தொடர்கதை - கிபி டு கிமு - 03 - சுபஸ்ரீ
டியர் கி.மு.
ஹாப்பி டு சீ யூர் லெட்டர் டா. ஹோப் ஆல் ஆர் பைன்.
நீ செல்போன் வேண்டாம் என கூறியது சற்று வருத்தமாக இருந்தாலும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உன் எண்ணம் ஈடேற வாழ்த்துகள். உனக்கு எப்பொழுதும் நான் இருக்கிறேன் என்பதை மட்டும் மறந்து விடாதே.
உன்னிடம் முக்கியமான விஷயத்தை கூற வேண்டும். எனக்கு மூன்று நாட்களுக்கு முன் ஒரு கடிதம் வந்தது. அதில் “நான் உன்னை காதலிக்கிறேன் . . என்னை நிராகரித்தால் உனக்கு மரணத்தை பரிசளிப்பேன்” என்று எழுதி இருந்தது.
காலேஜில் எனக்கு ஆண் – பெண் என இருபாலரிலும் நண்பர்கள் உள்ளனர். நான் அனைவரிடமும் சகஜமாகவே பேசுவேன். ஒருமுறை விக்னேஷ் அவனை விக்கி என்று அழைப்போம். விக்கி என்னிடத்தில் பிரபோஸ் செய்தான்.
நான் அவனிடத்தில் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் காதல் வேண்டாம். படித்து முடித்து இரண்டு ஆண்டுகள் வேலை செய். ஸ்திரமாக வேலையில் இருத்திக் கொள். அதன் பின்னரும் என் மேல் காதல் இருந்தால் என் பெற்றோரிடம் வந்து முறையாக பெண் கேள் என்றேன். அதற்கு பின்னர் அவன் என்னிடம் பேசுவதேயில்லை.
எனக்கு காதலில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. அதுவும் இந்த காலத்து பையன்களை எந்த அளவு நம்புவது என்று தெரியவில்லை. நல்லவர்களும் இருக்கிறார்கள் இல்லை என்றில்லை.
காதலித்தால் நிச்சயமாக பெற்றோருக்கும் நம்மால் பிரச்சனை மற்றும் வேதனை. அதனால் நான் திருமணத்திற்கு பிறகு உரிமையோடு என் கணவணையே காதலிக்கலாம் என்றிருக்கிறேன். காதலிப்பது தவறில்லை. காதலால் படிப்பில் கவனம் இருப்பதில்லை.
என் சில நண்பர்களே இதற்கு உதாரணம். நல்ல படிப்பாளிகள் காதலில் விழுந்தபின் படிப்பில் கவனமே இல்லை. காலேஜ் கட் அடிப்பது ஊர் சுற்றுவது என இருக்கிறார்கள.
படிக்காமல் வேலை இல்லாமல் திருமணத்திற்கு பிறகு என்ன செய்வார்களே தெரியவில்லை. நிச்சயமாக அப்பொழுது காதல் கசந்துவிடும். பிராக்டிகல் லைப்பை மறந்துவிடுகிறார்கள்.
நான் ஜாதி மதம் பார்ப்பவள் இல்லை. அழகு திறமை பணம் அந்தஸ்து இவற்றை எல்லாம்விட நல்ல குணம் .. . நல்ல மனிதன் தான் வேண்டும். காமத்திற்கு காதல் என்ற முகமுடியை அணிவித்து திரிகின்றனர் சில காதலர்கள். படிக்கும் பருவத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
எந்தெந்த பருவத்தில் எதை செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். காயாக இருக்கையில் கனி என்று பரித்தால் நஷ்டம் யாருக்கு?
ரொம்பவும் பிலாசிபி சொல்றேனோ . . என் நிலைமை அப்படி . .
இந்த லெட்டர் வந்ததில் இருந்து இப்படிதான் புலம்புகிறேன். இது லவ் லெட்டர் மாதிரியா இருக்கு? கொலை மிரட்டல் மாதிரி இருக்கு. ஒரு லவ் லெட்டர் கூட சரியா எழுத தெரியாத இவனை (கோப ஸ்மைலி போட முடியவில்லை இங்கு) என்ன செய்யலாம்.
கொய்யால என் கையில மட்டும் அவன் சிக்கினான் . . அவனை வெச்சி செய்வேன். இது என் நக்கீரன் HOD மீது ஆணை. (என் HOD தவறை மட்டும் சரியா கண்டுபிடிச்சிடுவா(ர்)ன்.).
அப்பா அபீஷியல் டிரிப்பாக கலிபோர்னியா சென்றிருக்கிறார். அம்மாவும் கூட சென்றிருக்கிறார். என் பெரியப்பா மகள் அங்குதான் வசிக்கிறாள. அவளுக்கு இப்பொது டெலிவரி டைம். பெரியம்மா உயிரோடு இல்லை. ஆதலால் அம்மா உதவ சென்றிருக்கிறார். அவர்களிடம் இதை போனில் கூறினால் டென்ஷன் ஆகி விடுவார்கள்.
நானும் தம்பியும் மட்டுமே இருக்கிறோம். சித்தி குடும்பம் இரண்டு வீடு தள்ளி உள்ளது. ஆதலால் பயம் இல்லை. இதை சித்தியிடம் கூறவும் முடியாது. அவர் சரியான F,M. radio. அவரிடம் கூறினால் ஈரேழு பதினாலு லோகத்திற்கும் தெரிந்துவிடும். “யாரிடமும் கூற வேண்டாம்” என சொன்னால் அதையும் டேக் லைனாக சேர்த்தே சொல்லிவிடுவார்.
எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை கிமு. எப்படி இதை ஹேண்டல் செய்வது?. தம்பியிடம் காட்டினேன். அவன் எனக்கு துணையாக இருக்கிறேன் என்றான்.
அவன் எனக்கு ஆறுதலும் தைரியமும் கூறினான். ஒரே நொடியில் அவன் அண்ணன் போலவும் நான் தங்கை போலவும் உணர வைத்துவிட்டான். இத்தனை பொறுப்பானவனா என அசந்துவிட்டேன். தம்பியுடன் தான் வீட்டைவிட்டே வெளியே போறேன்.
எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. யார் இந்த லெட்டரை எழுதி இருப்பார்கள்?. இதற்குமுன் இரண்டு முறை “I LOVE U” என எழுதி வந்திருக்கிறது. அதை பெரியதாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. கிழித்துப் போட்டுட்டேன்.
எந்த ரெயில்வே ஸ்டேஷனில் எனக்கு டிக்கெட் கொடுக்கப் போகிறானோ தெரியவில்லை (கிரையிங் ஸ்மைலி)
ஒவியா ஆர்மி மாதிரி எனக்கும் ஒரு ஆர்மி இருந்தா நல்லா இருக்கும்.
பெப்பர் ஸ்ப்ரே மிளகாய் பொடி என பேக் மினி மளிகை கடை மாதிரி இருக்கு.
போற போக்கை பாத்தா ரோட்ல நடக்கும்போது கூட ஹெல்மட் போடணும் போல இருக்கே ஏசிட் அடாக்ல இருந்து தப்பிக்கதான்.
சேப்டிகாக இருக்கிற எல்லா ஏப்பும் டவுண்லோட் பண்ணினதால என் போன் ஓவர்லோட் ஆகிடுச்சி. குழப்பமாக இருக்கு. என்ன செய்வது கிமு?.