மீதியுள்ள நேரம்... அவனுடைய கனவு கம்பெனி கனவாகவே தான் முடிய போகிறதா? நல்ல மகனாய், சகோதரனாய், கணவனாய் அவன் செய்ய வேண்டிய கடமைகள் எத்தனையோ மீதி இருக்கிறது... ஏன், அவன் ஆசைப்பட்ட படி ஒரு நல்ல தகப்பனாய், இல்லை, ஒரு தகப்பனாக கூட அவனுக்கு வாய்ப்பே இல்லை போலும்!
கடவுளே, ஏன் எனக்கு இப்படி ஒரு தண்டனை?
அவனுக்கு ஏதாவது நேர்ந்தால் அவனுடைய அம்மாவினால் தாங்கிக் கொள்ள முடியுமா? அப்பாவும், அண்ணனும் கூட அவன் மீது அதீத அன்பு வைத்திருக்கிறார்கள்... மூவரையுமே அவனுடைய முடிவு மிகவும் பாதிக்க தான் போகிறது... ஆனால் அப்பாவும், அண்ணனும் கொஞ்சம் மன பக்குவம் உள்ளவர்கள், அவர்களுக்கும் வருத்தம் இருக்கும் என்றாலும், அவர்களால் அம்மாவை தேற்ற முடியும்... இனி அண்ணனையே அம்மாவிற்கும் அப்பாவிற்கும் பக்க பலமாக இருக்க சொல்ல வேண்டும்...
மதுவின் திருமணத்தை அவன் பார்க்க வாய்ப்பிருக்க போவதில்லை... நிரஞ்சனிடம் மறைமுகமாகமாவது தங்கைக்கு ஏற்றவனுக்கு இருக்க வேண்டிய குணநலன்கள் என அவன் மனதில் நினைத்து வைத்திருப்பதை சொல்ல வேண்டும்...
ரதி! அவனுடைய பாரதி?
அவளுக்கு யார் எந்த விதத்தில் ஆறுதல் சொல்ல முடியும்? அவள் முதலில் சொன்னது போல் மூன்று வருடங்கள் காத்திருந்திருந்தால் இந்த பிரச்சனையே இல்லையே!!! அவளை திருமணம் செய்து, அவள் மனதில் இடம் பிடித்தது எல்லாம் இதற்காக தானா? முதல் நாள் பார்த்த பொழுது சீறிய பாரதியும், இப்போது விளையாட்டாக மக்கு என்று சொன்னதற்காக சிணுங்கிய பாரதியும், அவன் கண் முன் வந்தார்கள்... இப்போதெல்லாம் பாரதி அவனை சார்ந்திருக்க பழகி இருப்பது அவனுக்கு தெரிந்த விஷயம் தான்... அவள் மனதில் இருந்த 'யாரும் அற்றவள்' என்ற எண்ணத்தை மாற்ற அவன் செய்த முயற்சி எல்லாம் வீண் தானா? அவன் பொறுமையாக இருந்திருந்தால், பாரதியை அவனுடைய முடிவு பாதித்திருக்கவே செய்திருக்காது... பவித்ராவும், ரமேஷும் அவள் மனதை மாற்றி வேறு ஒரு நல்ல குடும்பத்தை அவளுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருப்பார்கள். இப்போது இந்த விஷயத்தை பாரதியிடம் எப்படி சொல்வது?