"அவளை நல்லா பாத்துக்கிட்டா போதும். கல்யாணம் பண்ணிக்கோ… ஏதாவது வேலைக்கு போய் அவளை பத்திரமா பார்த்துக்கோ" என்ற ரேச்சல்,
"அம்மா… செலவுக்கு ஏதாவது பணம் கொடுங்க" என்றாள்.
"அதெல்லாம் வேண்டாம். அன்னாடம் கிடைச்ச வேலையை செஞ்சுட்டு வெட்டியா வாழ்ந்துட்டேன்… மாச சம்பளத்துல ஒரு வேலை கிடைச்சா நல்லாருக்கும்மா… பணம்லாம் வேணாம்" என்று தயங்கிய மாரப்பனிடம் பணத்தை நீட்டிய ஷீலா,
"கல்பி வீட்டுக்கு வந்ததும என்னை வந்து பாரு. தெரிஞ்சவங்கள்ட்ட வேலைக்கு சேர்த்து விடறேன்." என்று விடை பெற்றார்.
மருத்துவமனையின் வாயிலுக்கு இருவரும் வரும்போது காரிலிருந்து நந்தினி மனு குட்டியுடன் இறங்குவதை பார்த்து,
"அவங்க உன்ன பாக்க வராங்க போல" என்று ரேச்சலுக்கு சுட்டிக் காட்டினார். அவர்களை பார்த்த ரேச்சல் தடுமாறி நின்றாள்.
அதே சமயத்தில்தான் சத்யனும் ரஞ்சனும் மருத்துவமனை பில் தொகைகளை கட்டி விட்டு வெளியே வந்து கொண்டிருந்தனர். காரிலிருந்து இறங்கி நந்தினி வருவதை பார்க்கவும் அவர்கள் அவளை நோக்கி விரைந்தனர்.
அதற்குள் ரேச்சலை நெருங்கிவிட்ட நந்தினி,
"ரேச்சல் நல்லா இருக்கீங்களா"என்று விசாரித்தாள். அவளுக்கு ரஞ்சன்…. ரேச்சல் அம்னீசியாவிலிருந்து குணமாகவில்லை என்று ஏற்கனவே அலைபேசியில் தெரிவித்திருந்தான்.
அப்போது நந்தினியின் கையிலிருந்த மனுகுட்டி ரேச்சலிடம் தாவியது. முகத்துடன் முகம் பார்த்து முத்தமிட்டது… உற்சாகமாக கூவியது…
குழந்தையை இயல்பாக அவள் வாங்கி அணைப்பதை தொலைவில் இருந்து சத்யன் கவனித்தான். அவள் ஏதோ சொல்லி கொஞ்சுவதை மனம் காட்சியாக பதிந்து கொண்டது…
ரேச்சல் மனுகுட்டியை கொஞ்சிவிட்டு நந்தினியிடம் தந்தாள்.
" தேங்கஸ் நந்து… நாங்க வீட்டுக்கு கிளம்பிட்டோம். அப்புறமாக மனுகுட்டியை தந்து விடுங்க." என்றாள்.
"கண்டிப்பா ரேச்சல். வாங்க நானே ட்ராப் பண்றேன். "
"இல்லை… ஜெமி காரை எடுத்து வருவான் நாங்க அவனோட போறோம். நீங்க கிளம்புங்க" ஷீலா சொன்னார்.
"சரி ஆன்ட்டி நான் அப்புறமா வீட்டுக்கு வர்றேன்."என்று சொல்லி நந்தினி கிளம்பினாள். ஏனோ மனு இன்று அழ ஆரம்பித்து விட்டாள். ரேச்சலை நோக்கி கை நீட்டியபடி கத்தினாள்.