தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 02 - முகில் தினகரன்
மொத்தம் மூன்று போர்ஷன்கள் உள்ள அந்தக் குடியிருப்பில், ஹவுஸ் ஓனரான சம்பூர்ணம்மாவும், அவள் கணவர் கஸ்தூரியும் முதல் போர்ஷனில் இருந்து கொண்டு, மற்ற இரண்டையும் வாடகைக்கு விட்டிருந்தனர்.
இரண்டாம் போர்ஷனில், ரிடையர்டு ஸ்கூல் வாத்தியாரான தேவநாதன், தன் மனைவி மற்றும் இரண்டு மகள்கள், ஒரே மகனோடு குடியிருக்க, மூன்றாவது போர்ஷனில் தனியார் கம்பெனியில் அக்கௌண்டெண்டாக பணி புரியும் நரசிம்மன், தன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளோடு குடியிருந்தார். இரட்டை வால் குரங்குகளான அந்த குழந்தைகளால் நரசிம்மனும் அவர் மனைவியும் ஹவுஸ் ஓனர் சம்பூர்ணம்மாவிடம் தினமும் வண்டி வண்டியாய் திட்டுக்களை வாங்கிக் கட்டிக் கொள்வது அங்கு வாடிக்கையாக நிகழும் வேடிக்கை.
அந்தக் கம்பௌண்டிற்குள் அர்ச்சனாவைத் தவிர மற்ற எல்லோருக்குமே அந்த சம்பூர்ணம் என்றால் சிம்ம சொப்பனம். அவள் “எதற்குக் கத்துவாள்?....எப்போது கத்துவாள்?...யாரைக் கத்துவாள்?” என்பதை யாராலும் யூகிக்கவே முடியாது. டிஜிட்டல் குரலில் அவள் கத்த ஆரம்பித்தால், அந்தக் குடியிருப்பிற்குள் இருக்கும் யாருக்குமே எந்த வேலையுமே ஓடாது. அவளது அந்தக் கத்தலுக்கு பயந்தோ, அல்லது சகிக்க முடியாமலோதானோ என்னவோ...அவள் மகன் சுரேஷ் கூட கடல் தாண்டி மடகாஸ்கருக்கு வேலை பார்க்கப் பறந்திருப்பான் என்றும், பாவப்பட்ட ஜென்மமான அவள் கணவர் கஸ்தூரி மட்டும் அங்கிருந்து தப்பி ஓட வழியில்லாமல், பல்லைக் கடித்துக் கொண்டு அவளுடன் இருப்பதாகவும் தங்களுக்குள் “கிசு..கிசு”வென்று பேசிக் கொள்வர் அந்தக் குடியிருப்பில் இருக்கும் மற்றவர்கள்.
யாராவது ஒரு குடித்தனக்காரரை அவள் விளாசு...விளாசு என விளாசித் தீர்த்து விட்டு, அங்கிருந்து சென்றபின், அவள் கணவர் கஸ்தூரி வந்து அந்தக் குடித்தனக்காரரை அழைத்து சமாதானப்படுத்தி விட்டு, சில ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி அவர்களது கொதிப்பைக் கொஞ்சமாய் அடக்கி விட்டுப் போவார். உண்மையைச் சொல்லப் போனால் அந்த நல்ல மனிதரால்தான் இந்த இரண்டு குடித்தனக்காரர்களும் இன்னும் வேறு வீடு பார்த்துப் போகாமல் அங்கேயே இருக்கின்றனர்.
பொதுவாகவே, அந்தச் சம்பூர்ணம் ஆவேசமாய்க் கத்தும் போது எல்லோருமே அமைதியாக இருப்பர். ஆனால், அர்ச்சனா மட்டுமே நேருக்கு நேர் அவளிடம் வாக்குவாதம் செய்வாள். பழிப்புக் காட்டுவாள். பல்வேறு அபிநயங்களைச் செய்து அவளை மேலும் மேலும் கோபமூட்டுவாள்.
“ஏம்மா...உங்களுக்கு கத்தணும்னு ஏதாவது வேண்டுதல் இருந்தா உங்க வீட்டுக்குள்ளாரவே உட்கார்ந்து கத்த வேண்டியதுதானே?...ஏன் இப்படி வெளில வந்து நின்னு கத்தி எல்லோரையும் டார்ச்சர் பண்றீங்க?”