இனியா காலையில் விழிக்கும் போதே என்னவோ மாதிரி உணர்ந்தாள். ஆனால் அவளுக்கு என்னவென்று தெரியவில்லை. எழுந்து அபியுடனே நேற்று போலவே தோட்டத்தில் ஓடினாள்.
இன்று அவள் தந்தை மாடியிலிருந்து இனியாவின் குறும்புகளை ரசித்துக் கொண்டிருந்தார்.
இனியா காலை உணவை முடித்து மருத்துவமனைக்கு கிளம்புவதாக கூறி அபிக்கு முத்தமிட்டு விட்டு கிளம்பினாள்.
தாய் தந்தையிடமும் சொல்லி விட்டு கிளம்பினாள். அவள் ஸ்கூட்டி இன்னும் சரியாகி வந்திருக்கவில்லை.
“நம் ஆட்டோகாரரை வர சொல்லியிருக்கிறாயா இல்லை தெரு முனையில் சென்று ஏறிக் கொள்ள போகிறாயா” என கேட்டார் லட்சுமி.
“அவருக்கு ஸ்கூல் சவாரி இருக்கும். அதனால் நானே போய ஏறிக் கொள்கிறேன் அம்மா.”
அதற்குள் இடையிட்ட ராஜகோபால் “வண்டி சரியில்லையா. நீ ஏன்மா ஆட்டோவில் செல்கிறாய். நான் காரில் விட்டு விட்டு வருகிறேன் வா” எனக் கூறினார்.
இனியா வேண்டாம் என்று எவ்வளவு கூறியும் கேட்காமல் அவள் தந்தையே அவளை மருத்துவமனைக்கு கூட்டி சென்று விட்டார். மாலையும் தான் வந்து அழைத்து செல்வதாக கூறினார்.
இனியா மருத்துவமனைக்குள் சென்றாள். உள்ளே செல்லும் போதே ஏனோ மாறுதலை உணர்ந்தாள். அவளை அதை பற்றி மேலும் எண்ண விடாமல் டாக்டர் ரவி அங்கு வந்து சேர்ந்தான்.
“இனியா 10.30 மணிக்கு இன்று உனக்கு ஏதாவது அப்பாயிண்மன்ட் இருக்கிறதா” எனக் கேட்டான்.
“இல்லை இன்று மதியம் 2 மணிக்கு தான் இருக்கிறது. ஏன்?” என்று வினவினாள்.
“இல்லை சாந்தி என்று ஒரு டாக்டர் இங்கு முன்பு பணிபுரிந்தார் என்று கூறியிருக்கிறேன் அல்லவா, அவரின் மகன் பண்ணிரெண்டாம் வகுப்பு தான் படிக்கிறான். அவன் இரண்டு முறை தற்கொலை முயற்சி செய்திருக்கிறானாம். அவனை கவுன்சிலிங்கிற்கு அழைத்துக் கொண்டு வருவதாக கூறினார். அதனால் தான் கேட்கிறேன்” என்றான்.
இனியா சரியென தலையசைத்து விட்டு, அப்படியென்றால் மற்றவர்களை எல்லாம் மாலை தான் போய் பார்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டு கார்த்திக்கை பார்க்க சென்றாள்.
நேற்றை விட கார்த்திக் இன்று ஓரளவு நன்றாக பேசினான். இனியாவிற்கு அது ஓரளவுக்கு ஆறுதலாக இருந்தது. கார்த்திக் பேச பேச இனியாவிற்கு ஆச்சரியம் அதிகமாகிக் கொண்டே போனது.
“என்ன கார்த்திக் இன்று என்ன அதிசயம் நிகழ்ந்தது. எங்க கார்த்திக் பழைய படி நன்றாக பேசுகிறானே” எனக் கேட்டாள்.
அதற்குள் அறைக்குள் நுழைந்த கார்த்திக்கின் தாய் இனியாவின் பேச்சை கேட்டுவிட்டு அதற்கு பதில் கூறினாள்.
“நேற்று ஒருவர் வந்து கார்த்திக்கிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் வந்து பேசியதிலிருந்து கார்த்திக் மறுபடியும் தெம்பாக பேச ஆரம்பித்து விட்டான”; எனக் கூறினாள்.
இனியாவிற்கு ஏனோ இளவரசனின் நியாபகம் தான் வந்தது. அவளுக்கு அவள் சிந்தனையை எண்ணியே வெட்கமாக இருந்தது. இப்போது ஏன் அவனின் நியாபகம் வருகிறது. வந்தது ஏதாவது டாக்டராக தான் இருக்கும் என்று எண்ணி அதையே கார்த்திக்கின் அன்னையிடமும் விசாரித்தாள்.
