தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 28 - முகில் தினகரன்
மறுநாளே அந்த வேலையை ஆரம்பித்தான் ரவீந்தர். ஒரு செய்தித்தாளின் விளம்பரத்துறையில் பணி புரியும் தன் நண்பன் தென்பாண்டியனுக்கு போன் செய்து, வத்சலா குறித்த விபரங்களையும், தொடர்பிற்கு தனது தொலைபேசி எண்ணையும் கொடுத்தான்.
அடுத்த நாள் வெளிவந்த அந்த விளம்பரத்திற்கு அவன் எதிர்பார்த்த்தி விடவே அதிக ரெஸ்பான்ஸ் இருந்தது.
காலையிலிருந்தே கால்கள் வரத் துவங்கின. எல்லோரிடமும் மாப்பிள்ளை பற்றிய விபரங்களை தனது வாட்ஸ்அப்பிற்கு அனுப்பச் சொல்லி தானே ஒவ்வொன்றையும் ஆராய்ந்தான்.
சிலவற்றில் மற்ற விபரங்கள் ஓ.கே.ஆன போதிலும், போட்டோவிலிருந்த மாப்பிள்ளையின் முகம் வத்சலாவிற்கு வதனத்திற்குப் பொருத்தமில்லாதிருக்க, அவற்றை ரிஜக்ட் செய்தான்.
இரவு முழுதும் மெனக்கெட்டு, இரண்டைத் தேர்ந்தெடுத்தான்.
மறுநாள் காலை, சற்று முன்னதாகவே எழுந்து வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த வத்சலாவை அங்கே வைத்தே மடக்கினான் ரவீந்தர்.
“உங்க கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும்....” என்றான்.
“ஜலீர்”ரென்று ஒரு குளிர் தென்றல் அவள் இதயச் சுவர்களில் மோதி அவளுக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்த, “கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க கோலத்தை முடிச்சிட்டு செம்பருத்திப் பூ பறிக்க வருவேன் அப்ப பேசுங்க” என்றாள்.
செம்பருத்திச் செடியருகே சென்று காத்திருந்தான்.
நிதானமாய் நடந்து வந்த வத்சலா பூக்களைப் பறித்துக் கொண்டே கேட்டாள், “என்ன சார் பேசணும் என்கிட்டே?” கேட்டாள். “தன்னுடைய காதலைச் சொல்லுவான்?...என்னுடைய விருப்பத்தைக் கேட்பான்...ம்ஹ்ஹும் உடனே ஒத்துக்க கூடாது...வேண்டுமென்றே இழுத்து...அப்புறமா ஒத்துக்கணும்!...அந்த இடைப்பட்ட நேரத்தில் அவன் படும் பாட்டை ரசிக்க வேண்டும்” அவளுக்குள் எண்ண அலைகள் ஓடிக் கொண்டே இருந்தன.
“வந்து...நீங்க எப்போதாவது உங்க எதிர்காலத்தைப் பத்திச் சிந்திச்சிருக்கீங்களா?” ஆரம்பித்தான்.
“ஏன் திடீர்னு இந்தக் கேள்வி?”
“இல்லை...அப்பாவுக்கும் வயசாகிட்டே போகுது...அவர் இருக்கற வரைக்கும் அவர் உங்க கூட இருப்பார்...அதுக்குப் பின்னாடி நீங்க எப்படித் தனிமரமா இருக்க முடியும்?” அக்கறையோரு கேட்டான்.
“ஏன் அதான் நீங்க வரப் போறீங்களே..எனக்குத் துணையா?” என்று மனதினுள் நினைத்துக் கொண்டவள், “ப்ச்...ஆண்டவன் விட்ட வழி” என்றாள்.
“அதுக்குத்தான் நான் ஒரு புது யோசனை பண்ணியிருக்கேன்”