“பாட்டி அடுத்த வாரம் உங்க பிறந்தநாள் இல்லயா . . அதுக்கு என்னோட பரிசு”என தனுஷ் டிக்கெட்டை நீட்டினான்.
மனம் நிறைந்த மகிழ்ச்சியும் ஆர்வமுமாய் அவற்றை வாங்கினார் பாட்டி. “என்ன இது?” என்றபடி
“நீங்களும் தாத்தாவும் அடுத்த வாரம் மொரிஷியஸ் போறீங்க. ஒரு வாரம் அங்க எல்லா இடத்தையும் நிம்மதியா சந்தோஷமா சுத்தி பாருங்க” என்றான் தனுஷ்.
“முடியாது பேக்டிரில நிறைய வேலை இருக்கு” உடனடியாக தாத்தா மறுத்தார்.
“தாத்தா நீங்க தினமும் வெளிய போறீங்க . . ஆனா பாட்டி எங்க போறாங்க? பாவம் வீட்லயே அடஞ்சி கிடக்கறாங்க . . ரெண்டு பேருமா ஜாலியா மொரிஷியஸ் போயிட்டு வாங்க . . அவங்களுக்கும் ஒரு மாறுதலா இருக்கும்ல” என தனுஷ் பாட்டியை ஏத்திவிட
அதற்கு ஏற்றாற் போல“உனக்கு தெரியுது தனுஷ் . . உன் தாத்தாக்கு என் கஷ்டம் எங்க புரியுது?” என பாட்டி இதுதான் சாக்கென குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
“ அப்படி இல்லமா . . முக்கியமான வேலை” என தாத்தா பாட்டியிடம் இழுக்க
“இப்ப என்ன போககூடாது அப்படிதானே . . சரி எங்கயும் போக வேண்டாம்” என டிக்கெட்டை கோபமாக சோபாவில் வைத்துவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டார் பாட்டி.
“எல்லாம் என் தலை எழுத்து” என பாட்டியின் விசும்பல் சத்தம் வெளியே கேட்டது
“என்னடா இது?” தாத்தா தனுஷை முறைக்க
“அம்மா பாவம்பா . . . ஒரு வாரம் தானே போயிட்டு வாங்க . . நாங்க இங்க பேக்டரிய பாத்துக்கிறோம்” தனுஷ் அப்பாவும் கூட்டணியில் சேர்ந்துவிட . . தனித்து போட்டியிட முடியாமல் தவித்தார் தாத்தா.