தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 10 - முகில் தினகரன்
“உதிரத்தை உணவாய் இட்டு – தினம்
உறங்காது உனைக் காத்தவளை
அதரத்தில் முத்தம் இட்டு - உனை
ஆக்கிரமித்த மனையாள் சொல்கேட்டு
பதராக எண்ணிப் பார்க்கிறாயே – அவள்
பாசம் மறந்தே திரிகிறாயே
இதரன் ஆகிப் போனாயோ? – அட
இதற்கா பெற்றாள்...வளர்த்தாள்?”
(நாச்சியார்)
வாட்ஸ் அப்பில் வந்திருந்த அந்தக் கவிதையைப் படித்தவன், உடனே கோகிலாவுக்கு கால் செய்தான், “நாச்சியார் என்கிற கோகிலாவுக்கு காலை வணக்கம்!...அசத்தறீங்களே?”
“நன்றிங்க!....ஆக்சுவலா...அது முப்பத்திரெண்டு வரிக் கவிதை!...அதுல வெறும் எட்டு வரிகளைத்தான் அனுப்பினேன்!...வாட்ஸ்அப்ல நிறைய டைப் பண்ண பொறுமையில்லை!...”என்றாள் கோகிலா.
“அது பரவாயில்லை!...இன்னிக்கு ஆபீஸுக்கு வரும் போது ஒரு பிரிண்ட் அவுட் கொண்டு வாங்க...அங்க வெச்சுப் படிச்சுக்கறேன்” என்றான் ரவீந்தர்.
“ஆபீஸிலேயே பிரிண்ட் எடுத்துத் தர்றேன்!...அப்புறம் இன்னொரு மேட்டர்...உங்க கவிதை ஒண்ணு அனுப்புங்க சார்...” என்றாள் கோகிலா.
“அதான் சங்கொலி பத்திரிக்கைல ஜோதீஸ்வர்!ங்கற பேர்ல எழுதிட்டிருக்கேனே?” என்றான் ரவீந்தர்.
“ம்ஹ்ஹும்...இப்ப...உடனே எழுதி...அனுப்புங்க!...” கெஞ்சலாய்க் கேட்டாள் கோகிலா.
“ம்ம்ம்...ஓ.கே..அனுப்பிட்டா போச்சு”
சாகசக்காரியே!!
ஆறாம் பிராயத்தில் என்னுள் அரிச்சந்திரனை
ஆணியறைந்து சென்ற அத்தைப் பாட்டி!
பத்தாம் பிராயத்தில் என்னுள் பாசுரங்களைப்
பதியன் போட்டுச் சென்ற பாட்டு டீச்சர் பார்வதி!
பதினாறாம் பிராயத்தில் என்னுள் பருவச் சூட்டைப்
பரப்பிச் சென்ற பக்கத்து வீட்டு பத்மா!
இருபதாம் பிராயத்தில் என்னுள் இளமை ராகம்