எப்பவும் போல் சிரித்த முகமாவே இருக்கிறான். இத்தனை பேர் முன்னால் பேசவும் கூச்சம். ஒன்றும் பேசாமல் லேபில் இருந்து வெளியேறிவிட்டாள். வீடு திரும்பியவளுக்கு தினேஷின் நினைவாகவே இருக்க, தொலைபேசியை எடுத்தாள், கண்மணியின் டைரியில் இருந்து தினேஷின் எண்ணைக் குறித்து வைத்திருந்தவள், மனதுக்குள் அதைப் பதிந்தே வைத்திருந்தாள். ஒவ்வொரு எண்ணை அழுத்தவும் இதயம் படபடத்தது, அம்மா மாடியில் இருந்து துணிகளை எடுத்து வருவதற்குள் பேச வேண்டும் என்ற பதட்டம் வேறு. டிவியை ஆன் பண்ணி வைத்திருந்தாள். அங்கே தொலைபேசி ரிங் போனதும் இதயத்துடிப்பு இன்னும் கூடியது. அந்தப் பக்கம் தினேஷ் போனை எடுத்து ,”ஹலோ ! ஹல்லோ!” எனவும், இவள் வார்த்தைகள் வராமல் மௌனிக்க, “ஹல்லோ! யாரு ரம்யாவா? ரம்யா தானே!” எந்த பதிலும் சொல்லாமல், டிவியில் அந்நேரம் ஒளிபரப்பான அந்த திரைப்பாடலை ஒலிக்க விட்டாள், “ஒரு தடவை சொல்வாயா உன்னை எனக்குப் பிடிக்கும் என்று! ஒரு பார்வை பார்ப்பாயா உன்னை எனக்குப் பிடிக்கும் என்று!” அம்மா படியிறங்கும் சத்தம் கேட்கவும், போனை வைத்துவிட்டு புத்தகத்தைப் புரட்டத் தொடங்கினாள். எதற்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம், நாளையோடு போதும், அவனை நேரில பார்த்து என்னோட விருப்பத்தையும் சொல்லப் போறேன்.
“அம்மா ஸ்டேசனரி ஸ்டோர் வரைக்கும் போகணும்!” என்று பணம் வாங்கிக்கொண்டு தேவையான பென்சில்கள், சார்ட் வாங்கிவிட்டு, டெய்ரி மில்க் சாக்லேட் ஒன்றை வாங்கிவிட்டு வீட்டுக்கு வந்தாள். வீட்டுக்குள் நுழைகையில் அப்பா இருந்தார். என்னமா இதெல்லாம் வாங்க நீ ஏன் போற? என்கிட்டே சொல்லு! இல்லை ரகுகிட்ட வாங்க சொல்லு! வயசுப் பொண்ணு விளகேத்தின பிறகு வெளில எங்கேயும் போறது நல்லாவா இருக்கு? அப்புறம் உங்க பொண்ணு அங்கே நின்னுச்சு இங்கே நின்னுச்சுன்னு எதாச்சும் பேச்சு வரும்! என்றாவறே எழுந்தார். ரம்யாவிற்கு பக்கென்றிருந்தது. இவ்வளவு கண்டிப்பாக இருக்கும் தன் குடும்பத்தில் காதல் என்ற வார்த்தை காதில் விழுந்தால் என்னாகும் என்ற அச்சம் லேசாக வந்தாலும், அதே காதல் தந்த துணிச்சல் அவளின் காதலில் தடையாக எது வந்தாலும் சமாளிக்கலாம் என்ற உத்வேகத்திற்குத் தள்ளியது.
மறுநாள், காலையில் சத்யாவை பேருந்து நிறுத்தத்தில் தேடினாள். அவளின் கல்லூரிப் பேருந்து சீக்கிரமே சென்றிருந்தது. அவள் வழக்கமாகப் பூ வாங்கும் அக்கா, எழுந்து வந்து, “பாப்பா! இந்த ரெட் ரோஸ் பூவை உன்கிட்ட குடுக்க சொல்லிட்டு, சத்யா பஸ் ஏறிடுச்சு. சாயங்காலம் உன்னைப் பார்க்குமாம்! சொல்லுச்சு!” என்றவாறே ஒரு சிவப்பு ரோஸ் பூவினை நீட்ட, தன் தேவையறிந்து பூவைக் கொடுத்து சென்றிருக்கும் தன் உயிர்த்தோழிக்குக் காற்றில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு, நன்றிக்கா! என்று பூவை வாங்கியவள் அதைத் தன் பையில் ஒரு கவரில் பத்திரப்படுத்தினாள்.