தொடர்கதை - மறைந்துவிடாதே மாயா – 21 - லதா சரவணன்
மாயாவா ... கமல் இது...சுப்ரியா
அப்படித்தான் எல்லாரும் நினைத்திருந்தீர்கள் இது என் மாயா
ம்...பரவாயில்லை, கமல் உங்களுக்கு நினைவிருக்கா என்னன்னு எனக்குத் தெரியலை, ஆனா பாட்டிகாலத்து கதைகளில் எங்கேயோ நாலுகடல் ஏழுமலைகளுக்கு அப்பால் காதலியை ஒளித்து வைத்திருந்தாலும் ஹீரோ கண்டுபிடித்துவிடுவார் அதுமாதிரி எத்தனை தூரம் கொண்டு போன பிறகும் நீங்க மாயாவைக் கண்டுபிடிச்சிட்டிங்க ஆனா பாவம் பாருங்க அவ இன்னைக்கு கண்ணைத் தொறக்காமேயே இருந்திருந்தா ரொம்ப நல்லாயிருந்திருக்கும் இப்போ அநாவசியா கண்ணைத்தொறந்து உங்களையும் சிக்கல்லே மாட்டிவிட்டுட்டா ?!
நீ சொல்றது எனக்கு புரியலை வினிதா என்னே ஏதோ மாதிரி பேசுறே ?
நிஜம் பேசறேன் புரியலை இல்லை? வினிதாவின் பின்னே கதவைச் சாத்தியபடி இரண்டு பேர் உள்ளே நுழைந்தார்கள் அவர்கள் கைகளில் லட்சணா மயங்கிய நிலையில் ?!
வினிதா யாரு இவங்க எல்லாம் கமல் பாய முயலும் போதே நாற்காலியில் இணைத்துக் கட்டப்பட்டு திமிறியதற்காக இரண்டு அறைகளோடு ரத்தகோடு வாங்கி வினிதாவை கோப விழிகளோடு பார்த்தான்.
ம்...நல்லா டைட்டா கட்டுங்கப்பா ஆளா கொஞ்சம் ஸ்ராட்ங்தான் எழுந்திடப்போறான். அலட்டிக்காதே கமல் நடப்பதை மாற்றிட யாராலும் முடியாது உங்க உதவியும் வர்ற யாரும் இப்போ இங்கே இல்லை அவங்க வர்றதுக்குள்ளே நான் என் வேலையை முடிச்சிடுவேன். ஆ... என்னாச்சுன்னு கேட்டே இல்லை எனக்கும் எல்லாத்தையும் யார்கிட்டேயாவது சொல்லணுமின்னு தோணும் எத்தனை தடவை நல்ல ஐடியா போட்டதுக்காக எட்டாத என் முதுகை நானே தட்டிக் கொடுத்துக்கிறது. நானெல்லாம் இதோ படுத்திருக்காளே உன் காதலி மாயா இவளை விட வசதியா வாழ வேண்டியவ ? எனக்கென்ன குறை கமல் நான் அழகா கவர்ச்சியா இல்லை நானென்லெல்லாம் உன் கண்ணுலே படலையில்லை, மாயாவின் விழாவிற்கு வந்தப்போ உன் பக்கத்து சீட்டுலே இருந்து நான் உன்னையே தான் பார்த்துட்டு இருந்தேன். ஆனா நீ ..... இவளையே பார்த்திட்டு இருந்தே. பிறந்தப்போ வளர்ந்தப்போ வறுமையோடயே இருந்தா அதேபோல சாகவரைக்கும் வறுமையிலேயே வாழணுமா என்ன ? நான் என் விதியை மாத்திக்க நினைச்சேன். எங்கெங்கோ அலைஞ்ச பிறகு மாயாவோட அறிமுகம் கிடைச்சது. யாருமில்லாத அநாதை அன்புங்கிற கயிறுக்க ஈஸியா அடிமையாகிவிடுவான்னு பார்த்தா ?! எத்தனை நெருங்கினாலும் ஒரு வட்டத்துக்கு மேல அவ என்னை சேர்த்துக்கலை அதுக்கு காரணம் தான் பெரிய நாட்டியக்காரின்னு அவளுக்கு திமிரு. அது எனக்குப் பிடிக்கலை, நீராஜாவைத் தூண்டி விட்டு அவளை நசுக்கப் பார்த்தேன் அதுவும் நடக்கலை. சரி சந்துரு மூலமா இந்த சொத்தை அடையளான்னு அவனுக்கும் வலை விரித்தேன். ராஸ்கல் அவன் மொகறைக்கு எத்தனை பொண்ணு ! இப்போ கூட விமலாவோ விஜயாவோன்னு எதையோ பிடிச்சிக்கிணு அலையறான் சரி அது நம்ம மேட்டர் இல்லை முதல்ல உன் மேல எனக்கு பயங்கர கோபம் ஏன்டா உங்களுக்கு எல்லாம் எங்களை மாதிரி பொண்ணுங்க கண்ணுக்கு தெரியாதா ?
