தொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே!! - 43 - சித்ரா. வெ

ஞாயிறன்று அவளை அழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்ததும் அமுதவாணன் அருள்மொழியை அலைபேசியின் மூலம் தொடர்புக் கொண்டான்.
இதுவரை அவளிடம் அலைபேசியில் பேச முயற்சிக்காதவன் இப்போது பேசவும் அவனிடம் பேசலாமா? வேண்டாமா? என்று யோசித்தவள், பின் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது என்று அழைப்பை ஏற்று பேசினாள்.
“ஹலோ அருள் நான் அமுதன் பேசறேன்..”
“தெரியும் சொல்லுங்க..”
“நான் இங்க சொந்தமா ப்ரண்ட்ஸோட சேர்ந்து ஒரு கம்பெனி ஆரம்பிச்சிருக்கேன் தெரியுமில்ல..”
“நீங்க முன்ன ட்ரெயினிங்க் வந்தப்போ சொல்லியிருக்கீங்க.. இப்போ அதுக்கு என்ன?”
“இப்போ அந்த கம்பெனிக்கு ஒரு டீல் கிடைச்சிருக்கு..”
“ஓ அப்படியா.. ரொம்ப சந்தோஷம்.. வாழ்த்துக்கள்..”
“இருக்கட்டும் எல்லாம் எனக்கு மட்டுமில்ல.. என்னோட ப்ரண்ட்ஸ்க்கும் சேர்த்து தான்.. இப்போ அதை சொல்ல மட்டுமில்ல.. இன்னொரு முக்கியமான விஷயம் பேசவும் தான் உனக்கு போன் பண்ணேன்..”
“அப்படியா என்ன விஷயம்..”
“இந்த டீல் முழுக்க நான் தான் பார்க்கப் போறேன்.. அது சம்பந்தமான மீட்டிங்க் அட்டண்ட் பண்ணனும்.. எனக்கு இதுக்கு கைட் பண்ண நல்ல பார்ட்னர் தேவை.. ப்ரண்ட்ஸ்ல்லாம் இருக்காங்க தான்.. ஆனா அவங்க அவங்களுக்கு ஒரு வேலை இருக்கு.. அதனால நீ எனக்கு ஹெல்ப் செய்தா நல்லா இருக்கும்..”
“நான் இப்போ தான் படிப்பை முடிச்சேன்.. நான் எப்படி உங்களுக்கு ஹெல்ப் செய்ய முடியும்..”
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் ![]()
“ஏன் முடியாது.. உன்னோட திறமையை பத்து நாளில் தெரிஞ்சிக்கிட்டேன்.. நீ எனக்கு ஹெல்ப் செய்ய முடியும்.. அதான் உன்னை தேர்ந்தெடுத்தேன்.. உன்னோட படிப்புக்கும் அது உதவியா இருக்குமில்ல..”
“கண்டிப்பா உதவியா இருக்கும்..”
“அப்போ வர்றியா?”
“வரேனே.. என்னைக்கு மீட்டிங்க்? எப்போ வரணும்?” என்று அவள் கேட்டதை அவனால் நம்பவே முடியவில்லை.. அருள்மொழியா வர சம்மதித்து இப்படி கேட்டது? என்று ஆச்சர்யப்பட்டான். கைகளை ஒருமுறை கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.
“நிஜமா தான் சொல்றியா அருள்.. என்னால நம்பவே முடியவில்லை.. வர்றேன்னா சொன்ன..” வாய்விட்டே கேட்டான்.
அவன் ஆச்சர்யப்படாமல் இருந்தால் தான் அதிசயம் என்று நினைத்துக் கொண்டாள். ஏனென்றால் அந்த அளவுக்கு அவனிடம் நடந்துக் கொண்டிருக்கிறாளே.. இலக்கியாவிடம் பேசியதிலிருந்து அவனிடம் மிகவும் அதிகப்படியாக தான் நடந்துக் கொண்டிருக்கிறோம் என்று மனதில் ஒரு ஓரமாய் உறுத்தல் இருந்துக் கொண்டே இருந்தது. அதனால் தான் இப்போது அவன் கேட்டதும் வருவதாக அவள் சம்மதித்தாள்.
அதுவும் அவன் கேட்டது ஒரு முக்கியமான விஷயத்துக்கு தானே, இன்னும் கல்லூரி தேர்வின் முடிவுக் கூட வராத நிலையில் அவளை நம்பி ஒரு வேலையை ஒப்படைத்தால் அதை பெருமையாக தானே நினைக்க வேண்டும். அதனால் தான் அவள் ஒத்துக் கொண்டாள்.
“நிஜமாகவே நான் வர்றதா தான் சொல்றேன்.. ஆனா என்னைக்கு வரணும்னு நீங்க சொல்லவே இல்லையே..” என்று அவள் கேட்டதும்,
“வர்ற சண்டே.. ஈ.ஸி.ஆர் ரோட்ல ஒரு ரிசார்ட்..” என்றவன் அந்த ரிசார்ட்டின் பெயரை கூறினான்.
“சண்டேவா..” என்று இழுத்து சொன்னதிலேயே அவள் அன்று வர முடியாது என்று சொல்லப் போகிறாள்..” என்று திரும்பவும் நினைத்தான்.
ஆனால் அவளோ, “சண்டே ஈவ்னிங்க்குள்ள வீட்டுக்கு வந்திட முடியுமா?” என்றாள்.
“என்னடா இது அதிசயத்துக்கு மேல அதிசயமா இருக்கு..” என்று அமுதன் திரும்பவும் ஆச்சர்யப்பட்டான்.
“சண்டே ஈவ்னிங் கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு.. ஈ.ஸி.ஆர் வேற அதனால டே டைம்னா என்னால வர முடியும்..” என்று கூறினாள்.
“பெண் பார்க்க வரப் போகிறார்கள்.. அதனால் வர முடியாது..” என்று சொல்ல வேண்டுமென்று அவளுக்கு தோன்றவில்லை. அதை அவனிடம் சொல்லும் அவசியமும் இல்லை. முதலில் அவளுக்கே அதில் அதிக ஆர்வம் இல்லாதது தான் அமுதன் அழைத்ததும் செல்ல ஒத்துக் கொண்டதுக்கு காரணமோ என்னவோ, ஆனால் அதை அவள் யோசித்தெல்லாம் பார்க்கவில்லை. தன்னை நம்பி அழைக்கிறான். அதனால் அவனுக்கு உதவிட வேண்டுமென்று நினைத்தாள்.
“கண்டிப்பா ஈவ்னிங்க்குள்ள வந்துடலாம்..” என்றான்.
சாதாரணமாக அவளை ஏமாற்றவெல்லாம் அவன் அப்படி சொல்லவில்லை. தன்னை ஏதோ அயோக்கியன் போல் அவள் நினைத்து தான் இப்படி நடந்துக் கொள்வதாக கூட அவனுக்கு தோன்றும், அப்படிப்பட்டவள் அவனை நம்பி அவ்வளவு தூரம் வருவதாக ஒத்துக் கொண்டப் பிறகு அவளை ஏமாற்றவெல்லாம் அவனுக்கு மனம் வரவில்லை. அதனால் அவளை மாலைக்குள் வீட்டில் கொண்டு வந்து விட்டு விட வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது. சுடருக்காக என்பதெல்லாம் அவனுக்கு இரண்டாம்பட்சமாக போய்விட்டது. அந்த நேரம் அருளை மட்டுமே மனதில் நினைத்து அவன் செயல்பட்டான்.