தொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 04 - புவனேஸ்வரி
மித்ரனே,
பகிர்தலின் மறு விளக்கமே நட்பு!
மரணம் என்றால் சேர்ந்தே மடிவோம்,
ஜனனம் என்றாலும் சேர்ந்தே பிறப்பெடுப்போம்,
என் நிழலென நீயும்,
உன் நிஜமென நானும்,
இணைந்து வாழ்ந்திட,
இமைக்க மறந்தது நட்பாகட்டும்!
“என்னங்கடா தமிழ்லதானே கேள்வி கேட்குறேன்.. அதுக்கு ஏன் பெக்க பெக்கனு விழிக்கிறிங்க?” என்றாள் லீலா. கார்முகிலன்,பிரபஞ்சன், கதிரவன் மூவருமே அவளது கேள்வியில் வாயடைத்து நிற்க சூழ்நிலையை உணர்ந்து முதலில் சுதாரித்தவன் பிரபாதான்.சட்டென தன் நண்பர்கள் பக்கமாக திரும்பி,
“அதானே? ஏன்டா நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துல வர ப்ரண்ட்ஸ் மாதிரியே முழிக்கிறீங்க?” என்றான்.
“ஹெலோ அவங்க ப்ரண்ட்ஸ்னா, சாருக்கு என்ன விஜய் சேதுபதுனு நெனப்போ?” என கிண்டலாக கேட்டாள் லீலா. கட்டமஸ்தான உடல்வாகு, மாநிறத்தையும்மிஞ்சிய அடர்வண்ணம்,நேர்த்தியான மீசை காந்த கண்கள் என விஜய்சேதுபதி மாதிரியே இல்லை என்றாலும் அவர் எதிர்வீட்டு பையன் மாதிரிதான் இருந்தான் பிரபஞ்சன். (எதிர்வீட்டு பையன் யாருனு கேட்காதீங்க.. எனக்கும் தெரியாது)
“ச்ச.. ச்ச.. நான் தான் இந்த கதைக்கே டைரக்டரு” என்று கோளரை தூக்கி விட்டவன்,
“அது வந்து, இவ்வளவு நாள் நாங்க மூணு பேரு மட்டுமே சேர்ந்து இருந்தோம்.. சோ பசங்க இருக்குற வீடு எப்ப்டி இருக்குமோ அப்படியே இருந்துச்சு.. இனி நீயும் இங்கதானே இருக்கப்போற? அதான் கொஞ்சம் மாற்றம் கொண்டு வரலாம்னு ரெடி பண்ணப்போ இந்த குரங்குங்க பண்ண அலப்பரைல அந்த ப்ரேம் கண்ணாடி லைட்டா உடைஞ்சிருச்சு,,வீட்டுல நடுநாயகமா வெச்சிருந்தது உடையவும்,அதை ரெடி பண்ணிட்டு ஃபிக்ஷ் பண்ணலானு நினைச்சோம்..உனக்கு இப்பவும் டவுட்டுனா சொல்லு, நான் அதை எடுத்துட்டு வரேன்..”
“பரவால.. உங்க பேச்ச நான் நம்புறேன்..” என்று மீண்டும் பன்மைக்கு தாவி இருந்தாள் லீலா.
“ஆமா,அப்பொ நான் இனிஇங்கதான் இருக்க போறேன்னு ஒத்துக்கிட்டீங்களா?” என்று அடுத்த கேள்வியை தொடுத்தவளை சோர்வாக பார்த்தான் கார்கி.
“லீலா ..இஃப் யூ டோண்ட் மைண்ட் மிச்சத்தை நாளைக்கு பேசிக்கலாமா?”
“ஆமா ஆமா ஏற்கனவே மூணு எபிசோட் ஓடிருச்சு” என்ற முணுமுணுத்தான் கதிரவன்.
“ ஹாங்?என்னது?” என்று லீலா கேட்கவும்,
“இல்ல நீ கேள்வி கேட்ட டைம்ல நான் மூணு எபிசோட் கதையே எழுதிருப்பேன்னு சொன்னேன்”
“ஆமா..பேய கூட சமாளிக்” என்று ஆரம்பித்த கார்கி மற்ற இருவரும் முறைக்கவும் வாயை மூடிக் கொண்டான்.
“பேயா? என்ன பேய்?”
“அதுவா பிரபா நைட்டு பாதி தூக்கத்துல திடீர்னு சிரிப்பான்..அததான் சொன்னோம்” என்று கதிரவன் சமாளித்தான்..
“ம்ம் எனக்கும் ரொம்ப மயக்கமா இருக்கு.. மார்னிங் பேசிக்கலாம் குட் நைட்” என்று அவள் பதிலளிக்க, பிரபஞ்சன் அவளை இமைக்காமல் பார்த்தான். அவன் ஏதோ சொல்ல வருவதை உணர்ந்துகொண்டாள் லீலா.
“என்ன?” என்று அவள் ஒற்றை புருவத்தை உயர்த்தி கேள்வி கேட்கவும், மற்ற இருவரும் அதேகேள்வியுடன் இருவரையும் பார்க்கத் தொடங்கினார்கள்.
“அது.. உன் பேரு என்ன இவ்வளவு சின்னதா இருக்கு? முழு பேரு சொல்லு” என்றான் பிரபஞ்சன்.
“பிரசன்னலீலா.. எல்லாரும் லீலானுதான் கூப்பிடுவாங்க.. பிரசன்னானு கூப்பிடாதீங்க.. எனக்கு புடிக்காது” என்று எச்சரித்தாள் லீலா.
“அப்போ உன்னை என்னனு கூப்பிட?”
“லீலானுதான்..”
“அது என்னால முடியாது,..”
“ஏன்?”
“குட் நைட்..” என்று பிரபஞ்சன் நடக்க கதிரும்,கார்கியுமே யோசனையாக அவனைப் பார்த்தனர். அவர்களிடன் என்னவென்று கேட்க நினைத்த லீலா, “இவனுங்களுக்கும் ஒன்னும் தெரியல போலயே” என்று நினைத்தாள்.
“கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டீங்களா பிரபஞ்சன்?” நேரடியாகவே அவனைக் அவள் கேட்க,லீலா,கதிரவன், கார்முகிலன் மூவரையும் உணர்ச்சி துடைத்த பாவனையுடன் பார்த்தான் பிரபா. மூவரின் முகத்திலும் பிடிவாதமே மேலோங்கிட,
“அது என் அம்மாவோட பேரு.. என்னால உன்னை அப்படி கூப்பிட முடியாது.. நீ சொன்னமாதிரி பிரசன்னாவுனும் கூப்பிடல.. நாளைக்கு உனக்கொரு நிக்னேம்மோட வரேன்.. குட் நைட்” என்றுவிட்டு சென்றான் பிரபா.