தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 01 - சித்ரா. வெ
பிரபல தமிழ் திரைப்பட முன்னனி கதாநாயகன்
தொழிலபதிபர் மகளை மணக்க இருக்கிறார்.
இன்றைய செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் இந்த செய்தி தான் முக்கிய செய்தியாக இடம் பெற்றிருந்தது.
தமிழ் திரைப்பட முன்னனி நடிகர் சார்மிங் ஸ்டார் சாத்விக்கின் திருமணத்தை பற்றி, அவரின் தந்தை திரைப்பட தயாரிப்பாளர் வசந்தன் நேற்று அறிவித்தார். சாத்விக்கின் தற்போதைய திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதை முன்னிட்டு நடந்த நூறாவது நாள் விழாவில் தான் அவர் இந்த விஷயத்தை பத்திரிக்கையாளர்கள் முன்பு அறிவித்தார். இது குறித்து சாத்விக்கிடமும் கேட்கலாம் என்றால் அவர் படப்பிடிப்பு காரணமாக வெளிநாடு சென்றுள்ளார். அவர் திருமணம் செய்ய போகும் பெண் தொழிலதிபரின் மகள் என்பதை தவிர, வேறெதுவும் அவர் தெளிவாக கூறவில்லை. எனவே விரைவில் சாத்விக்கின் திருமணத்தை எதிர்பார்க்கலாம் என்ற விளக்க செய்தியோடு,
சாத்விக்கின் திருமண அறிவிப்பை குறித்து ஆண் ரசிகர்கள் மகிழ்ச்சியிலும், பல பெண் ரசிகர்கள் கவலையிலும் உள்ளனர். திருமண அறிவிப்பு வெளிவந்தாலும் இன்னும் தேதிகள் எதுவும் சொல்லப்படாத நிலையில், சாத்விக் மதுரமான நடிகையை திருமணம் செய்வதற்கும் வாய்ப்பு இருப்பதாக அந்த நடிகையின் தரப்பில் சொல்லப்படுகிறது. என்ற கிசுகிசுவும் ஒரு ஓரமாக பத்திரிக்கைகளில் அடங்கியிருந்தது.
அழகும் கம்பீரமும் நிறைந்த கதாநாயகனான சாத்விக்கிற்கு ஆண் பெண் ரசிகர்கள் ஏராளம். சில நிதர்சனத்தை உணராத கற்பனை உலகத்தில் மிதக்கும் ரசிகர்களுக்கு தான் சாத்விக்கின் திருமணம் கொண்டாட்டமும் சில பேருக்கு வருத்தமும், மற்றப்படி சாத்விக்கின் நடிப்பை ரசிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொண்டு, தன் குடும்பம் தொழில் என்று தங்கள் நடைமுறை வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு இது வெறும் செய்தி மட்டும் தான்.. ஆனால் தங்கள் பத்திரிக்கைக்களின் விற்பனையை பெருக்க, சாதாரண செய்தியில் கூட சுவாரசியத்தை சேர்க்க வேண்டியுள்ளது.
ஆக மொத்தம் இன்று பலரின் வாய்க்கு அவலாக சாத்விக்கின் திருமண செய்தி மாறியுள்ளது. ஆனால் இன்றைய இந்த செய்தியால் உண்மையிலேயே அதிர்ச்சியும் கவலையும் உண்டானதும், சில ஞாபகங்களை நினைவுக்கு கொண்டு வந்ததும் இரண்டு பேருக்கு தான்.. அதில் ஒருவன் இந்த செய்தியின் நாயகன் சாத்விக்.. மற்றொருவன் விபாகரன். இவர்களது நினைவுகள் முழுவதையும் ஆக்கிரமித்திருப்பவள் யாதவி.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
பாரிஸ்
பாதியிலேயே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்த சாத்விக் கோபத்தில் கையிலிருந்த அலைபேசியை தூக்கி கட்டில் வீசினான். பின் அப்படியே அவனும் கட்டிலில் அமர்ந்தவன் கைகளால் தலை முடியை கோதி கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்தான். அவனது கோபத்திற்கான காரணம் தமிழ் பத்திரிக்கைகளில் வந்திருந்த இன்றைய செய்தி தான்.. இதுவரை அவனைப் பற்றி எத்தனையோ பொய்யான செய்திகளும் கிசுகிசுக்களும் வந்தபோதெல்லாம் இப்படி கோபமோ வருத்தமோ கொள்ளாமல் சாதாரணமாக அதை கடந்து சென்றுவிடுவான். ஆனால் இன்று வந்த உண்மை செய்தியை தான் அவனால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் இது அவன் சம்மதம் இல்லாமல், அவனை கேட்காமல், அவன் தந்தையே எடுத்த முடிவு.. அதுவும் இல்லாமல் அவனிடம் அனுமதி கேட்காமல், தானே இந்த செய்தியை பத்திரிக்கையாளரிடம் அறிவித்திருக்கிறார். இது தெரியாமல் அவன் படபடப்பிடிப்புக்கு கிளம்பிச் செல்ல, உடன் வந்திருப்பவர்கள் அவனை வாழ்த்தும் போது, எதற்கு என்று புரியாமல் அவன் குழம்பினான். இதில் அலைபேசியிலும் திரைப்பட துறையினர் மற்றும் தனிப்பட்ட நண்பர்கள் அனைவரும் வாழ்த்து சொல்லவும் தான் அவனுக்கு விஷயம் புரிந்து, அலைபேசியின் உதவியோடு இன்று வந்த செய்தியை படித்தவன், என்னவாக உணர்ந்தான் என்று வார்த்தைகளால் சொல்ல முடியாது.. தந்தை மேல் அத்தனை கோபமாக வந்தது.
முதலில் இந்த நூறாவது நாள் விழாவே இப்போது வைக்க வேண்டாம், நான் வெளிநாடு சென்று திரும்பி வந்ததும் வைத்துக் கொள்ளலாம் என்று தான் அவன் தந்தையிடம் சொல்லியிருந்தான். ஆனால் இது அவரது தயாரிப்பில் உருவான படம் என்பதால் அவர் உடனே வைக்க வேண்டும் என்று சொன்னதால் அவ்னும் ஒத்துக் கொண்டான். ஆனால் அந்த நிகழ்ச்சியில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.