இவங்க அந்தப் பொண்ணோட வந்து வழிபட்டுட்டு...இவங்க குறை நிவர்த்தி ஆகலைன்னா...ஜன்ங்களுக்கு இப்ப உருவாகியிருக்கா நம்பிக்கை காணாமல் போயிடுமே?”
“என்ன சாமி யோசிக்கறீங்க?” அந்தப் பெண்மணி கேட்க,
“வந்து...நீங்க உங்க பொண்ணை தாராளமா அழைச்சிட்டு வரலாம்!...வழிபடலாம்!...ஆனா அந்தப் பொண்ணை ஒரு நல்ல நாள் பார்த்து அழைச்சிட்டு வந்தால் உடனே பிரச்சினை நீங்கும்!...நாளையிலிருந்து ஒரு பத்து நாளைக்கு நல்ல நாளே இல்லை!...அதான் யோசிக்கறேன்”
“இன்னிக்கு நல்ல நாள்தானே சாமி?”
“நல்ல நாள்தான்!...ஆனா இதுக்கு மேலே நீங்க உடுமலைப் பேட்டை போய் உங்க மகளைக் கூட்டிட்டு வர்றதுக்குள்ளே நல்ல நேரம் போயிடுமே?”
“சாமி...இப்ப நல்ல நேரம்தானே சாமி?”
“ம்...இப்பயிருந்து அடுத்த ஒரு மணி நேரத்துக்கு நல்ல நேரம்தான்!...ஆனா உங்களால் உடுமலைப் பேட்டை போயிட்டு ஒரு மணி நேரத்துல திரும்பி வர முடியாதே?’ சுதாகர்ஜி சொன்னார்.
“உடுமலைப் பேட்டை போக வேண்டிய அவசியமேயில்லை சாமி!...எங்க பொண்ணு கார்லதான் இருக்கா...நான் போய் இப்பவே கூட்டிட்டு வர்றேன்”...என்று சொல்லி விட்டு அந்தப் பெண்மணி வேக வேகமாய் காரை நோக்கிச் சென்றாள்.
வெலவெலத்துப் போனார் சுதாகர்ஜி. “அடக் கடவுளே!...எதையோ நெனச்சு...எதுவோ ஆய்டுச்சே?....இப்ப என்ன பண்றது?...ஏதாச்சும் ஐடியா கேட்கலாம்ன்னா...அந்த ரவீந்தர் வேற மதுரைல போய் உட்கார்ந்துக்கிட்டான்!...”
ஏற்கனவே கலக்கத்திலிருந்த சுதாகர்ஜியை மேலும் கலக்கத்தில் ஆழ்த்தும் விதமாய், கோயில் அறங்காவலர் ராமலிங்கமும், கோயில் கமிட்டியின் சில முக்கியஸ்தர்களும் உள்ளே வந்து கொண்டிருந்தனர்.
“போச்சு...போச்சு...“பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்!”னு சொல்லுவாங்க!...நான் இன்னிக்கு அகப்பட்டுக்கிட்டேன்!” சுதாகர்ஜி உள்ளுக்குள்ளிருந்த நடுக்கத்தை மறைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்து “வாங்க...வாங்க” என்றார்.
தொடரும்...
Next episode will be published on 14th May. This series is updated weekly on Fridays.