தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 29 - முகில் தினகரன்
சில நிமிடங்களுக்குப் பிறகு,
“ம்மா...வத்சலா...வாம்மா”என்று கஸ்தூரி அய்யா அழைக்க, எந்திரம் போல் எழுந்து, ரோபோட் போல் நடந்து கூடத்திற்கு வந்து மரம் போல் நின்றாள்.
தன்னை ஆர்வத்தோடு பார்க்கும் அந்த மாப்பிள்ளையை அவள் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.
சூழ்நிலை இறுக்கமாவதைப் புரிந்து கொண்ட ரவீந்தர், “எங்க வத்சலா மாதிரி ஒரு பெண் கிடைக்க நீங்க குடுத்து வெச்சிருக்கணும் சார்!...குடும்பத்தை அவங்க நிர்வகிக்கற மாதிரி...மூத்தவங்க கூட நிர்வகிக்க முடியாது சார்!...அவ்வளவு மனப்பக்குவம் அவங்களுக்கு” என்றான்.
“அது அவங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது” என்றான் வந்த மாப்பிள்ளை.
“அடேய்...மண்ணாங்கட்டி மாப்பிள்ளை உனக்கு என் மூஞ்சில இருக்கறது மட்டும்தாண்டா தெரியுது..என் மனசுல என்ன இருக்கு?னு தெரியுதாடா?...என் மனசுல உன் பக்கத்துல உட்கார்ந்திட்டிருக்கான் பாரு?... அவன்தாண்டா இருக்கான்” என்று உள்ளுக்குள் குமுறினாள் வத்சலா.
“சரி...நீ உள்ளார போம்மா” என்று கஸ்தூரி அய்யா சொல்ல, அதற்கென்ரே காத்திருந்தவள் போல, வேக வேகமாய் உள் அறைக்குச் சென்றவள், கட்டிலில் “தொப்”பென்று விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
அதே நேரம், கூடத்தில் வேறு மாதிரியான சம்பாஷனை ஓடிக் கொண்டிருந்தது. “என் பொண்ணுக்கு அம்மாவும் நான்தான்..அப்பாவும் நான்தான்...அதனால...நானே போய் அவ கிட்ட “மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கா?”ன்னு கேட்டுட்டு வரேன்” சொல்லியபடி எழுந்து உள் அறைக்குச் சென்ற கஸ்தூரி அய்ய, அங்கே வத்சலா, குப்புறப்படுத்து அழுது கொண்டிருப்பதைக் கண்டதும் திகிலானார்.
“அம்மடி...என்னம்மா?...என்னாச்சு?...ஏன் அழறே?” சன்னக் குரலில் கேட்டார்.
“அப்பா...நானும் என் மகனும் உங்க்ளுக்கு பாரமாயிருக்கோமா அப்பா?” கேட்டாள்.
அதைக் கேட்டதும் அதிர்ந்து போன கஸ்தூரி அய்யா, “என்னம்மா இப்படியெல்லாம் பேசறே?...நான் உங்களை அப்படி நினைப்பேனாம்மா?”
“அப்புறம்...எதுக்கு இப்ப எனக்கு மாப்பிள்ளை பார்க்கறீங்க?” கோபமாய்க் கேட்டாள்.
“என்னம்மா...இப்ப இப்படிப் பேசறே?...ரவீந்தர் தம்பி நேத்து உன் கிட்டப் பேசினப்ப...நீ சம்மதம் சொன்னியாமே?...அப்புறம் ஏம்மா இப்ப திடீர்னு மாத்திப் பேசறே?” அழுதே விடுவார் போலானர் கஸ்தூரி அய்யா.