சொல்லுங்க!"
" இன்று மாலையே நீங்க இங்கே வந்து வீடு, மனையை பார்க்கலாம். அதற்குள்ளே மற்ற ஓனர்களுக்கு சொல்லி வரவழைக்கிறேன்.
சாம்புவிடம் என் அட்ரஸ் இருக்கு! ஈவினிங் போன் பண்ணிட்டு கிளம்பி வந்து சேருங்க! எல்லாம் நல்லபடி முடிய கடவுளை வேண்டிக் கிறேன்....."
" நானும் என்அப்பன் மலைக்கோட்டை விநாயகப் பெருமானை வேண்டிண்டு வந்து சேருகிறேன்."
நிரஞ்சனின் மகிழ்ச்சி கரை புரண்டது. இந்த முறை எந்த தவறும் நடக்காமல் இருக்க மனதில் உறுதி செய்துகொண்டான்.
முதலில் கூடவே வசித்த ஓனர்களிடம் பேசி அவர்களை அன்று மாலை செட்டியாரை தன்னுடன் சேர்ந்து வரவேற்க கேட்டுக் கொண்டார்.
உள்ளூரில் உள்ள மற்ற ஓனர்களுக்கும் போனில் தெரிவித்தார். அவர்களையும் ஈவினிங் வந்து செட்டியாரை வரவேற்க சேர்ந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.
வெளியே ஓனர்களுக்கு ஈமெயிலில் செய்தி அனுப்பி தன் கடமைகளை சரிவர செய்துவிட்டதில் திருப்தி அடைந்தார்.
மாலை நான்கு மணி முதலே ஓனர்கள் வரத் துவங்கினர். ஐந்து மணிக்கு செட்டியார் வந்தபோது, அவரை வரவேற்க, பத்து ஓனர்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
செட்டியாரும் வீடுகளை யும் மனையையும் சுற்றிப் பார்த்தார்.
மனையின் நீள, அகல விவரங்களையும் யாரிடம் எந்த ஆண்டு வாங்கியது என்ற விவரங்களை குறித்துக் கொண்டார்.
" நிரஞ்சன்! எனக்குத் திருப்தியாக இருக்கு! மற்ற விவரங்களைப் பேச எப்போ, எத்தனைபேர் வரீங்கன்னு சொன்னால், ஓட்டல்லே ஏற்பாடு பண்ணிடறேன். நான் கிளம்பறேன். நீங்க அரை மணி நேரத்திலே மற்றவங்க சௌகரியத்தை கேட்டுண்டு சொல்லுங்க! தேங்க்ஸ்!"
செட்டியார் சென்றதும், நிரஞ்சனை ஓனர்கள் சுற்றி நின்று தங்கள் யோசனையை தெரிவித்தனர்.
" தலைவா! என்னை அழைச்சிகிட்டு போங்க, தலைவா! நான் ஸ்டார் ஓட்டலுக்குள்ளே போய் பார்த்ததே இல்லே......"
யாவரும் சிரித்தனர். " சரி, வேற யார் வரீங்க?" " நிரஞ்சன்! ரொம்ப பேரை கூட வச்சுக்காதீங்க, ஆளுக்கு ஒருபக்கம் இழுத்து பேச்சை கெடுத்துடுவாங்க! ரெண்டாம் தளம் முதல் எண் பிளாட் ஓனர் கணேசனை கூட அழைத்துப் போங்க! மொத்தம் மூணுபேர் போதும் நல்லபடியா பேசி வெற்றியை கொண்டு வாங்க!"