(Reading time: 13 - 26 minutes)

அமேலியா - 50 - சிவாஜிதாசன்

Ameliya

நாம் ஒன்றை நினைத்து அதை செயல்படுத்தும் நேரத்தில் தவறான நேரம் என தெரியவந்தால் மனம் பதற்றமடைவதை போல வசந்தின் மனமும் திக்கென்று அதிர்ச்சியில் உறைந்தது.

டைனிங் டேபிளின் அடியில் இருந்து வந்த நிலா வசந்தையும் அமேலியாவையும் மாறி மாறி பார்த்தாள்.

ஐ லவ் யூ என்று சொல்லும்போது தன்னைச் சுற்றி யார் யார் இருக்கிறார்கள் என்று கவனத்திருக்கவேண்டும். காதலுக்கே உண்டான மயக்கத்தில் அறிவீனமாக நடந்துகொண்டதை எண்ணி வசந்த் நொந்துகொண்டான். தான் ஐ லவ் யூ சொன்னது நிலாவுக்கு நன்றாகவே கேட்டிருக்கும். இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது?

"அந்த ஹீரோ இப்போ தான் தன் காதலிக்கு ஐ லவ் யூ ன்னு சொல்லுறான். அதையும் தெளிவா வரைஞ்சு கொடு" என்று அமேலியாவை நோக்கி கூறினான். பின்பு நிலாவை நோக்கி தன் பார்வையை வீசினான்.

"இங்க என்ன செஞ்சிட்டு இருக்க?"

"என் இன்னொரு நோட்டு புத்தகத்தை காணோம் மாமா"

"காலையில தேடிக்கலாம் நீ போய் தூங்கு"

"எனக்கு தூக்கம் வரலையே"

"கண்ணை இறுக்க மூடி படுத்துக்க. நல்லா தூக்கம் வரும்"

நிலா அமேலியாவின் அருகில் நின்று அவள் ஓவியம் வரைவதையே பார்த்துக்கொண்டிருந்தாள். பின் வசந்தை நோக்கினாள்.

"என்ன லுக்கு?"

"இந்த குண்டு மாமா தான் ஐ லவ் யூ சொல்லுவாரா? ஹீரோயின் எங்க?"

வசந்த் நிலாவின் தலையில் கொட்டி அவளை படுக்கைக்கு செல்லுமாறு அதட்டினான்.

"இரு, அம்மாகிட்ட சொல்லுறேன்" என நிலா அழுதபடியே சென்றாள்.

அமேலியாவுக்கும் தன் மேல் காதல் இருக்கிறது என வசந்த் ஊகித்துக்கொண்டான். ஐ லவ் யூ என்ற வார்த்தை அவளுக்கு புரிந்ததோ இல்லையோ, அவளது கண்களில் மின்னிய ஆயிரம் நட்சத்திரங்களின் ஒளி அவன் மீதான காதலை வெளிப்படுத்தின. நாட்டை ஜெயித்தவனை விட பெண்ணின் இதயத்தை ஜெயித்தவனே வெற்றியாளி. பெண்ணின் நாணம், ஆணின் திமிர் இவை இரண்டுக்கும் இடையே நடக்கும் யுத்தம் காதலின் சங்கீதம்.

ள்ளிரவு நெருங்கிக்கொண்டிருந்தது. ஆழ்ந்த அமைதி. பெரும்பாலான விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. நாராயணன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். மேகலாவும் நிலாவும் கூட பயணம் செய்த களைப்பில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்கள்.

வசந்த் அமேலியாவையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளது அழகு மென்மேலும் அதிகரித்திருப்பதாய் அவனுக்கு தோன்றியது. அந்த தனிமைச் சூழல் அவனது உள்ளத்தில் மறைந்திருந்த காதல் உணர்வுகளை வருடி எழுப்பியது. அமேலியாவின் கையைத் தொட எண்ணினான். அவள் என்ன நினைப்பாள் என தயங்கினான். சற்று நேரம் முன்பு கூட அவளுடன் கைகுலுக்கியதை எண்ணிப் பார்த்தான். பின்னர், ஒருவாறாக தைரியத்தை வரவழைத்து மெதுவாக அமேலியாவின் கையை நடுக்கத்தோடு தொட்டான்.

அமேலியா வரைவதை நிறுத்திவிட்டு வசந்தை நோக்கினாள். அவனது ஸ்பரிசம் உள்ளத்தை என்னவோ செய்தது. இதற்கு முன்னால் அவனது தொடுதல்கள் சாதாரணமாக இருந்தாலும் இந்த தொடுதலில் உரிமையும் உணர்ச்சியும் இருந்ததை அமேலியாவால் உணர முடிந்தது.

அமேலியா தன் கையை மெல்ல விடுவிக்க பார்த்தாள். வசந்த் விடுவதாக இல்லை. அமேலியா வெட்கப்பட்டு தன் தலையைத் தாழ்த்திக்கொண்டாள்.  வசந்த் அவளது உள்ளங்கையை மெல்ல வருடினான். மென்மையாக இருந்தது. அமேலியாவின் உடல் முழுதும் கூசியது. கண்களை மூடிக் கொண்டாள்.

வசந்த் அவளது நாணத்தை ரசித்தான். அவன் உடலில் உணர்ச்சிப் பெருக்கெடுத்தது. என்ன செய்வது?! என்ன செய்வது?! ஏதாவது செய்தாக வேண்டும்! தன்னையும் அறியாமல் உணர்ச்சிப் பெருக்கில் அமேலியாவின் கன்னத்தில் முத்தம் ஒன்றை மலர் போல் பதித்தான். அவளது கன்னம் இலவம்பஞ்சு போல் மிருதுவாய் இருந்ததையும் அவன் ரசிக்காமலில்லை.

அமேலியாவின் உடலில் ஷாக் அடித்தது போல் உதறல் எடுத்தது. என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள அவளுக்கு சில நொடிகள் தேவைப்பட்டன. அது தவறு என்பது போல் கண்கள் கலங்கின. அமேலியா எழுந்து மேகலாவின் அறையில் சென்று மறைந்தாள்.

வசந்தும் தான் செய்தது தவறு என புரிந்துகொண்டான். நடந்ததை மேகலாவிடம் தெரியப்படுத்திவிடுவாளோ என்று வசந்த் பயந்தான். எழுந்து மேகலாவின் அறையை நோக்கி மெதுவாய் சென்றான். மேகலாவும் நிலாவும் கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அருகே போடப்பட்டிருந்த தரைப் படுக்கையில் அமேலியா படுத்திருந்தாள். அவளது விசும்பல் சத்தம் வசந்திற்கு கேட்டது.

வசந்த் நெற்றியைத் தடவியபடி அங்கிருந்து தன் அறையை நோக்கி சென்றான். படுக்கையில் விழுந்தான், எழுந்தான், அமர்ந்தான், ஜன்னலை நோக்கி சென்றான், பார்த்தான், அறைக்குள்ளேயே அங்கும் இங்கும் நடந்தான், மீண்டும் படுக்கையில் விழுந்தான், புரண்டான், பைத்தியம் பிடித்தது போல் முனகினான். எல்லாம் ஒரு முத்தத்தால் வந்த வினை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.