"ஆமாங்க… மயூரிக்கு ஓவியம் வரையத் தெரியும்… அதுதான் அவளுடைய வேலையும்கூட என்று அல்லூ மிஸ் சொன்னாங்க"
அவளேதான்… மித்ரன் உறுதிபடுத்திக் கொண்டான். கல்யாணம் செய்யவே அவன் நிறைய யோசிக்கணும்… அதிலும் மயூரியை கல்யாணம் பண்றது என்றால்…
அதற்குள் ராம்குமார் குறுக்கிட்டார்.
"பட்… இதுபற்றி நீ மித்ரனிடம் பேசிட்டு சொல்லி இருக்கலாமே. மயூரியை பற்றி குறை சொல்ல ஒன்றுமில்லை. அவளை எனக்கு தெரியும். வானவில்லில் அவளை பொறுப்பேற்க செய்யலாம். எதிர்காலத்தில் நாம் ஆரம்பிக்க இருக்கும் இண்டீரியர் டெக்கரேஷன் தொழிலை கவனிக்கு மயூரி தகுதியானவள்தான்…" அவர்பேசிக் கொண்டே இருந்தபோது...
"மித்ரனுக்கு இல்லிங்க. நான் சைத்ரனுக்குதான் அவளை பேசினேன்" பூரணி குறுக்கிட்டார்.
"என்னது சைத்ரனுக்கா?" அதிர்ச்சி அவருக்கு மட்டும் அல்ல… மித்ரனுக்கு மட்டுமல்ல… சைத்ரனுக்கும்தான்.
'ஆவ்… ஏவுகணையை விடறதுக்கு முன்னாடி கவுன்டௌன்லாம் சொல்லுவாங்க.… இப்படி தடக்குனு தலைல போட்டா நான் என்னாவேன்' பரிதாபமாக மித்ரனை பார்த்தான்.
ராம்குமாரும் சைத்ரன்-ஹைந்தவி விஷயத்தை யூகித்திருந்ததால் திணறினார்.
"அதெப்படி பூரணி… மித்ரன் இருக்கறப்ப சைத்ரனுக்கு பொண்ணு பார்ப்பே.."
"அவனுக்கு லவ் மேரேஜ்தான் சரியா இருக்கும்னு ஜோஷ்யர் சொன்னாருல்ல. நாம சைத்துவுக்குதான் அரேஞ்ச் மேரேஜ் பண்ண முடியும்.."
"ஓ… நாம இதுபற்றி பேசணும் பூரணி."
"பேசறதுக்கு ஒண்ணுமில்ல… மயூரிதான் என் மருமகள்னு நான் வாக்கு தந்திருக்கேன். அதை நீங்க எல்லாரும் காப்பாத்தியே ஆகணும்" பூரணி படக்கென்று எழுந்து தன் அறைக்கு சென்று விட்டார்.