அதை அவனே வைத்துக் கொள்ளட்டும் என்று புலம்பிக் கொண்டு அவள் திரும்பி வீட்டுக்குள் நடக்க முயல சந்தியா... போஸ்ட் உங்க பிரண்டு கிட்ட இருந்து தான் வேணும் என்றால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு சிட்டாக பறந்து சென்றான் தன் சைக்கிளில்.
ஜனனி கிட்ட இருந்தா... பத்து நாளா போன் செய்கிறேன். ஆனால் போனை எடுக்கவில்லை. இங்கே இருந்து ஊருக்கு போகும்போது ஏதோ மந்திரித்து விட்ட கோழி மாதிரி தான் போனாள்... ஏதாவது பிரச்சினையா என்று கேட்டால் இல்லை என்று பூம்பூம் மாடு மாதிரி வேகமாக தலையை மட்டும் ஆட்டினாள். இப்போ என்னடான்னா லெட்டர் போட்டு இருக்கா... நோ நோ... ரிஜிஸ்டர் போஸ்ட் அனுப்பி இருக்கா... என்ன விஷயமாக இருக்கும் என்று யோசித்தவள் போஸ்ட் வாங்குவதற்காக போஸ்ட் ஆபீஸ் நோக்கி சென்றாள்.
அந்த போஸ்ட்மேன் ஹாயாக கூல்டிரிங்ஸ் குடித்துக் கொண்டு நின்றான். சந்தியா வெயிலில் நடந்து வருவதை பார்த்து அவன் கட்டை விரலை உயர்த்தி என் கிட்டேயே வா என்றான்.
ஆனால் எதையும் கவனிக்காதது போல சிறிது நேரம் காத்திருந்தாள். அவன் வந்ததும் சந்தியாவிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு போஸ் கொடுத்தான்.
அதை வாங்கியவள் அவனை பார்த்து நக்கலாக சிரித்து விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள்.
ஆஹா... சிரிப்பே சரியில்லையே... ஏதாவது செய்து வைத்துவிட்டாளா என்று யோசித்த போஸ்ட்மேன் சைக்கிளில் காற்று இருக்கிறதா இல்லை பிடுங்கிவிட்டு விட்டாளா என்று பார்க்க காற்று ஃபுல்லாக இருந்தது.
அப்ப எதுக்கு இந்த சிரிப்பு என்று யோசித்தவன் காரணம் தெரியாமல் போக ஆபீஸ் சென்று மற்ற கணக்கு வழக்குகளை முடித்தவன் நேரமாவது உணர்ந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போஸ்ட் ஆபீஸை பூட்டிக் கொண்டு வெளியே வந்தான்.
ஆதவன் நடு வானில் மிதக்க அவன் ஆக்ரோஷத்தில் அவனது மூச்சு காற்று வெப்பகதிர்களாய் பூமியில் தவழ்ந்து கொண்டிருந்தது.
எப்பப்பப்பா... உச்சி வெயில் மண்டையை பிளக்குது... இதில் இன்னும் மூணு கிலோமீட்டர் சைக்கிள் மிதிக்கனுமா என்று அலுத்துக் கொண்டே கையிலிருந்த எல்லா பொருட்களையும் சைக்கிளின் மீது திணித்து விட்டு ஸ்டாண்ட்டை விடுவிக்க சைக்கிள் முன்பாக நகர மறுக்க டொக் என்று சத்தம் மட்டும் கேட்டது.
அடிப்பாவி என்று வாய் விட்டு புலம்பியவன் சந்தேகத்தை போக்க வேகமாக குனிந்து பார்த்தான்.
சாவியை எடுத்து கொண்டு போய் விட்டாளே.... இப்போ என்ன செய்வது... கடவுளே காப்பாற்று என்று தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.