தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 08 - முகில் தினகரன்
பொள்ளாச்சி பிராஞ்ச் ஆபிஸிற்கு வந்த ரவீந்தர், அந்த பிராஞ்ச் மேனேஜரிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்ள, அவர் மற்றவர்களுக்கு ரவீந்தரை அறிமுகப்படுத்தினார்.
“நம்ம பிராஞ்ச்க்கு புதுசா ஒரு மார்க்கெட்டிங் மன்னன் வரப் போறதா சொன்னேனே?...அந்த மன்னன் இவர்தான்!...பேரு...ரவீந்தர்” என்றார் அந்த பிராஞ்ச் மேனேஜர்.
“வெல் கம் சார்” என்றபடி எல்லோரும் புன்னகையுடன் ரவீந்தரை வணங்க, பதிலுக்கு தானும் வணங்கினான்.
“ஓ.கே...உங்க ஒவ்வொருவரையும் அப்புறமா தனியே வந்து மீட் பண்ணிப் பேசறேன்!...இப்ப பிராஞ்ச் மேனேஜரோட என்னோட மார்க்கெட்டிங் ப்ரோக்ராம் பண்ணி டிஸ்கஸ் பண்ணப் போறேன்!....ஓ.கே....பை...” என்றபடி பிராஞ்ச் மேனேஜரைப் பார்த்து, “சார்...உங்க ரூமுக்குப் போவோமா?” என்று ரவீந்தர் கேட்க,
அந்த பிராஞ்ச் மேனேஜர் உறைந்து போய் சிலையாய் நின்று கொண்டிருந்தார்.
“சார்...சார்” என்று அழைத்தபடியே அவர் தோளைத் தொட்டு ரவீந்தர் உசுப்ப,
சுய நினைவிற்கு வந்த அந்த மேனேஜர், “புதுசா டிரான்ஸ்பர் ஆகி இந்தக் ஆபீஸுக்குள்ளார வந்த மூணாவது நிமிஷம் மார்க்கெட்டிங் டிஸ்கஸனை ஆரம்பிக்கறீங்களே?...இதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை!..இதுவே வேறொருவரா இருந்திருந்தா இன்னிக்கு பூராவும் வேலையை ஆரம்பிக்காம...எல்லோரோடவும் பேசியே பொழுதைக் கழிச்சிருப்பாங்க!...ரவீந்தர்...ஐ யாம் ரியலி ப்ரொவ்ட் ஆஃப் யூ மேன்” என்று சொல்லி ரவீந்தரின் முதுகில் தட்டிக் கொடுத்தார்.
அவர்களிருவரும் பிராஞ்ச் மேனேஜர் அறை நோக்கிச் செல்ல, மற்ற ஊழியர்கள் தத்தம் இருக்கையில் அமர்ந்து தங்கள் வேலையைத் தொடர,
ஒருத்தி மட்டும், உடனடியாக வேலையில் ஈடுபட முடியாமல் ரவீந்தரையே நினைத்துக் கொண்டிருந்தாள். “இவனை நான் எங்கியோ பார்த்திருக்கேன்...இவன் முகம் எனக்கு ரொம்ப பரிச்சயமான முகமாய் இருக்கு”
மதியம் வரையில் பிராஞ்ச் மேனேஜருடன் டிஸ்கஸனில் ஈடுபட்டிருந்த ரவீந்தர் மதியத்திற்கு மேல் மற்ற ஸ்டாப்களிடம் வந்தான். ஒவ்வொருவர் இருக்கைக்கும் சென்று பத்துப் பதினைந்து நிமிடங்களைச் செலவழித்தவன், அந்த ஒருத்தி மேஜைக்கு வந்து அமர்ந்து பேச வாயெடுக்க, சட்டென்று அவள் பேசினாள், “என் பெயர்...கோகிலா!...இங்க அக்கௌண்ட்ஸில் இருக்கேன்!...எனக்கு உங்களை இதற்கு முன்னால் எங்கோ பார்த்த்து போலவே இருக்கு!.....பட்...எங்கே?ன்னு புரியலை!”
மெலிதாய்ப் புன்முறுவல் பூத்த ரவீந்தர், “உங்களுடைய இலக்கிய ஆர்வத்திற்கு என்னுடைய பாராட்டுக்கள்” என்றான்.