கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு எனக்கு டீ இல்லையா ஜனனி என்று கேட்க உள்ளே சென்று மற்றொரு டீ கோப்பையுடன் வந்தவள் அஸ்விட்டிடம் கொடுக்க நீயும் உட்காரு என்றான் ஜனா.
நேரடியாக தன்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாதவன் இன்று முதன்முறையாக ஸ்வேதாவின் முன்னால் அமர்ந்து கொண்டு ஜானு என்று அழைப்பது சந்தோஷப்பட வேண்டிய விஷயமா? இல்லை கவலைப்பட வேண்டிய விஷயமா? என்று மனதுக்குள் ஒரு போராட்டமே நடந்து கொண்டு இருந்தது ஜனனிக்கு.
இது உண்மையான அன்புடன் கூறப்படுகிறதா? இல்லை, இவளிடம் முன்பாக நாங்கள் நன்றாக இருக்கிறோம் என்று காண்பிப்பதற்காக நடத்தப்படுகின்றதா என்று பலவிதமான உணர்வுகள் எழுந்து மறைந்து கொண்டிருந்தது.
ஆனால் எதையும் யோசிப்பதற்கு நேரம் கொடுக்காமல் அம்மா உட்காருங்க என்றாள் தனு.
எப்பொழுதும் ஜனா அமர்ந்திருக்கும் சோபாவிற்கு எதிரே இருக்கும் சோபாவில் அமர்வது வழக்கம். ஆனால் இப்பொழுது மூன்று ஷோபாவிலும் ஆளுக்கு ஒருவராக அமர்ந்திருக்க வேறு வழியில்லாமல் ஜனாவின் பக்கத்தில் அமர்ந்தாள் ஜனனி.
ஆனால் தெரியாமல் கூட அவன் மீது உரசி விடக்கூடாது என்று கவனமாக அமர்ந்தாள். அவளை பார்க்க ஜனாக்கு சிரிப்பு வந்தது. ஆனாலும் எதையும் கவனிக்காதது போல தனக்குள் சிரித்துக் கொண்டான். சிரித்துக் கொள்வதோடு நிறுத்தாமல் வேண்டும் என்றே அவள் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டான்.
இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியாமல் ஜனனி திகைக்க ஜனாவோ இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்டு அஸ்விட் இது ஸ்வேதா... நியாபகம் இருக்கிறதா என்றான்.
முன்பு பார்த்தது... சரியாக ஞாபகம் இல்லை என்றவன் நல்லா இருக்கீங்களா என்று பெயருக்காக கேட்டு வைத்தான். ஆனால் அது எதையும் ஜனா கவனித்ததாக தெரியவில்லை. அவன் தற்செயலாக தான் ஜனனியை அருகில் அமர வைத்தது. ஆனால் அவளோடு நெருங்கி அமர்ந்து இருக்கும் இந்த உணர்வு அவனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்த அதை ரசித்து கொண்டு இருந்தான்.
ஆனால் அஸ்விட் பேச்சில் எந்த ஒரு அக்கறையும் இல்லை, ஜனா சொல்லிவிட்டான் என்பதற்காக ஒரு வார்த்தை கேட்டான் என்பதை அவன் முகம் அப்பட்டமாக தெரியப்படுத்த ஜனனி அஸ்விட்டை பார்த்து கொண்டு இருந்தாள்.
ஸ்வேதாவின் முழு கவனமும் ஜனனியின் மடியில் அமர்ந்திருந்த தனு மீதே இருந்தது.
ஆளுக்கு ஒரு விஷயத்தில் கவனத்தை பதித்து இருக்க அம்மா.... என்று ஜனனியின் கவனத்தை தன் பக்கம் திரும்பினாள் தனு.