தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 18 - முகில் தினகரன்
மறுநாள் மதியம் மூன்று மணி வாக்கில் “விஸ்வா டவர்ஸ்” முன் தன் காரில் வந்திறங்கிய தேவநாதனை சாம்பசிவம் விக்டர் விஸ்வநாத் கல்பனா மூவரும் வாசலுக்கு வந்து வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.
எம்.டி.அறையில் அவர்கள் ஃபைனான்ஸியல் டிஸ்கஷனை ஆரம்பித்ததும் நாசூக்காக வெளியேறிய கல்பனா அவர்களுக்காக அண்ணபூர்ணா காஃபி ஏற்பாடு செய்தாள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் நிகழ்ந்த அந்த டிஸ்கஷன் முடிந்ததும் எம்.டி.அறையிலிருந்து முதல் ஆளாய் வெளியே வந்த தேவநாதன் “விடு...விடு”வென்று சென்று தன் காரில் ஏறிப் பறக்க கல்பனா துணுக்குற்றாள்.
“அவர் போவதைப் பார்த்தால் டிஸ்கஷன் சுமுகமாய் முடியலை போலிருக்கே!” இயல்பான சந்தேகம் உண்டானது அவள் மனதில்.
அவருக்குப் பின்னாலேயே ஓடி வந்த சாம்பசிவத்தையும் விஸ்வநாத்தைம் அவர் துளியும் சட்டை செய்யவில்லை.
கார் சென்றதும் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள விஸ்வநாத சொன்னார்.
“இனி எல்லாமே உங்க கைலதான் இருக்கு மிஸ்டர்.சாம்பசிவம்!...தேவநாதன் தன்னோட தேவையைச் சொல்லிட்டுப் போயிட்டாரு!...அவரை திருப்திப்படுத்தினா லோன் சாங்ஷன் ஆகும்!...இல்லே...இதே பேய்க் காம்ப்ளக்ஸ்ல இருக்க வேண்டியதுதான்!...நான் கிளம்பறேன்!”
விஸ்வநாத்தும் தேவநாதனைப் போலவே “விடு..விடு”..வென்று சென்று காரி ஏறிப் பறந்தார்.
திக் பிரமை பிடித்தவர் போல் சாம்பசிவம் அப்படியே நின்றிருக்க “சார்...சார்” கல்பனா வந்து உரத்த குரலில் அழைக்க சுய நினைவுக்கு வந்தார்.
“ம்...சொல்லும்மா!” என்றார் தன் தலையை சன்னமாய் சிலிர்த்துக் கொண்டு.
“சார்...எனி பிராப்ளம்?”
கேட்டவளையே சில நிமிடங்கள் கூர்ந்து பார்த்தவர் “ம்ம்ம்..கல்பனா...இப்ப் உங்களுக்கு ஏதாவது அர்ஜெண்ட் வேலை இருக்கா?” கேட்டார்.
“ம்ம்..இல்லையே சார்!”
“அப்படின்னா கொஞ்சம் என் ரூமுக்கு வாங்க!...உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்!” சொல்லி விட்டு சாம்பசிவம் முன்னே நடக்க, அவரைப் பின் தொடர்ந்தாள் கல்பனா.
எம்.டி.அறைக்குள் வந்ததும் தன் இருக்கையில் அமர்ந்த சாம்பசிவம் “ப்ளீஸ் ஸிட் டவுன்!” என்றார் தன் எதிரே இருந்த இருக்கையைக் காட்டி
நெற்றியைச் சுருக்கிக் கொண்டே அமர்ந்தாள் கல்பனா.