தொடர்கதை - உன் காதல் இருந்தால் போதும் - 02 - பிந்து வினோத்
சௌந்தர்யாவின் பார்வையை டெலிபதியில் உணர்ந்துக் கொண்டதாலோ என்னவோ அவள் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ‘வாழை பழத் தோல்’ காரனின் முகமும் அவள் நின்றிருந்தப் பக்கம் திரும்பியது...
அவளைப் பார்த்தவனின் முகத்தில் வியப்பு தோன்றியது...
சௌந்தர்யா அவனை முறைத்துக் கொண்டே நின்றாள்!!!
“சரி வாங்க கிளம்பலாம்! புது ஊரு! சீக்கிரம் வீட்டுக்குப் போறது நல்லது...”
தோழி ஒருத்தி சொல்லவும், மற்ற தோழிகளுடன் இணைந்து சௌந்தர்யாவும் நடந்தாள். ஆனால், இப்போதும் அவளுக்கு கோபம் இருந்தது... அவன் மீதான் கோபம்!!!
சற்று முன் அவனைப் பார்த்திருந்த மண்டபத்தின் அருகே தோழிகள் அனைவரும் செல்லும் போது,
“ஹேய், இங்கே பாருடா! ஃபேஷன் ஷோ நடக்குது!” என்று ஒருக் குரல் கேட்டது!
தொடர்ந்து,
“டேய் சதா, கேட் வாக் எல்லாம் இருக்கும்ன்னு நீ சொல்லவே இல்லையே...”
“கேட் வாக் இல்லைடா, இது ஏஞ்சல்ஸ் பரேட்!”
என பல ரகமான பேச்சுக்கள் காதில் விழுந்தது!
பொதுவாக இது போன்ற நேரங்களில் செய்வது போல் கண்டுக் கொள்ளாமல் தோழிகள் அனைவரும் நடந்தார்கள்... ஆனால் சௌந்தர்யாவால் மட்டும் அப்படி செல்ல முடியவில்லை! அந்த ‘வாழைப் பழத்’ தோல்காரனை பார்த்து மீண்டும் ஒரு முறை தன்னுடைய கோபத்தை கண்களால் தெரிவித்து விட மீண்டும் அவன் நின்றிருந்தப் பக்கம் திரும்பினாள் அவள்...