தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
21. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
இந்து தன் தோழிகளை சந்திக்க அந்த வணிக வளாகத்தை வந்து அடைந்தப் போது அவள் எதிர்பார்த்திருந்ததை விட அதிக நேரமாகி விட்டிருந்தது. வீணாவுடன் வீட்டிற்கு திரும்புவது என ஏற்கனவே பிளான் செய்திருந்ததால், தன் காரை திருப்பி அனுப்பி வைத்தாள். பின், கீதாவும் வீணாவும் எங்கே இருக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ள வீணாவிற்கு ஃபோன் செய்தாள். அவர்கள் இருவரும் மூன்றாம் மாடியில் இருப்பதை வீணாவிடம் இருந்து தெரிந்துக் கொண்டவள், வழக்கம் போல் லிஃப்டை பயன்படுத்தாமல் படிகளில் ஏறினாள். முதல் மாடியை அடைந்து இரண்டாம் மாடிக்கு செல்லும் படிகளை நோக்கி நடந்தப் போது தான் இந்து அதை கவனித்தாள்.
அந்த தளத்தில் இருந்த சில உணவகங்களுக்காக பொதுவாக சில மேஜை நாற்காலிகள் போடப் பட்டிருந்தன. அதில் ஒரு ஓரத்தில் ஒரு இளம் பெண் அமர்ந்து இருக்க, அவள் அங்கே இருந்து எழுந்து நகர முடியாதவாறு, நான்கைந்து ரோமியோக்கள் அவள் வழியை மறித்து அமர்ந்து ஏதோ சத்தமாகப் பேசி கொண்டிருந்தார்கள். முதலில் அந்த பெண்ணும் அவர்களின் தோழியாக இருக்கலாம் என்றெண்ணிய இந்து, அந்த பெண்ணின் முகத்தை பார்த்து தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டாள்.
அவர்களை சுற்றி இருந்த இடத்தில் பலரும் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தார்கள். ஆனால், எப்போதும் நடப்பதைப் போல, இதை யாரும் கவனித்ததாக தெரியவில்லை. கவனித்திருந்தாலும் கூட ஒரே ஃபிரென்ட்ஸ் செட் என்று எண்ணி இருக்கலாம்...
பொதுவாக இது போன்ற பொது இடங்களில் ரோமியோக்களை எதிர் கொள்வது கொஞ்சம் சுலபம் தான். அந்தப் பெண் எழுந்து நின்று குரலை உயர்த்தி வழி விட சொன்னால் பெரும்பாலும் சொன்னதை செய்து விடுவார்கள். பல பேர் இருக்கும் இடத்தில் அவ்வளவு சுலபமாக யாரும் தவறாக நடப்பதில்லை. ஆனால் அந்த பெண்ணிற்கு இது புதிய அனுபவம் போலும். கொஞ்சம் பயந்துப் போய் அமர்ந்திருந்தாள்.
இந்த எண்ணங்களும், காட்சிகளும் மின்னல் வேகத்தில் இந்துவின் மனதில் ஓடியது... ஒரு சில வினாடிகள் தயங்கிய இந்து, மறு நொடி முடிவு செய்தவளாக, அந்த பெண்ணை நோக்கி நடந்தாள். அவள் அமர்ந்திருந்த மேஜையின் அருகே சென்ற உடன்,