"ஏய்… என்ன பதிலே காணோம். உங்க அண்ணன் இந்த ட்விஸ்டை உங்கிட்ட சொல்லலையா? காலையும் மாலையும் கதையே மாறுதுல்ல. நித்தம் ஒரு சித்தம்னு சொல்லுவாங்க."
"அது… உங்கிட்ட ஒண்ணு சொல்லணும் ஹைடி… கோவிச்சுக்க கூடாது."
"ம்… இழுக்கறியே… என்ன விஷயம்"
"அண்ணனுக்கு மயூரியை இப்பவும் பிடிக்காது…"
"வாட்… அப்புறம் எதுக்கு…"
"அம்மா மயூரியை மருமகள்னு சொன்னுது…" சொல்லலாமா வேண்டாமா என்று தடுமாறி… சொல்லி தொலைத்தான்.
"எனக்காகதான் பேசினாங்களாம்…"
"---"
"ஹைடி…"
"----"
"ஏதாவது சொல்லும்மா எனக்கு பயமா இருக்கு" அவன் சொன்னதை கேட்டு ஹைந்தவி மனம் ஒடிந்து போய் விட்டாளோ என்று பதறினான்.
"என்ன சொல்லணும்… இந்த கல்யாணம் நடக்காது. நடக்க விட மாட்டேன்"
சூப்பர்… ஹைடி டென்சன் ஆகிட்டாள். அவளையே அம்மாவிடம் வந்து பேச சொல்லலாம்…
"அதைதான் நானும் சொல்றேன. நீ இந்த கல்யாணத்தை தடுத்து விடுவேன்னும் தெரியும். நீ என்னை எவ்வளவு விரும்பறேனு எனக்கு தெரியும். விட்டு தர மாட்டாய் ஹைடி"
"மண்ணாங்கட்டி… நான் உன்மேல வச்சிருக்கற அளப்பரிய காதலால் அப்படி சொல்லலை. மயூரி ரொம்ப நல்ல பொண்ணு. உன்னை மாதிரி ஒரு ஏமாத்துகாரனை அவள் கல்யாணம் செய்துக்க கூடாது."
"ஏமாத்துகாரனா…"
"இன்னும் மோசமா சொல்லுவேன். உங்க அம்மாகிட்ட வந்து சொல்லுவேன். என்னோட மயூரியை இந்த கல்யாணத்திலிருந்து காப்பாத்திடுவேன்."
"ஹைடி… அம்மாட்ட பேசப் போறியா?"