தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 13 - முகில் தினகரன்
ஞாயிறு காலை.
தேவநாதன் வீட்டில் எல்லோரும் எந்த அளவிற்கு உற்சாகமாக இருந்தனரோ...அதே அளவுக்கு அச்சத்தோடும் இருந்தனர். எந்த நிமிடத்தில் வீட்டுக்கார சம்பூர்ணம் தன் திருவாய் மலர்ந்து ஒரு களேபரத்தை உண்டாக்கப் போகிறாளோ?..என்கிற பயத்தோடே திரிந்தனர்.
“அவகிட்ட வேற மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ற விஷயத்தைச் சொல்லவில்லை!...அதுக்கே செமக் கடுப்பில் இருப்பாள்...நேற்றிலிருந்தே அவள் முகம் கொஞ்சம் வில்லியாட்டம்தான் இருந்தது!...கடவுளே!...என்ன நடக்கப் போகுதோ?...” தேவநாதன் “திக்...திக்” இதயத்துடன் அங்குமிங்கும் உலாத்திக் கொண்டிருக்க,
“அம்மா...மகமாயி!...தாயி!..இன்னிக்கு ஒரு நாள்...அட...ஒரு நாள் கூட வேண்டாம்!...ஒரு அரை நாள்....அந்த சம்பூர்ணம் வாய் திறக்காத மாதிரி பண்ணிடேன் தாயி!...உனக்கு அபிசேகம்...ஆராதனை எல்லாம் பண்றேன்!” பார்வதி “பக்...பக்” நெஞ்சுடன் பிரார்த்தித்தாள்.
சுலோச்சனா வழக்கம் போல் பெண் பார்க்கும் படலத்தில் ஆர்வமே இல்லாதிருந்தாள்.
அர்ச்சனா தனக்குத் தெரிந்த மேக்கப் கலைகளை எல்லாம் சுலோச்சனா மீது ஏற்றி அவளை அழகுப் பதுமையாக்கி வைத்திருந்தாள்.
அதே நேரம் தான் எந்த வித ஒப்பனையும் செய்து கொள்ளாமல், சாதாரணமாக...மிக மிகச் சாதாரணமாகவே இருந்தாள். எக்குத்தப்பாய் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கண்ணில் பட்டு விட்டால் கூட “ச்சை...இதென்ன இந்தப் பொண்ணு இவ்வளவு கேவலமாயிருக்கு!”ன்னு நெனச்சு சுலோச்சனாவையே தேர்ந்தெடுப்பார்கள், என்கிற எண்ணத்தில் அவ்வாறு இருந்தாள்.
கூடத்தில் ஊதுபத்தியும், ரூம் ஸ்பிரேயும் சேர்ந்து வித்தியாசக் கலவையாய் ஒரு நறுமணத்தைப் பரப்பிக் கொண்டிருக்க,
சமையலறையிலிருந்து வீசிய பலகாரங்களின் நறுமணம் காம்பௌண்டு முழுவதும் களை கட்டியிருந்தது.
தேவநாதன் அடிக்கடி வந்து வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.
அந்த நிலையிலும் அவர் மனம் வீட்டு ஓனர் சம்பூர்ணத்தைத்தான் திரும்பத் திரும்ப நினைத்தது. “என்னாச்சு?...இன்னிக்கு காலையிலிருந்து அந்த சம்பூர்ணத்தோட சத்தத்தையே காணோம்?...ஆளும் கண்ணுல படவேயில்லை!...ஒருவேளை வெளிய எங்காவது போயிட்டாளோ?” நினைத்துப் பார்க்கவே மனம் இனித்தது. நப்பாசையுடன் அவர்கள் வீட்டுக் கதவைப் பார்த்தார். அது உள் பக்கமாய் தாழிடப்பட்டிருக்க, “க்கும்!...உள்ளாரதான் இருக்கு சனியன்!” முணுமுணுத்தார்.
சரியாக பத்து மணி வாக்கில் வந்து நின்ற காரிலிருந்து மாப்பிள்ளையும்...அவரது