"என் தங்கம்… சரியா சொல்லிட்ட. இன்னிக்கு நான் கோவிலுக்கு போயிருந்தப்ப அவங்கள பார்த்தேன். அவங்களுக்கு . ரொம்ப வயசாயிடுச்சு…"
"உங்களுக்கே ஆயிடுச்சும்மா" என்று சொன்ன சைத்ரன், மித்ரனை முறைப்பதை பார்க்கவும் "சாரி… நீங்க சொல்லுங்கம்மா" என்றான்.
"ம்… அவங்கள்ட்ட பேசிட்டிருந்தேன். காசியில ஒரு ஆஸ்ரமத்துல தங்கிட்டாங்களாம்."
"இங்க எதுக்கு வந்திருக்காங்களாம்?" ராம்குமார் கேட்டார்.
"அவங்க பொண்ணு துளசி தெரியும்ல… காதல் கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போனாள்ல… அவள் இப்ப இறந்துட்டா… அவளோட பொண்ணு…"
"அந்தம்மாவுக்கு பேத்தினு சொல்லிட்டு போகலாம். மெகா சீரியல் மாதிரி பேசறாங்க. சொன்னா என்னை தப்பு சொல்றாங்க" சைத்ரன் முணுமுணுத்தான்.
"சும்மா இருடா… அவங்களுக்கு பேத்தியை பற்றிய கவலைதான் அதிகமா இருக்கு… அந்த பொண்ணுக்கு ஒரு கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு கலங்கினாங்க"
"நாம ஏதாவது உதவி செய்யணுமா பூரணி?. அவங்களுக்கு நாம கடன்பட்டிருக்கோம். ஈவன்.. வானவில்லை ஆரம்பிக்ககூட அவங்களோட நகையையும்தான் முதலீடா செஞ்சோம்."
"அந்த பொண்ணுக்கு மிஸ்ஸை விட்டால் வேறு யாரும் இல்லை. அவங்களுக்கு பேத்தி பாதுகாப்பா இருக்கணும்… அப்படித்தானே பயம் இருக்கும்.."
"இருக்கும். அதுக்கு என்ன செய்யனும்?" ராம்குமார் கவனமாக கேட்டார்.
"அதனால அவங்கள்ட்ட ஒரு வாக்கு கொடுத்திட்டேன்…"
"என்னனு?"
"மயூரியை நம்ம வீட்டு மருமகளாக எடுத்துக்கறேன்னு"
மயூரியா… மருமகளா… மித்ரன் திடுக்கிட்டான். அந்த பொண்ணுதானா… அதுதான் அவங்க வீட்டுக்கு அம்மா போயிருந்தாங்களா…?
"யார்… இந்த ஓவியம் வரையுமே அந்த பொண்ணா…?" ராம்குமார் விசாரித்தார்.