மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 10 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
பைக்கில் வேகமாக போய்க் கொண்டிருந்த அபினவ் சாலையோரத்தில் தெரிந்த காட்சியில் பைக்கின் வேகத்தை குறைத்து ஓரமாக நிறுத்தி இறங்கி வந்தான்.
ஸ்டாண்ட் போடப் பட்டிருந்த ஸ்கூட்டியின் பக்கத்தில் முட்டிப் போட்டு உட்கார்ந்து வண்டியின் உள்ளே பார்த்துக் கொண்டிருந்தாள் அஹல்யா.
அங்கே யார் இருந்திருந்தாலும் உதவி வேண்டுமா என்று கட்டாயம் கேட்டு இருந்திருப்பான் அபினவ். அஹல்யா எனும் போது கூடுதல் அக்கறையுடன் இறங்கி வந்தான்.
“ஹலோ!”
எரிச்சலுடன் முகத்தை நிமிர்த்திய அஹல்யா, நிற்பது அபினவ் என்று தெரிந்த உடன் எரிச்சலை மறைத்துக் கொண்டு, பரிச்சயப்பட்டவர்களுக்கான பார்வை ஒன்றை பதிலாக கொடுத்தாள்.
ஏதோ முறைக்காமல் சாதாரணமாக பார்த்தாளே என மனதை தேற்றிக் கொண்ட அபினவ்,
“ஸ்கூட்டில என்ன ப்ராப்ளம்?” என்று அஹல்யாவிடம் வினவினான்.
“சரியா தெரியலை. திடீர்னு நின்னுப் போயிடுச்சு. திரும்ப ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது,” என்ற அஹல்யா எழுந்து விலகிக் கொள்ள, அபினவ் தனக்கு தெரிந்த பைக் ரிப்பேர் முறைகளை முயற்சி செய்துப் பார்த்தான். ஆனால் எதுவும் பலன் கொடுக்கவில்லை. கடைசியாக,
“மெக்கானிக் ஷெட் ஒன்னு பக்கத்துல இருக்கு. ஆனா வண்டியை தள்ளிட்டுப் போனா அரை மணி நேரம் மேல ஆகும்,” என்றான் அபினவ்.
அஹல்யா கவலையுடன் வாட்சைப் பார்த்தாள்.
“உங்களுக்கு ஓகேன்னா நான் வேணா ஹெல்ப் செய்றேன்,” என்றான் அபினவ்.