தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 08 - மது

“சிகரமோ, பாலைவனமோ, அடர்ந்த காடுகளோ, உறைபனியால் மூடப்பட்ட, கடும் குளிர் வீசுகின்ற துருவங்களோ, மனிதனின் காலடி படாத இடம் என்று ஒன்று இல்லை எனலாம்.
பூமியின் ஈர்ப்பு விசையை தாண்டி விண்வெளியிலும் ஏன் சந்திரனிலும் மனிதன் தன் சுவடுகளைப் பதித்திருக்கிறான்.
ஆனால் இந்த பூமியிலேயே மனிதன் தொட முடியவே முடியாத ஓர் இடம் என்றால் அது ஆழ்கடலின் ஆழம் தான்.
உலகின் கடல்களில் மிக ஆழமான இடம் பசிபிக் கடலில் உள்ளது. அந்த இடத்தின் பெயர் மரியானா அகழி (Mariana Trench). அந்த அகழியின் நடுவே தான் உலகிலேயே மிக ஆழமான பள்ளம் உள்ளது. அதன் பெயர் சேலஞ்சர் மடு (Challenger Deep), ஆழம் சரியாக 10,902 மீட்டர்.
நிலத்தில் நம்மைச் சுற்றி காற்றழுத்த மண்டலம் இருக்கிறது. தரையிலிருந்து உயரே மலைமுகடுகளுக்குச் செல்லச் செல்ல காற்றழுத்தம் குறைகிறது.
அதுவே கடலின் ஆழத்திற்குள் போகப் போக பன்மடங்கு அதிகரிக்கும்.
பொதுவாக கடலின் ஆழம் நான்கு கிமீ வரை இருக்கும். அங்கே கிட்டத்தட்ட நானூறு படங்கு அதிக அழுத்தம் இருக்கும். எத்தனை பாதுகாப்பான டைவிங் சூட் அணிந்திருந்தாலும் மனிதன் நசுங்கிப் போய்விடுவான்.
கடலில் இதுவரை முன்னூறு மீட்டர் வரை தான் தகுந்த பாதுகாப்புகளோடு டைவ் செய்திருக்கிறார்கள்.
உலகத்தின் ஆழமான நீர்மூழ்கிக் கப்பல்களும் எழுநூறு மீட்டர் ஆழம் வரையில் தான் செல்லக் கூடியவை.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
ஆனால் 1960ம் ஆண்டு கடல் ஆராய்ச்சி நிபுணரான ஜாக் பிக்கா மற்றும் அமெரிக்க கடற்படை அதிகாரி வால்ஷ் ட்ரீயஸ்ட் என்னும் நீர்மூழ்கியில் அமர்ந்து சேலஞ்சர் மடுவிற்குள் சென்று அந்த நீர்மூழ்கியின் கனத்த கண்ணாடி வழியே ஒளியைப் பாய்ச்சி கடலின் ஆழமான தரையைக் கண்டனர்.
கிட்டதட்ட ஆயிரம் மடங்கு அதிக அழுத்தம் கொண்ட அந்த ஆழத்தை கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்ட விசேஷமான நீர்மூழ்கி அது.
எனது கனவு லட்சியம் எல்லாம் கடலின் அந்த ஆழத்தை நானும் ஒரு முறை கண்டு களிக்க வேண்டும் என்பதே”
பதினாறு வயதிலேயே மிகத் தெளிவாகப் பேசிய தேன்மொழியின் நேர்காணலை சிபி அவனது அறையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“கெவின். பேமிலி பிச்னஸ் என்பதைத் தாண்டி எனக்கென்று ஒரு அடையாளமாக இருக்க வேண்டும் என்று தான் க்ரூஸ் ஆரம்பித்தேன். இதோ முதல் பயணமும் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் பயணிக்கும் கடல் பற்றி எதுவும் தெரியாமலே இதில் இறங்கியிருக்கேனே”
கவினுக்கும் தமிழ் தெரியும் என்றாலும் ஆரம்பித்தில் இருந்தே நண்பர்கள் இருவரும் பிரஞ்ச் மொழியிலேயே உரையாடிக் கொண்டிருப்பதால் அதிலேயே இப்போதும் உரையாடினான்.
“மிகப் பெரிய படத்தயாரிப்பாளர் அப்பா. உலகப் புகழ் பெற்ற பேஷன் டிசைனர் அம்மா எனும் போது பதினாறு வயதில் அவள் நினைத்திருந்தால் கிளாமர் உலகத்தில் சிகரத்தை அடைந்திருக்க முடியும். செலீப்ரிட்டி ஆகியிருப்பாள். ஆனால் அவள் லட்சியம் தான் எத்தனை வித்தியாசமானது” சிபியால் அவனது வியப்பை, ஆச்சரியத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.
அதிலும் உலக புகைப்பட போட்டியில் மரையின் பிரிவில் வெற்றிப் பெற்ற அவளது புகைப்படத்தைப் பார்த்து பார்த்து பிரமித்துப் போனான்.
அதே நேரம் தேன்மொழியும் அந்தப் புகைப்படத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் விழிகள் கண்ணீரைச் சுரந்து கொண்டே இருந்தன.
அவள் நினைவுகள் முதன் முதலில் செஷல்ஸ் வந்த நாளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தன.
இந்து மகாசமுத்திரத்தில் தனது முதல் பயணத்தை தொடங்க வேண்டும் என்று தேன்மொழி விருப்பம் கொள்ள மொத்தக் குடும்பமும் அதை எப்படி சாத்தியமாக்குவது என்று ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.
“இன்னும் படம் பாதி ஷெடியூல் இருக்கு. நீங்க எல்லோரும் கிளம்புங்க. நான் இங்க இருந்து பார்த்துக்கிறேன்” இளங்கோ சொல்லவும் இளமாறன் மறுத்து தலையசைத்தான்.
“எனக்கும் தான் ரீரிகார்டிங் இருக்கு. பாப்பா தான் அங்கே சில நாள் தங்கி இருக்கப் போறா. நாம கூட போய் ஒரு வாரம் போல இருந்துட்டு வரலாமே” இளையவன் சொல்ல தமையன் சம்மதித்தான்.
“சில்வர் லைனிங் ரிசார்ட்டில் பாப்பாவுக்கும் தாத்தாவுக்கும் ஆறு மாசம் லீஸில் ஒரு ரிசார்ட் புக் செய்திடறேன். நம்ம எல்லோருக்கும் ஒரு வாரத்துக்கு” இளங்கோவை இடையிலேயே நிறுத்தினார் கயல்விழி.
“நாம எல்லோரும் பேமிலி டூர் போல ஒரு வாரம் போகலாம். நான் அப்பா மாறன் ஒரு வாரத்தில் திரும்பி இங்க வேலையை கவனிக்கிறோம். நீயும் வானதியும் இன்னும் கொஞ்ச நாள் வேற இடம் எல்லாம் போயிட்டு வாங்க” தீர்மானமாக மொழிந்தார்.