தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 06 - முகில் தினகரன்
அன்று மாலை வீட்டிற்குச் சென்ற தனசேகரை, அவன் தாய் சுந்தரி வாசலிலேயே நிறுத்திக் கேட்டாள். “ஏண்டா சேகரு...இன்னிக்கு சம்மந்தி வீட்டுக்குப் போனியா?”
“ஆமாம்” நிற்காமல் பதில் சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் நடந்தவனின் பின்னாடியே வந்த சுந்தரி, “எதுக்குப் போனே?” விடாமல் கேட்டாள்.
“ம்ம்ம்...நான் கட்டிக்கப் போற அந்தப் பொண்ணுக்கு பர்ஸனலா ஒரு கல்யாண பத்திரிக்கை குடுக்கணும்!னு ஆசைப்பட்டேன்...போனேன்....அதிலென்ன தப்பு?” நின்று தாயின் முகத்தைப் பார்த்துக் கேட்டான்.
“நீ போனதோ...அந்தப் பொண்ணுக்கு பத்திரிக்கை வைக்கணும்!னு ஆசைப்பட்டதோ கொஞ்சமும் தப்பில்லை!...ஆனா...கூட ஒருத்தரைக் கூட்டிட்டுப் போனே பாரு?...அதுதான் தப்பு...மாபெரும் தப்பு!” என்றாள் சுந்தரி சற்றுப் பெரிய குரலில்.
“ஓ அதுக்குள்ளார இங்க தகவல் வந்திடுச்சா?” என்று தனக்குள் சொல்லிக் கொண்ட தனசேகர்,
“அம்மா...நான் பத்திரிக்கை குடுக்கப் போற எல்லா இடத்துக்கும் அவன்தான் என் கூட வந்திட்டிருக்கான்!...அதனாலதான் அங்கேயும் அவனையே கூட்டிட்டுப் போனேன்!...இது ஒரு சாதாரண விஷயம்...இதைப் போய் இவ்வளவு பெரிசு பண்ணிப் பேசணுமா?” ஒரு கோபத்துடனேயே சொன்னான்.
“நீ சாதாரண விஷயம்!னு சொல்லிட்டே?...ஆனா சம்மந்தி வீட்டுல அதைப் பெரிய விஷயமாய் அல்ல பேசறாங்க?” சுந்தரியும் தன் கோபத்தை வெளிப்படுத்தினாள்.
“என்ன சொல்றாங்க?” பற்களைக் கடித்துக் கொண்டு கேட்டான் தனசேகர்.
அப்போது உள்ளேயிருந்து வெளியே வந்த தனசேகரின் தந்தை பொன்னுரங்கம், “ம்...பையனோட சகவாசம் சரியில்லை போலிருக்கு”ன்னு ராமலிங்க பூபதி சொல்றார்!...” என்றார்.
“நான் என்ன அந்த ராமலிங்க பூபதியையா கட்டிக்கப் போறேன்?...நான் கட்டிக்கப் போறது அவரது மகள் மல்லிகாவைத்தானே?...அவர் என்ன வேணா சொல்லிட்டுப் போகட்டும்...அதை நாம காதுல கூட வாங்கிக்க வேண்டாம்” என்றான் தனசேகர்.
“டேய்...முட்டாள்தனமா பேசாதடா!...அந்த மனுஷன் மட்டுமில்லை அந்த வீட்டுல யாருக்குமே நீ அந்த முடி வெட்டுற சாதிக்காரனோட பழகறது பிடிக்கலை!...ஏண்டா...நான் கேட்கிறேன்...ஊர்ல வேற பசங்களே இல்லையாடா?...போயும் போயும் அந்தப் பயல் கூடத் திரியறியே?...உனக்கு வெட்கமாவே இல்லையா?” என்றார் தனசேகரின் தந்தை.
“ஓ...அப்படியா?” என்று சொல்லி விட்டு தன்னுடைய தாயையும் தந்தையையும் நேருக்கு நேர் பார்த்தவன், “அப்ப...இத்தனை வருஷமா அந்தக் குடும்பத்து ஆம்பளைக தங்களோட