கணவன் அப்பொழுதான் குளிக்க சென்றிருந்தான்...
அவர்களை அழைத்தபடியே மெது மெதுவாக வாசல் வரை சென்று பார்க்க தெருவில் ஒரு ஈ, காக்காய் இல்லை... அப்பொழுதுதான் தன் அன்னை சொன்னது நியாபகம் வந்தது... அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் எல்லாரும் இவர்களின் தெரு முனையில் ஏதோ தர்ணாவில் ஈடுபட்டுள்ளதாகவும், அதனால் சுற்றிக் கொண்டே மருத்துவமனை சென்றதாகவும் கூறியது... இருந்தாலும் முடிந்தவரை குரலுயர்த்தி அக்கம் பக்கத்தில் இருப்பவரை அழைத்து பார்த்தாள்... ஒருவரும் வருவதாக தெரியவில்லை....
அடுத்த இருவது நிமிடத்தில் தன் கணவர் அலைபேசியை எடுக்க, தன் நிலையை சொல்லி அழ ஆரம்பித்தாள் சாந்தி...
“சாந்திம்மா அழுவாத... என்னை இப்போ வெளிய வர விடமாட்டாங்க... பக்கத்து வீட்டு ரமேஷோட அம்மா இறந்து போனதுக்கே போய் பார்க்க அனுமதி கொடுக்கலை... நீ வெளிய போய் யாரையானும் கூப்பிட்டு பாரேன்...”
“நான் கூப்பிட்டு பார்த்துட்டேங்க... யாரும் வர மாட்றாங்க... தெரு முனைல கும்பலா நின்னுட்டு ஏதோ கோஷம் போட்டுட்டு இருக்காங்க... வாசக்கதவு வரை போகவே எனக்கு பத்து நிமிஷம் ஆச்சு... தெரு முனை வரைக்கும்லாம் போக முடியாதுங்க...”
“ஐயோ முருகா... ஏய் என்ட்ட பாஸ்கர் நம்பர் இருக்குது... அவன் உங்க தெருவுக்கு அடுத்த தெருலதானே இருக்கான்... அவனை வர சொல்றேன் இரு...”
சாந்தியின் கணவர், பாஸ்கரை தொடர்பு கொள்ள முயல, அவரும் போராட்டத்தில் கலந்து கொண்டதால், அங்கிருந்த சத்தத்தில் அலைபேசியின் அழைப்பு கேட்கவில்லை...
“சாந்திம்மா அவர் போன் எடுக்க மாட்டேங்குறாரு... நீ மெதுவா மறுபடியும் வாசலுக்கு போய் பாரேன் யாரானும் வந்திருப்பாங்க... நான் லைன்லையே இருக்கேன்...”
மறுபடியும் சாந்தி வாசலுக்கு சென்று பார்க்க அந்த தெருவே காலியாக இருந்தது... பக்கத்து வீட்டின் வாசலில் அமர்ந்திருக்கும் வயதான பாட்டிகளைக் கூட காணவில்லை...
“யாரும் காணுங்க...”, அவளால் நிற்க கூட முடியவில்லை...
“வேற வழியே இல்லைம்மா... நீ மெதுவா தெரு கடைசி வரை போக முடியுதான்னு பாரு...”
“என்னால சுத்தமா முடியலைங்க... காலுல வேற அடிப்பட்டிருக்கு... வீங்க ஆரம்பிக்குது... ரோடுல எங்கனா விழுந்துட்டா என்ன பண்ண.... நீங்க எப்படியாச்சும் வரப் பாருங்களேன்...”
“வர முடிஞ்சா வர மாட்டேனே... இப்படியா பேசிட்டு இருப்பேன்... சரி இரு நான் இங்க செக் போஸ்ட்க்கிட்ட இருக்கற ஆளுங்க கிட்ட பேசிப்பார்க்கறேன்...”, சாந்தியின் கணவர் சொல்ல அவள் அழுதபடியே தனக்கு அந்தத் தெருவில் தெரிந்தவர்களுக்கு போன் செய்ய ஆரம்பித்தாள்... ஒருவரும் எடுத்த பாடுதான் இல்லை...