🌼🌸❀✿🌷
மருத்துவமனையை அடைந்த விவேக், முன்பு வந்த ஞாபகத்தில் டாக்டர் தாமஸின் அறைப் பக்கம் சென்றான். சென்ற முறை வந்தப் போது சந்தித்த உஷா சிஸ்டர் அப்போது டாக்டர் அறையில் இருந்து வெளியில் வரவும், தான் வந்திருப்பதற்கான காரணத்தை அவரிடம் கூறினான். அவனை அழைப்பதாக சொல்லி காத்திருக்க சொன்ன உஷா, கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கழித்து அவனை டாக்டர் அறைக்குள்ளே அனுப்பி வைத்தார். புன்னகையோடு டாக்டரை பார்த்து ரிப்போர்ட் வாங்கி போக வந்ததை சொன்னான் விவேக்.
“ஓகே... உங்க பெயர்...?”
“விவேக் டாக்டர்...”
“விவேக்... இதோ இருக்கு...” என அவர் மேஜை மீதிருந்த ஃபைல்களில் தேடி ஒரு ஃபைலை எடுத்த டாக்டர் தாமஸ், அதை திறந்து அவசரமாக நோட்டம் விட்டார். அவரின் முகத்தில் சின்னதாய் மாற்றம் தெரிந்தது. ஒரு சில நிமிடங்கள் அவர் எதுவும் சொல்லவில்லை. அவரே பேசட்டும் என விவேக் பொறுமையாக காத்திருந்தான்.
“நீங்க மட்டும் வந்தீங்களா மிஸ்டர் விவேக்? பெரிசா எதுவும் இல்லை... ரிப்போர்ட் இங்கே இருக்கட்டும். நான் மெடிசின் எழுதி தரேன் அதை சாப்பிடுங்க...” என்றார் டாக்டர்!
“என்ன விஷயம் டாக்டர்? உண்மையை சொல்லுங்க, ரிப்போர்ட் வாங்க தான் வேலை மெனக்கெட்டு ஃபோன் செய்து வர சொன்னாங்க?”
“தப்பான நம்பர் கால் செய்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்...”
“என்ன டாக்டர் நீங்க, ரிப்போர்ட்டை கையில் எடுத்து பார்த்துட்டு தர மாடேங்குறீங்க? நீங்க சொல்றதைப் பார்த்தால் ஏதோ சினிமால சொல்றதுப் போல இன்னும் மூணு மாசம் தான் நீ உயிரோடு இருப்பன்னு சொல்வீங்க போல இருக்கே...”