தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 03 - முகில் தினகரன்
அன்று மாலை அறைக்குத் திரும்பிய ரவீந்தர் பொள்ளாச்சி கிளம்புவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டான்.
“தேனே தென் பாண்டி மீனே....
இசைத்தேனே...இசைத்தேனே!...
நானே...இளமானே!...
நீதான் செந்தாமரை...ராரி ராரோ...
நெற்றி மூன்றாம் பிறை!..ஆரி...ராரோ!”
எஃப்.எம்.ரேடியோ இசைஞானியின் இசைத் தேனைச் சொட்டிக் கொண்டிருந்தது.
தனது பொருட்களையெல்லாம் ஒரு அட்டைப் பெட்டிக்குள் வைத்து பேக் பண்ணினான். “இதை நாளைக்கே ஆபீஸுக்கு எடுத்திட்டுப் போய்...பொள்ளாச்சி பிராஞ்சுக்குப் போற ஏதாவதொரு வண்டில அனுப்பிடணும்!...இதையெல்லாம்...நாம தூக்கிட்டுப் போகக் கூடாது!”
துணிமணிகளை இன்னொரு சிறிய பேக்கினுள் திணித்தாள். “ஈவினிங் ஹவுஸ் ஓனரைப் பார்த்து, “டிரான்ஸ்பர் விஷயத்தையும்...காலி பண்ற விஷயத்தையும் சொல்லிட்டு...அட்வான்ஸைத் திருப்பி வாங்கணும்”
“பொள்ளாச்சியில் நமக்குத் தெரிஞ்சவங்க யாரு இருக்காங்க?” யோசித்தான். சிந்தனை விரல்கள் மூளையின் அடுக்குகளில் “பர பர”வென்று தேடின.
கல்லூரியில் அவனோட படித்த சுதாகரின் சொந்த ஊர் பொள்ளாச்சிதான் என்பது ஞாபகத்தில் வர, மொபைலில் அவனுடைய எண்ணைத் தேடிப் பிடித்து கால் செய்தான்.
“நீங்கள் டயல் செய்த எண் தற்போது உபயோகத்தில் இல்லை” என்ற பதில் வந்தது.
“ஹும்...பசங்க எல்லோருமே காலேஜ் முடிச்சிட்டுப் போனதும் நெம்பரை மாத்திக்குவானுக போலிருக்கு!...வேற வழி?...ஒருத்தி ரெண்டு பேர் கிட்ட அந்த நெம்பரைக் குடுத்திருந்தா...பரவாயில்லை!...பத்துப் பதினஞ்சு பேர் கிட்டே குடுத்திருந்தா அவளுக கால் பண்ணி டார்ச்சர் பண்ணாம இருப்பாளுகளா?” என்று நினைத்தவாறே. தாடையைச் சுரண்டிக் கொண்டு யோசித்தவன், “கரெக்ட்..ரெட்டைமண்டை மணிவாசகத்து கிட்டக் கேட்டா நிச்சயம் அந்த சுதாகர் நெம்பர் கிடைக்கும்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு மணிவாசகத்துக்கு டயல் செய்தான்.
“ஹலோ...ரவீந்தர்...என்னப்பா ஆள் இருக்கியா?...இல்லை எங்காவது வெளி நாடு போயிட்டியா?” அந்த மணிவாசகம் எடுத்த எடுப்பில் கேட்க,
“க்கும்...நம்மையெல்லாம் எவன்யா வெளி நாட்டுக்குக் கூப்பிடறான்...இவனுகெல்லாம் உள்ளூர்ல குப்பை கொட்டத்தான் லாயக்குன்னு விட்டு வெச்சிட்டானுகளே?” என்றான் ரவீந்தர்.