“எது போல வேணா இருக்கட்டும், எனக்கு விஷயத்தை சொல்லு என்ன ஆச்சு உனக்கு? டாக்டர் பார்க்க போவோமா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை ஆனந்த்... ம்ம்ம்... நேத்தும் தூங்க லேட் ஆச்சு... தொடர்ந்து இரண்டு மூணு நாளா சரியா தூங்கலையே... அது தான் தூக்கமா வந்தது... மதியம் எனக்கு கிளாசும் இல்லை... அது தான் கிளம்பி வந்துட்டேன்...” வெட்கம் கலந்த குழைவுடன் பாரதி பேசவும், விவேக் மயங்கிப் போய் அவளையே பார்த்திருந்தான். பின்,
“சாரி ரதி...” என்றான்.
“என்னங்க நீங்க?”
அப்போது பாரதிக்காக கஞ்சி எடுத்துக் கொண்டு அங்கே வந்த உமா, எதிர்பார்க்காமல் விவேக்கை அந்த இடத்தில் பார்த்து திகைத்து நின்றாள்! கூடவே, அவன் வேறு பாரதியின் கால்களை பிடித்து விட்டு கொண்டிருக்கவும் ஆச்சர்யத்தில் வாயடைத்தும் நின்றாள்... ஆனாலும் உடனே சுதாரித்துக் கொண்டு,
“சாரி விவேக்... நீங்க வந்தது எனக்கு தெரியாது... அது தான் கதவை தட்டாமல்...” என்று அவள் மென்று முழுங்கிய நேரத்தில், விவேக் அவசரமாக கட்டிலில் இருந்து எழுந்து நின்றான். பாரதியும் அவசரமாக எழுந்து அமர்ந்தாள்.
“பாரதி எதுவும் சாப்பிடாம வந்துட்டான்னு பவித்ரா சொன்னங்க, அது தான் அவளுக்கு கஞ்சி எடுத்துட்டு வந்தேன்... ஃபீவர் எல்லாம் இல்லையே?”
உமா முயற்சி செய்து குரலை இயல்பாக்கி கொண்டு பேசவும், பாரதி அவளுக்கு அவசரமாக பதில் சொன்னாள்.
“இல்லை... அதெல்லாம் இல்லை இப்போ பரவாயில்லை... நானே வந்து சாப்பிட்டு இருப்பேனே! ரொம்ப தேங்க்ஸ் உமா...”