தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31 - ஜெய்
ராஜா நாற்காலியுடன் பிணைக்கப்பட்டிருந்த புகைப்படத்தை பார்த்து பதைத்துக் கொண்டிருக்கும்போது சந்திரன் அம்மா என்ற கத்தலுடன் தன் தோள்பட்டையைப் பிடிக்க, அங்கிருந்து குருதி வழிய ஆரம்பித்தது...
வேறு ஒரு வக்கீலுடன் பேசியபடி வந்த மதி சந்திரனின் குரலைக் கேட்டு அவரருகில் ஓடி வந்தான்....
சிறிது நேரத்தில் சந்திரனை சுற்றி கூட்டம் கூடிவிட்டது... மதி அருகில் சென்று பார்த்து, உடனடியாக தன்னுடைய ஜீப்பில் சந்திரனை ஏற்றி அருகிலிருந்த மருத்துவமனைக்கு போக சொன்னான்... கூடவே பாரதியும், சாரங்கனும் ஏறிக்கொண்டார்கள்...
“இன்ஸ்பெக்டர் சுட்டது யாருன்னு தெரிஞ்சுதா?”
“சைலன்சர் போட்டு சுட்டிருக்காங்க சார்... சத்தம் கேக்கவே இல்லை... அதுவும் இந்த வளாகத்துக்குள்ள இருந்து சுடலை... குண்டு பட்ட இடம் பார்த்தா மேல இருந்து பாய்ஞ்சு வந்தா மாதிரிதான் இருக்கு.. ஒரு வேளை இங்க ஏதாவது மரத்து மேல இருந்து சுட்டு இருக்கலாம்....”
“அதுக்கு வாய்ப்பு இல்லை இன்ஸ்பெக்டர்.... பகல் நேரம் மரத்து மேல உக்கார்ந்து இருந்தா ஈசியா மாட்டிப்போம்ன்னு தெரியும்... சைலன்சர் துப்பாக்கி வச்சிருக்கறவன் இதைக்கூட யோசிக்கத் தெரியாதவனா இருக்க மாட்டான்... எதுத்த பக்கத்துல இருக்கற ஏதோ ஒரு உயரமான கட்டடத்துல இருந்துதான் சுட்டிருக்கணும்.... ஒரு மூணுலேர்ந்து நாலு மாடி உயரம் கண்டிப்பா இருக்கணும்... நீங்க ஒரு ரெண்டு கான்ஸ்டபிள்ஸ் கூட்டிட்டு போய் எதிர் பக்கம் இருக்கற எல்லா கட்டடமும் செக் பண்ணுங்க... நான் இங்க இருக்கற CCTV-ல ஏதாவது பதிவு ஆகி இருக்குதான்னு பார்க்கிறேன்...”
மதி இன்ஸ்பெக்டருக்கு கட்டளையிட்டுவிட்டு வளாகத்தில் பொருத்தியிருக்கும் CCTV காட்சிகளை காண சென்றான்.... சந்திரன் நின்றிருந்த இடத்திற்கு பின் பக்கத்தில் CCTV பொருத்தப்பட்டிருந்ததால் அதில் அவனுக்கு உருப்படியாக ஒரு தகவலும் கிடைக்கவில்லை... மற்ற இடங்களில் பொருத்தப்பட்டிருந்த CCTV-யிலும் சந்தேகிக்கும் வகையில் எந்த விஷயமும் இல்லை... மதி வெளியில் சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தான்... அதிலும் அவனுக்கு உபயோகப்படும் வகையில் ஒரு விஷயமும் மாட்டவில்லை... இதற்குள் எதிர்பக்கம் விசாரிக்க சென்ற இன்ஸ்பெக்டர் வந்து சேர்ந்தார்...
“என்ன இன்ஸ்பெக்டர் ஏதானும் விஷயம் கிடைச்சுதா....”
