போட்டார். மூன்று புடவையும் வெவ்வேறு விதமான ரெட் ஷேட் எந்த புடவைக்கு எந்த ரவிக்கை என்று தெரியவில்லை.
“பத்திரிக்கையில ஆறு வித்தியாசம் கூட சுலபமா சொல்லிடலாம். இது என்ன எல்லாம் ஒரே மாதிரி இருக்கு. எதுக்கு எது மேட்ச் தெரியலையே? . . . இவங்களாம் எப்படி மேட்ச்சிங்கா பிக்ஸ் பண்றாங்க. . நாம மேட்ச் பிக்சிங்கல வீக்” என நினைத்தவர். பின்பு அனைத்தையும் ஒன்றாக அடுக்கி மனைவி பீரோவில் வைத்துவிட்டார்.
வேலைகளில் மனம் ஒட்டவில்லை. சற்று குழம்பி இருந்தது. அன்று பத்மினியைப் பெண் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்த அடுத்த நிமிடம் “அப்பா எனக்கு இப்போதைக்குக் கல்யாணம் பண்ணிக்கிற இன்ட்ரஸ்ட் இல்ல. ப்ளீஸ் வற்புறுத்தாதீங்க” என்று விட்டான் ராகவன்.
அன்றிலிருந்து பத்து நாட்கள் ஓடிவிட்டது.
“நாரதருக்கு வேண்டானு தகவல் சொல்லிடுங்க . . . பாவம் அந்த பொண்ணுக்கு வேற வரனாவது பார்ப்பாங்க . . நமக்காக காத்திருக்க வேண்டாம்” என நேற்றுதான் கோதாவரி சொல்லியிருந்தாள். இவற்றை எல்லாம் நினைத்தபடி பெண் வீட்டார்க்கு வேண்டாம் என்று சொல்லிவிட நினைத்தார்.
விசு தன் செல்போனில் நாரதர் எண்ணை தொடர்புக் கொண்டார். மூன்றாவது ரிங்கில் “ஹலோ விசு சார் எப்படி இருக்கீங்க?” என நாரதர் ஆர்வமாகப் பேசினார்.
விசு மனதில் குற்ற உணர்ச்சி மேலிட “நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? உங்க பத்திரிக்கை செய்திகள் பிரமாதம் . . ” என்றார். விஷயத்தை சொல்ல தயக்கமாயிருந்தது.