“என்னப்பா நீ? இதில் என்ன தொல்லை? வாங்க சாப்பிடுங்க...” என்றாள் கமலா.
மறுக்க மனம் வராமல், “கட்டாயம் அத்தை! பாரதி தினமும் ஒரு தடவையாவது பவித்ரா சிஸ்டர் சமையல் பத்தி சொல்லாம இருக்க மாட்டா...” என்றான் விவேக்!
“நிஜமாவா சொல்றீங்க? ஏதோ நாங்க தான் வேற வழி இல்லைன்னு பொய் சொல்றோம்... பாரதி இன்னுமா அதையே ஃபாலோ செய்றா?” ரமேஷ் கேலியாக சொல்லவும்,
“டேய் சும்மா இருடா, பாவம் என் மருமகள்! வேலைக்கு போய்ட்டு வந்து உனக்காக பார்த்து, பார்த்து அவ சமையல் செய்துக் கொடுத்தா, ஏன் பேச மாட்ட நீ? ஒரு வாரம் அவ சமையல் செய்யாமல் இருந்தால் தான் அவளோட அருமை உனக்கு தெரியும்,” என்றாள் கமலா!
“பெண்கள் கூட்டணி முன் நான் தனி ஆள், என்ன செய்றது? சரண் அடைய வேண்டியது தான்... மன்னிச்சுக்கோங்க பவி மேடம்... நீங்க தான் எங்க தங்க தலைவி.... தயவு செய்து ஸ்ட்ரைக் எல்லாம் செய்யாதீங்க...”
ஒருவரை ஒருவர் காலை வாரும் அவர்களின் கேலியான பேச்சை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தப் போதும், அமைதியாக இருந்த மனைவியின் மீது தான் விவேக்கின் முழு கவனமும் இருந்தது!
'ரதி, நான் ஒரு மணி நேரம் லேட்டா வந்ததுக்கு உனக்கு இவ்வளவு வருத்தமா? நான் திரும்பி வர முடியாத இடத்துக்கு போயிட்டா நீ எப்படி தாங்கிப்ப?'
வெளியே இயல்பாக காட்டிக் கொண்டு, பேசியபடி சாப்பிட்டு விட்டு, அங்கிருந்து கிளம்பும் வரை, விவேக்கின் மனதில் இதே போன்ற எண்ணங்கள் தான் அலை மோதிக் கொண்டிருந்தன.
ரமேஷின் குடும்பத்திடம் விடைப் பெற்று காரில் கிளம்பி சிறிது தூரம் சென்றப் பின்னும் பாரதி எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள். அவன் இருந்த மன நிலையில், அவளின் மௌனத்தை கலைக்க விரும்பாது அமைதியாக காரை ஓட்டினான் விவேக்.