“சார் எதிர்பக்கம் ரெண்டு பெரிய கட்டடம்தான் இருக்கு.... ஒண்ணு ஹோட்டல் இன்னொண்ணு துணிக்கடை... ஹோட்டல் மொத்தம் பத்து மாடி... பாத்தாவது மாடில rooftop restaurant இருக்கு... ஒன்பதாவது மாடி closed restaurant.... ground floor முழுக்க reception, அவங்க office room, அப்புறம் ஒரு travel agency இருக்குது... சமைக்கற இடம் கீழ, ஒன்பதாவது மாடி ரெண்டு இடத்துலயும் இருக்குது... எட்டாவது மாடில ஜிம்மும், நீச்சல் குளமும் இருக்கு... மத்த இடம் முழுக்க guests தங்கற ரூம்ஸ்தான் சார்....”
“அதே மாதிரி அந்தத் துணிக்கடை மொத்தம் ஐந்து மாடி... ஒருஒரு floor-லயும் துணிகளை பிரிச்சு அடுக்கி இருக்காங்க.... இங்க கோடௌன் தனியா இல்லை... எல்லா மாடிலையும் ரெண்டு ரூம் அந்த floor-ல உள்ள துணிக்குன்னு வச்சிருக்காங்க....”
“குட் இன்ஸ்பெக்டர்... கிடைத்த கொஞ்ச நேரத்துல முழு விவரமும் கொண்டுவந்துட்டீங்க.... அந்த துணி போட்டு வைக்கற ரூம் எங்க இருக்கு...இங்க இருந்து பார்த்தா தெரியுமா...”
“சார் அது பின் பக்கத்துல வருது சார்... அதை ஒட்டினாப்போல lift இருக்குது... இங்க இருந்து பார்த்தா தெரியாது சார்...”
“ஓ ஹோட்டல்ல மேல் மாடி முழுக்கவே rooftop restaurant-தானா இன்ஸ்பெக்டர்.... பகல்லயும் ஒப்பன்ல இருக்குதா...”
“இல்லை சார் ஈவினிங் ஏழு மணிக்கு மேலதான் ஒப்பன் பண்றாங்க...”
“இங்க துணிக்கடை கடைசி மாடி....”
“சார் அதுக்கு யாரும் போகமுடியாது... பூட்டி வச்சிருக்காங்க... மேல 5 தண்ணி tank தான் இருக்குது.... மத்த படி திறந்தவெளிதான் சார்.....”
“ரெண்டு மாடிலையும் சமீபத்துல யாராவது வந்து போன மாதிரி இருந்துதா...”
“ஹோட்டல்ல காலைல முழுக்க மாடில சுத்தம் பண்ற வேலை நடக்கும்... அதனால கிளீனர்ஸ் போயிட்டு வந்துட்டு இருந்தாங்க... ஒன்பதாவது மாடி restaurant அப்படிங்கறதால லஞ்ச் சாப்பிட வந்தவங்க கூட்டம் கொஞ்சம் இருந்தது சார்....”
“ஓ அப்போ இத்தனை பேரையும் மீறி மேல போகறது கஷ்டம்... துணிக்கடைல...”
“துணிக்கடைல செக்யூரிட்டி மட்டும் காலைல போய் தண்ணி tank பார்த்துட்டு வந்து இருக்கார்... மத்தபடி வேற யாரும் போகலை சார்...”
“சரி இன்ஸ்பெக்டர்... நீங்க ஜட்ஜ்கிட்ட போயிட்டு இங்க நடந்த விஷயத்தை சொல்லிட்டு அப்படியே மதியம் சந்திரன் சார் நடத்தப்போகிற வழக்கோட டயத்தை மாத்துங்க... அதுக்குள்ள நான் ஹாஸ்பிடல் போயிட்டு என்ன நிலமைன்னு பார்த்துட்டு உங்களுக்கு கால் பண்றேன்....”,மதி இன்ஸ்பெக்டரிடம் விடைபெற்று சந்திரனை பார்க்க சென்றான்....
சந்திரன் தோள்பட்டையின் உள்பகுதியில் சென்ற குண்டு வெளியில் வராத காரணத்தால் சிறிய அறுவை சிகிச்சை தேவைப்பட்டது... அவரை அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மருத்துவர்கள் உடனடியாக அழைத்து சென்றனர்....