கற்பகம் பாரதியுடன் பேசியதை சுருக்கமாக சொன்னாள்.
"என்னது, நான் உங்க வளர்ப்பு மகனா? என்னைப் பார்த்தால் அப்படியே அப்பாவுடைய ஜெராக்ஸ் காப்பி மாதிரி இருக்கேன்னு எல்லோரும் சொல்றாங்க..." என்றான் விவேக்!
"சும்மா தான்டா சொன்னேன்... சரி நான் சொன்னேன், ஆனால், அதையும் தான் உன்னுடைய ஆள் நம்பினாள்!!!! நீ இந்த விஷயம் தெரிந்தால் வருத்தப் படுவேன்னு யோசித்ததில் அவளுக்கு வேறு எதுவும் யோசிக்க தோணலை போல இருக்கு..."
"ம்ம்ம்..."
விவேக் ஏதோ யோசித்தபடி அமைதியாக இருக்க,
"விவேக், பாரதியிடம் உனக்குப் பிடிச்ச விஷயம் என்ன? அவள் பார்க்க நல்லா இருக்கா, பணத்தில் ஆசை இல்லை, அதெல்லாம் சரி... அது மட்டும் தான் காரணமா?" என்று வினவினாள் கற்பகம்.
விவேக் கடந்த சில மாதங்களை மனதில் அசைப் போட்டான், பின்,
"இது தான்னு சொல்ல தெரியலை அம்மா... தன் மேல் தப்பில்லைன்னு நம்பிக்கை இருக்கும் போது, பணம், பதவி இருப்பவர்களிடம் போலியா வளைஞ்சு போகாமல், தன் பக்க நியாயத்தை எடுத்து சொல்வதிலாகட்டும், இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னை சமாளித்துக் கொள்வதிலாகட்டும், பெரியவர்கள் சொல்வதற்காக இறங்கி வருவதிலாகட்டும், மனதில் இருப்பதைக் கட்டுப்படுத்தி ஒன்றுமே இல்லை என்று காட்டி கொள்வதிலாகட்டும், தவறு என்று புரிந்தால் மன்னிப்பு கேட்பதிலாகட்டும், பாரதிக்கு நிகர் பாரதி தான்... ஷி இஸ் எ வெரி ரேர் பெர்சனாலிட்டி அம்மா..."
"ஓஹோ!"