இரண்டு ஆட்டம் ஆடி கொஞ்சம் பேரு வாங்கிட்டா மாயா என்ன தேவலோகத்தில் இருந்தா குதிச்சிட்டா ? பின்னாடியே அந்த சுத்து சுத்துனே ! அதுவும் என் கண்முன்னாடியே அதெப்படி எனக்கு கிடைக்காத சந்தோஷம் அவளுக்கு மட்டும் கிடைக்கலாம். விடுவேனா.... சந்துரு சரிப்பட்டு வரமாட்டான்னு முடிவு பண்ண உடனேயே நானே களத்தில் இறங்கிட்டேன். டிரைவர் மணிக்கு மாயா மேல உள்ள பழியை மனசில வைத்து அவன் மூலமா அவளைத் தீர்த்துடலான்னு முடிவு பண்ணினேன். பாவிப்பய கடைசி நேரத்திலே கவுத்துட்டான். எத்தனை முயற்சிகள் தெரியுமா வரிசையா எல்லாம் தோல்வி, அதிலும் பெங்களூருக்கு விழாவிற்கு கிளம்பும் முன்னர் மாயாவின் முகத்தில் அந்த சந்தோஷத்தைப் பார்க்கும் அப்பவே அவளைக் கொல்லனுமின்னு தோணுச்சி, ஆனா நேரடியா அவளைக் கொன்னு நான் ஜெயிலுக்குப்போகத் தயாரா இல்லை அதனால அழகா ஒரு திட்டம் போட்டேன். உன்னோட வெளிநாட்டுப் பயணம் அதற்கு உறுதுணையா அமைந்தது?! யாருன்னு தெரியுமா மாயாவோட உருவத்திலே இருந்த சுப்ரியா ?! அது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் சொல்லட்டா ? வினிதா விகாரமாய் உதடுகளைச் சுழித்தாள்.
செங்கல் பெயர்ந்து இருந்த அந்தக்கட்டிடத்தின் தற்போதே மண்டகப்படி நடந்த அவன் உதடு வீங்கி ஆங்காங்கே ரத்தத்திட்டுக்களைச் சுமந்திருந்தான். இவன் பேரு ராஜ்வீர் வட இந்தியாவில் ஒரு வட்டி வியாபாரி. இவனுக்கும் உங்க கேஸிக்கும் சம்பந்தம் இருக்கு வீரா ! அவனோட ஸ்டேட்மெண்டுகளை ரெக்கார்ட் பண்ணியிருக்கேன் கேளுங்க ஆய்வாளர் ஒரு டேப்பை சுழலவிட்டார்.
எனக்கு சுப்ரியா மேல ஒரு கண்ணு. உடம்பை வித்தாலும் மனசால சுத்தமான பொண்ணு பெண்கள்ன்னால கொஞ்சம் சபலப்படற எனக்கு சுப்ரியா மேல அடங்காத வெறின்னு கூட சொல்லலாம். ஆனா அவ காசு நகை இடம்ன்னு எதுக்கும் ஆசைப்படமாட்டா, என்னோட குஜராத் வந்துடுன்னு நான் நிறைய தடவை கூப்பிட்டேன் ஆனா அவ வரலை, மாசத்துக்கு ஒருதடவை அவளைப் பார்க்கலைன்னா என்னால தாங்க முடியாது அப்படி ஒருநாள் நான் வந்தப்போ அவ வீட்டுல ஒருத்தன் ரவின்னு பேரு என்னை அடிச்சிட்டான். சுப்ரியாவும் ஏன்னு கேட்கலை நேரம் கிடைக்கும் போது அவளை தனியா சந்தித்து கேட்டேன்.