“அப்படியா? அவர சம்மதிக்க வெச்சிடுவேன் . . நான் யாரு?” என்றவர் “உன்ன மாதிரி ஒரு பேரன் கிடைக்க புண்ணியம் பண்ணியிருக்கேன்” அகம் மகிழ்ந்தார் பாட்டி.
இரவு அவர்களை தானே விமான நிலையம் அழைத்துச் சென்று வழியனுப்பினான்.
எந்த நொடி தாத்தா எதையாவது சொல்லி பயணத்தை ரத்து செய்துவிடுவாரோ என அச்சப்பட்டான். அவர்களின் விமானம் கிளம்பும்வரையில் ஒருவித பரபரப்பு தொத்தியிருந்தது.
ஒருவழியாக அவா்கள் கிளம்பிச் சென்றார்கள். தற்காலிக நிம்மதி கிடைத்தது. இந்த பிரச்சனைக்கு ஒரு நிரந்திர தீர்வு வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.
காலையில் இருந்து வேலைபளுவால் தளர்ந்துப் போனான் விமல். அக்கா திருமணத்திற்கு எப்படியும் விடுப்பு எடுக்க வேண்டும் என்பதால் எதுவும் கேட்கவில்லை.
இரவு வெகுநேரம் கழித்து அவன் வீட்டுக்கு வந்தான். மூன்று நண்பர்கள் சேர்ந்து ஒருபடுக்கை அறை உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார்கள்.
ஹோட்டலிருந்து நண்பர்கள் தருவித்த உணவை சாப்பிட்டுவிட்டு உறங்கினான்.
இரவு இரண்டு மணி சுமாருக்கு விமலுக்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து போனில் அழைப்பு வந்தது.
ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவன்“ஹலோ” சுரத்தே இல்லாமல் கண்ணை மூடியபடி பதிலளித்தான்.
“விமல் உன் தம்பியை தேடிட்டு இருக்க தானே?” கரகரத்த ஆண் குரல் கேட்டது.