“இந்த லேட்டஸ்ட் நியூஸ் எனக்குத் தெரியாம போச்சே,” என்றாள் சத்யா ஆச்சர்யத்துடன்!
🌼🌸❀✿🌷
மற்ற கேஸுகளை கவனித்தாலும் இன்ஸ்பெக்டர் தென்றல்வாணனின் மனதில் சேகரன் கொலை வழக்கு நெருடிக் கொண்டே இருந்தது. கண்ணுக்கு நேரே இருக்கும் எதையோ கவனிக்காமல் விட்டுக் கொண்டிருக்கும் ஒரு உணர்வு.
என்ன அது???
மற்ற ஃபைல்களை ஒதுக்கி விட்டு, மீண்டும் சேகரனின் ஃபைலை எடுத்துப் படித்தான்.
புதிதாக எதுவும் தெரியவில்லை. முன்பு அஹல்யா வீட்டில் நடந்த சோதனை பற்றிய ரிப்போர்ட்டையும், இப்போதைய ரிப்போர்ட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தான். பெரிதாக ஒன்றுமில்லை. வேறு என்ன?
சேகரனின் பையில் இருந்து கிடைத்த போட்டோக்களை எடுத்துப் பார்த்தான்.
அஹல்யா சொல்வது உண்மையா, பொய்யா?
அவனுக்கு தெரிந்த வரையில் அஹல்யா நல்ல பெண் போல தான் இருந்தாள். துணை இல்லாமல் ஒரு பெண் இந்த காலத்தில் வாழ்வது சுலபமில்லை.
அஹல்யாவின் துணை எங்கே போனான்? கேள்வி வரவும் “அபினவ்,” என்று அழைக்க திறந்த வாயை சட்டென்று மூடிக் கொண்டான் தேன்!
“விஜயன்!” கான்ஸ்டபிளை அழைத்தான்.
“சார்?” விஜயன் ஓடோடி வந்து நின்றார்.