறார்கள் என கூற, விக்கி மேலும் பரபரப்பாக மாறிய வேளை, லேசான பதட்டமும் அவனிடம் ஒட்டிக்கொள்ள, தீபன் விக்கியின் தோள் தட்டி தைரியம் கொடுத்து அனுப்பி வைத்திட, விக்கியும் புன்னகையுடன் தன் குழுவுடன் இணைந்து பணியாற்ற சென்ற வேளை, தீபன் சாருவின் பக்கம் சென்று அவளருகில் அமர்ந்தான்…
சாரு அமைதியாக இருப்பதை பார்த்துவிட்டு, ஒரு புன்சிரிப்புடன் அமர்ந்திருந்த தீபனின் பார்வைக்குள் விக்கியின் பதட்டமான முகம் தென்பட, என்னாயிற்று என்ற யோசனைக்குள் அவன் விழுந்து எழுந்த வேளை, அங்கே அனைத்தும் முடிந்து போயிருந்தது…
விக்கி கோபமாக தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்க, அவனிடம் போக எண்ணி தீபனும் விக்கியின் பக்கம் செல்ல எத்தனித்த வேளை,
“வாட் ஹேப்பன்ட் விக்கி?...” என்றவாறு கௌஷிக் அங்கே இருந்திட, தீபனும் கௌஷிக்கினை வியப்புடன் பார்த்தபடி, விக்கியிடம் வினவ,
“சாரி சார்… என்னால உங்களுக்கு ஏற்பட்ட இந்த ப்ராப்ளத்துக்கு முதல்ல நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்…”
விக்கி தன் மனதார மன்னிப்பினை வேண்ட, கௌஷிக்கோ அவனை தடுத்தான்… அவனிடம் காணப்பட்ட பயத்தினை ஒதுக்கி அவனிடம் நடந்ததைக் கேட்டறிந்தான்…
அந்த அட் –ல் நடிக்க ஒப்புக்கொண்ட பெண் தற்போது மாடலிங்க் துறையில் நம்பர் 1 இடத்தில் இருப்பவள்… அதுமட்டுமல்லாது அவள் விக்கிக்கு பரீட்சயமானவளும் கூட…
பின்னே என்ன பிரச்சினை என எண்ணங்கள் உதிக்கிறதா?... இருவருக்கும் ஒருவரை ஒருவர் தெரிந்திருப்பது தான் பிரச்சினையே…
விக்கிக்கு டைரக்ஷன் தான் லட்சியம்… அதற்காக வாய்ப்புத் தேடி அலைந்து கொண்டிருக்கும் அவன் ஒருநாள் மாடலிங்க் செய்து கொண்டிருக்கும் அனிதாவை சந்திக்க நேரிட, இருவருக்கும் இடையே ஒரு மெலிதான நட்பு மலர ஆரம்பித்தது… அந்த நட்புக்குள் விரிசல் ஒன்று சிறிதாக ஆரம்பித்த போதே அதை சரி செய்திருந்தால், இன்று இத்தனை பிரச்சினையும் வந்திருக்காதோ என்னவோ?...