தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 09 - முகில் தினகரன்
சம்பூர்ணம்மாள் குடியிருப்பில் ஒரு குருஷேத்திரம் நடந்து கொண்டிருந்தது.
“நீயெல்லாம் ஒரு மனுஷியா?...உனக்கு மனசாட்சின்னு ஒண்ணு இருக்கா?...இல்லையா?...ஒரு பச்சைக் குழந்தையை இப்படிப் போட்டு அடிச்சிருக்கியே?...நீயும் ஒரு குழந்தையைப் பெத்து வளர்த்தவதானா?...ஹூம்...வயசாகி என்ன பிரயோஜனம்...மனுஷிக்கு இன்னும் குழந்தைகளோட சுபாவத்தைப் புரிஞ்சுக்கத் துப்பில்லே!...ராட்சஸி...நீலி...அரக்கி...என் குழந்தையை அடிச்ச உன் கை விளங்காமப் போக!...உன்னோட கால் ரெண்டும் இழுத்திட்டுப் போக!...நீ வாந்தி பேதில செத்துப் போக!”
மூன்றாவது போர்ஷன் நரசிம்மனின் மனைவி பானு, வீட்டுக்காரம்மா சம்பூர்ணத்தை கண்ட மேனிக்குத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் காம்பௌண்டிற்குள் நுழைந்த அர்ச்சனாவிற்கு அது பெருத்த ஆச்சரியமாயிருந்தது. “நேற்று வரை வாயில்லாப் பூச்சியாய் இருந்த அந்த பானுவா இன்னிக்கு இந்தப் போடு போடுறது?...” அவளால் நம்பவே முடியவில்லை.
அர்ச்சனாவைப் பார்த்ததும் அந்த பானுவிற்கு மேலும் தைரியம் வந்து விட, தடித்த வார்த்தைகளை தரமின்றிக் கொட்ட ஆரம்பித்தாள். எப்படியும் அர்ச்சனா தனக்கு ஆதரவாய் குரல் கொடுப்பாள், என்கிற நம்பிக்கையில்.
அதே நேரம், வீட்டு ஓனர் சம்பூர்ணத்தின் மனதில் வேறு மாதிரியான எண்ண ஓட்டம் நிலவியது. “ஆஹா...இவ வேற வந்துட்டாளே!...சும்மாவே என் கூட சரிக்குச் சரி வாயடிப்பா...இப்ப இந்தப் பிரச்சினை வேற கிடைச்சிடுச்சு...என்னைப் போட்டுக் கிழிக்கப் போறா!”
ஆனால், அவர்கள் இருவரின் எண்ணத்தையும் பொய்ப்பிக்கும் வகையில் அமைதியாய், படு சாந்தமாக, அங்கு நடக்கும் எதையும் கண்டு கொள்ளாமல், “தான் உண்டு...தன் வேலை உண்டு” என்கிற பாணியில் நிதானமாய் நடந்து வீட்டிற்குள் சென்றாள் அர்ச்சனா.
வெளியே வாக்குவாதம் தொடர்ந்தது.
“வாடகைக்குக் குடியிருக்கறவங்க எல்லாரும் உங்களோட அடிமைகளில்லை!...அதை ஞாபகம் வெச்சுக்க பெருசு” இது பானுவின் குரல்.
“ஏய்...அதே மாதிரி வீட்டை வாடகைக்கு விட்டவங்க எல்லாரும் முட்டாள்களில்லை...நீங்க எது செஞ்சாலும் பொறுத்திட்டுப் போறதுக்கு!” இது சம்பூர்ணத்தின் பதில் குரல்.
“அப்படி என்ன செஞ்சிடுச்சு என் குழந்தை?...உங்க வீட்டை இடிச்சுத் தரை மட்டமாக்கிடுச்சா?...இல்லை உங்க வீட்டைச் சுத்தியும் அகழி வெட்டி வெச்சிடுச்சா?...ஏதோ வயிறு சரியில்லை...அதனால அதுக்கே தெரியாம வாசல்ல கக்கூஸ் போயிடுச்சு...அதை நானும் அடுத்த நிமிஷமே கிளீன் பண்ணிட்டேன்!...அப்புறமென்னா?...நீ பெத்தது மட்டும் பொறந்ததிலிருந்தே டாய்லெட்டிற்குள்ளார போய்த்தான் போச்சுகளோ?...” பானு விடாமல்