மறைந்து கொண்டாள்.
கிச்சனுக்குள் சென்றாலும் அவள் மனம் ஜனா அருகிலே இருந்தது. எங்கே தன்னுடைய அவன் தனக்கு இல்லாமல் போய்விடுவானோ என்று ஒரு பதட்டமா? அல்லது கணவனின் பாசத்தை பெற முடியவில்லையே என்ற ஏக்கமா? என்று புரியாமல் அவள் தன்னையே வருத்திக் கொண்டு இருக்க அவள் துக்கம் வெளியே நீர்த்துளிகளாக வர துடித்தது.
எவ்வளவு பெரிய பிரச்சனைகளை கடந்து வந்து விட்டேன். இதற்கு அழுவதா... இதையும் என்னால் சமாளிக்க முடியும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு வெளி வர துடித்த விழி நீரினை உள்ளுக்குள்ளேயே அடைத்துக் கொண்டாள்.
ஜனா ஹாலில் அமர்ந்திருந்த ஸ்வேதா உடன் பேசுவது தெளிவாக கேட்டது. ஜனாவிடமிருந்த தெளிவு ஸ்வேதாவிடம் இல்லை என்பது அவளது குரலில் தெளிவாக தெரிந்தது.
ஜ....ஜனா... நான் உங்ககிட்ட... இல்லை உங்களை... திருமணம்... அதாவது திருமணத்தில் என்று உளறுவதை உணர்ந்த ஜனா, ஸ்வேதா பின்பக்கம் தோட்டம் இருக்கிறது.. வெரைட்டி ப்ளார்ஸ் இருக்கு... பார்க்கறியா என்று கேட்க அவளும் வேகமாக எழுந்து கொள்ள ஸ்வேதா உடன் தோட்டத்திற்கு சென்றான்.
சொல்லு ஸ்வேதா... ஏதோ சொல்ல நினைக்கிற ஆனால் என்கிட்ட பேச முடியாமல் தடுமாறின.. அதனால்தான் உன்னை இங்கு அழைத்து வந்தேன். சொல்லு... என்ன சொல்ல நினைக்கிறாய்.
ஜனாவின் குரலில் இருந்த தெளிவு ஸ்வேதாவிற்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
அந்த ஆச்சரியத்தை மறைக்காமலேயே ஜனா நீங்க ரொம்பவே மாறி விட்டீர்கள் என்றாள்.
மாறி விட்டேனா அல்லது என்னை மாற்றி விட்டார்களா என்று தெரியவில்லை... எது எப்படியோ நான் இப்பொழுது அமைதியாக நிம்மதியாக இருக்கிறேன் என்று மட்டும் புரிகிறது. எல்லாவற்றுக்கும் காரணம் ஜனனி தான்.
எப்பொழுதும் கடவுள் கொடுப்பது சரியாக இருக்கும் என்பதை இப்போது நம்புகிறேன். பார்க்கும் போது தவறாக தெரிந்தாலும் உணர்ந்து கொள்ளும் பொழுது கடவுளின் வழி சிறந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்றான் ஜனா.
அது என்னவோ உண்மைதான் என்று கூறிய ஸ்வேதாவிடம் ஒரு தெளிவற்ற தன்மை இருப்பதை உணர்ந்த ஜனா, எல்லாருக்கும் சிறந்தவற்றை மட்டுமே கொடுப்பார்... உனக்கும் தான். இனி உன் வாழ்விலும் எப்பொழுது மகிழ்ச்சி தான் இருக்கும் என்று சொல்ல ஒரு நிமிடம் விழி உயர்த்தி ஜனாவை நேருக்கு நேராக பார்த்தாள்.
வீட்டிற்கு வந்ததிலிருந்து இந்த நொடிவரை அவன் முகத்தைப் பார்க்காமல் அங்கும் இங்கும் ஏதோ பேசி சமாளித்தவள் முதன் முறையாக அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தாள்.