“லக்கி பாரதி நீ... கல்யாணத்திற்கு பிறகு பாலாக்கு உனக்கு கூஜா தூக்க தான் நேரம் இருக்க போகிறது...” என்று தோழிகள் எப்போதும் கிண்டல் செய்வது உண்டு.
அப்போதெல்லாம் பாரதி இதுப் போல் இல்லை. கல்லூரி நாட்களுக்கே உரிய துடிதுடிப்புடன், எப்போதும் கலகலவென இருப்பாள். யாருடனும் எளிதாக நட்பை உருவாக்கிக் கொள்ள அவளால் எளிதில் முடியும்.
இப்போது பாரதியிடம் அந்த கலகலப்பு எல்லாம் காணாமல் போய் விட்டதை உணர்ந்து வருந்தினாள் பவித்ரா. ஆனால் அதற்கான காரணமும் அறிந்திருந்ததால், அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. குழந்தைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு பாரதியின் பின் அப்படி சுற்றிய பாலாவால் எப்படி பணத்தைக் கண்ட உடன் மனதை மாற்றி கொள்ள முடிந்தது? அது இன்று வரை பவித்ராவிற்குப் புரியாத புதிராக தான் இருந்தது.
பாரதி கேட்ட கேள்வியினால் கல்லூரி நாட்களை பற்றி நினைத்த பவித்ரா, ஒரு பெருமூச்சுடன் பாரதியைப் பார்த்தாள். அவளும் ஏதோ சிந்தனையில் இருந்தாள். ஒரு வேளை அவள் மனதிலும் கல்லூரி நாட்கள் நினைவுகள் தானோ என்னவோ?
இந்த எண்ணம் தோன்றியவுடனேயே பவித்ராவிற்கு வருத்தமாக இருந்தது. தோழி என்ற நிலையில், ஒரு மூன்றாம் மனுஷியாக இருந்துப் பார்த்த அவளுக்கே இன்னமும் பழைய நினைவுகள் கசப்பானவையாக இருந்தால், பாரதிக்கு அது எப்படி இருக்கும் என்பது புரிந்தது.
பாரதியின் கரத்தை எடுத்து, மெதுவாக வருடினாள் பவித்ரா.
“தேவை இல்லாத விஷயங்களை நினைக்காமல் இருப்பது நல்லது, பாரு...”
“புரியுது பவி... இந்த அளவுக்கு அடிப்பட்டு அசிங்கப் பட்ட பிறகும், எப்படி என்னால அந்த விவேக்கைப் பார்க்கும் போது எல்லாம் தடுமாற முடியுது? எனக்கு எதுவுமே புரியலை....”
“தேவையே இல்லாமல் அந்த ஸ்டுபிட் பாலாவை விவேக் கூட கம்பேர் செய்யாதே...”