“இல்லை டாக்டர் எல்லாம் இல்லை. அவரின் உறவினர் யாரையோ இங்கு சேர்த்திருப்பதாக கூறினார்.”
அதற்குள் கார்த்திக், “அக்கா அந்த அங்கிள் ரொம்ப சூப்பரா பேசினார் தெரியுமா, எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிடுச்சி” என அவன் பேசிக் கொண்டே போனான்.
இனியாவிற்கு அது இளவரசன் தானா என தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகமாயிற்று. ஆனால் கார்த்திக் பேச்சை நிறுத்தினால் அல்லவா கேட்க முடியும். அவனோ பேசிக் கொண்டே செல்கிறான்.
அவனை இடையிட்டு நிறுத்திய இனியா, “அவர் யாரென்று தெரியுமா கார்த்திக்” என வினவினாள்.
“உங்களுக்கு தெரிந்தவர் என்று தான் கூறினார் அக்கா”
“எனக்கு யாரென்று தெரியவில்லையேடா.”
“அவர் தம்பியை இங்கு சேர்த்திருப்பதாக கூறினார் அக்கா. அவர் பெயர் அவர் பெயர்” என இழுத்தான்.
பெயர் என்னடா என்றாள்.
“பெயர் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஆனால் இப்போது வரமாட்டேன் என்கிறது அக்கா.”
“இளவரசனா” என்றாள் இனியா.
“ஆம் அக்கா” என குதித்தான் சிறுவன்.
“இந்த பெயரை எப்படிடா மறந்தாய் என கடிந்தாள் இனியா. சரி விடு வேறு என்ன கூறினார்” என்று கேட்டு தெரிந்து கொண்டாள்.
கார்த்திக்கின் அறையை விட்டு வெளியே வந்த போதே மணி 10.20 ஆக இருந்தது. இனியாவிற்கு எதையும் யோசிக்கும் அவகாசம் இல்லை. அவள் அறையை அடைந்து மனதை கவுன்சிலிங் கொடுப்பதற்கு தயாராக்கிக் கொண்டாள். கவுன்சிலிங் கொடுக்கும் போது நம் சொந்த பிரச்சனைகள் குறுக்கிட கூடாது என்பதில் அவள் தெளிவாக இருந்தாள்.
பத்து நிமிடங்களில் டாக்டர் ரவி, டாக்டர் சாந்தியையும் அவர் மகனையும் அழைத்துக் கொண்டு வந்தார். அவர் மகனின் பெயர் பரத். இருவரையும் அறிமுகப்படுத்திவிட்டு சென்றான்.
இனியா முதல் கட்டமாக சாந்தியிடமும் அவர் மகனிடமும் தனித்தனியாக பேசினாள். அவளுக்கு பிரச்சனை என்னவென்று புரிந்தது. டாக்டர் சாந்தியிடம் மறுபடியும் பேசலாம் என்று பார்த்தால் அவருக்கு ஏதோ அப்பாயிண்மன்ட் இருப்பதால் இரண்டு நாட்கள் கழித்து வருவதாக கூறினார்.
அவர்களிருவரிடமும் பேசி விட்டு வரும் போதே மணி 1 ஆகியிருந்தது. இனியாவிற்கு சிறிது வெளியில் நடந்து விட்டு வரலாமென தோன்றியது. எனவே எழுந்து வெளியில் சென்றாள்.
இனியாவின் கால்கள் தன்னிச்சையாக நடந்து சென்றது. கடைசியில் இனியா சந்தரின் அறையின் வெளியில் நின்றுக் கொண்டிருந்தாள். நேற்றைய முன்தினத்தில் இருந்து நடந்ததை எல்லாம் எண்ணி பார்த்தாள்.
திடீரென்று எங்கிருந்தோ இளவரசனின் குரல் கேட்பதை போல் இருந்தது. பிரமை என்று எண்ணிக் கொண்டாள். ஆனால் இளவரசன் நிஜமாகவே இனியாவின் முன் நின்று கொண்டிருந்தான. இனியாவிற்கு சுத்தமாக ஒன்றும் புரியவில்லை. இனியாவால் அந்த மோன நிலையில் இருந்து வெளியே வர இயலவில்லை.
தொடரும்
{kunena_discuss:679}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.