தொடர்கதை - நல்ல முடிவு - 05 - ரவை
மீட்டிங் முடிந்து நிரஞ்சன் வீடு திரும்பியதும், மகன் சேகர் ஆவலுடன் அவரை எதிர்கொண்டான்.
தந்தையும் மகனை ஆரத் தழுவி, கை குலுக்கி, முத்தம் கொடுத்தார்.
" சேகர்! உன் கணிப்பு நூற்றுக்கு நூறு கரெக்ட்! நீ சொன்ன அதே கேள்விகள், அதே சந்தேகங்கள்! நல்ல வேளை, நீ தயாரித்துத் தந்த பதில்களை வைத்து நிலமையை சமாளித்தேன். சொல்ல மறந்துட்டேனே, விலையை ஒண்ணேகால் கோடியிலிருந்து குறைத்து ஒரு கோடியா சொல்லி இருக்கேன், மீதி கால் கோடியை, போகப் போகச் சொல்லிக்கலாம்......"
" அப்பா! நீ உடனடியா செய்யவேண்டியது, பிரபாவை அழைத்து அந்த வியாபாரியை பற்றிய விவரங்களை முழுக்க தெரிந்துகொள்! ஒருமுறை திருச்சி சென்று அவரை மீட் பண்ணி, நீயே நேரிடையாக பேசு! தெளிவாக, இனிமேல் பேச்சுவார்த்தைகள் எல்லாம், உங்க ரெண்டு பேருக்குள் தான். புரோக்கர் பிரபா வரக் கூடாது என தீர்மானமாகச் சொல்லிவிடு! பிரபாவுக்குத் தரவேண்டிய பணத்தை தர தயங்கவேண்டாம்! ஆனால், இனிமேல் டீலிங் உங்க ரெண்டு பேருக்கிடையேதான் என்று உறுதியாகச் சொல்!"
" வெரி குட், சேகர்! நல்ல யோசனை! இப்போதே பிரபாவை வரச் சொல்கிறேன் ஓ.கே.?"
பிரபாவை அழைக்க போனை எடுத்தபோது, அது சிணுங்கி யாரோ அழைப்பதை கூறியது. " சொல்லுங்க! நிரஞ்சன் தான் பேசறேன்......"
" தலைவா! பாராட்டுக்கள் தலைவா! சாதுர்யமா பேசி, உன் வழிக்கு மற்றவங்களை கொண்டு வந்துட்டே! இனி உன் ஆட்சிதான்!"
" என்ன கிண்டலா?"
" ஐயோ, தலைவா! நான் அப்படி செய்வேனா? நிஜமா எனக்கு தோணினதைத்தான் சொன்னேன். இந்த கமிட்டி அது இதுன்னு வந்தா, ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்து குழப்பி, காரியத்தை கெடுத்து குட்டிச்சுவராக்கி விடுவார்கள் நல்லவேளை, நீங்க உறுதியா நின்று அதை உடைச்சிட்டீங்க!"
" சரி, வேறென்ன?"
" என்ன தலைவா? அப்படி சட்டுனு என்னையும் கட்பண்றீங்க! நான் உங்க நலன்விரும்பி, தலைவா! என் வேலை இனிமேல், உங்களுக்கு உறுதுணையா உறுதியா நின்னு, மற்றவங்க என்ன பேசிக்கிறாங்கன்னு உளவு பார்த்து சொல்வதே! அப்பத்தானே நீங்க உஷாரா இருக்க முடியும்......."
" தேங்க்ஸ்! உன்னை நம்பலாமா?"
" ஐயோ தலைவா! என்ன கேள்வி கேட்கறீங்க? நீங்க ரொம்ப வெள்ளந்தி, தலைவா!