“நாளைக்கு நான் வரது சந்தேகம் தான், மது... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு...” என்றாள் பாரதி.
மதுவின் முகம் வாடிப் போனது. பவித்ராவிற்கு அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. பாரதியை ஒரு பார்வை பார்த்து விட்டு,
“என்ன பர்த்டே பேபி அதுக்குள்ளே முகம் வாடிப் போச்சு... உன் பாரதி மேடம் சந்தேகம்னு தானே சொன்னா... வர மாட்டேன்னு சொல்லலையே... நாளைக்கு ஃப்ரீயா இருந்தால் இரண்டுப் பேரும் கட்டாயம் வரோம்... ஆனால், வேலை இருந்தால் என்ன செய்ய முடியும் சொல்லு...” என்றாள் மதுவை தேற்றும் விதமாக.
மதுமதியின் முகம் முழுதும் மலர்ச்சி அடையாத போதும், சற்றே தெளிவடைந்தது.
“தேங்க்ஸ் பவித்ரா மேடம்... நீங்க வந்தா பாரதி மேடமும் வருவாங்க... ப்ளீஸ் மேடம், ஒரு தர்ட்டி மினிட்ஸ் ஸ்பேர் செய்தால் போதும்... ப்ளீஸ்....” என்றாள் கெஞ்சுவதைப் போல...
இப்போது பாரதிக்கே பாவமாக தோன்றவும்,
“அடடா, என்ன மது இது... பவித்ரா மேடம் சொன்ன மாதிரி வேலை முடிஞ்சா கட்டாயம் வரோம்...” என்றாள்.
மகிழ்ச்சியோடு பார்ட்டி நேரத்தை பகிர்ந்து விட்டு மது சென்றாள். பாரதியும், பவித்ராவும் அவர்கள் பயணமாகும் கல்லூரி பேருந்து பக்கம் சென்றனர். பேருந்தில் ஏறி வழக்கமான சீட்டில் அமர்ந்ததும், பவித்ரா பாரதியிடம்,
“ஏன் பாரு மது கிட்ட பொய் சொன்ன? நாளைக்கு ஃப்ரீன்னு தானே சொன்ன?” எனக் கேட்டாள்.
“ஃப்ரீ தான் பவி... ஆனால், எனக்கு மது வீட்டுக்குப் போகப் பிடிக்கலை... அது தான் அப்படி சொன்னேன்...” என்று உண்மையை சொன்னாள் பாரதி.