இது சரி இல்லை என்ற முடிவிற்கு வந்தவள்... அவனை மறப்பதுப் பற்றிய முயற்சியை விட்டு விட்டு, மனதுக்கு பிடித்த மற்ற விஷயங்களில் தன்னை ஆழ்த்திக் கொண்டாள்... இந்த திசை திருப்பும் முயற்சி நல்ல பலனை கொடுப்பதாகவும் அவளுக்குத் தோன்றியது...!
***********
அன்றைய காலைப் பொழுது இனிதாக விடிந்திருந்தது...
காரணம் என்ன என்றுப் புரியாமலே சௌந்தர்யாவின் மனதில் ஒருவிதமான மகிழ்ச்சி பரவி இருந்தது... சந்தோஷமான செய்தி ஏதோ வரப் போவதாக அவளின் உள்ளுணர்வு உணர்த்தியது... அவளின் தங்கை சௌம்யா கூட கேட்டே விட்டாள்
“என்னடி இன்னைக்கு உன்னை சுத்தி தனி ஒளி வட்டம் தெரியுது? ஏதாவது ஸ்பெஷல் டேவா?”
“அது ஒன்னு தான் குறைச்சல், சௌமி!”
“உண்மையை சொல்லு, எனக்கு தெரியாமல் லவ் மேட்டர் ஏதாவது மறைச்சு வச்சிருக்கியா என்ன? உன் ஃபேஸ்புக் பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே???”
“வாயை மூடு! சின்னப் பொண்ணு மாதிரி பேசு!”
“நான் காலேஜ் ஃபைனல் இயர் படிக்குறேன்க்கா, சும்மா இப்படி சின்னப் பொண்ணுன்னு எல்லாம் சொல்லாதே! என் இமேஜ் ஸ்பாயில் ஆயிடும்!”
“சரி பாட்டி, இனிமேல் சொல்லலை!”
“அச்சோ அக்கா! உனக்கு குழந்தை, இல்லை பாட்டி தான் தெரியுமா? நான் குமரியா தெரியவே மாட்டேனா?”